டாடா.. டாடாதான்யா.. மலிவு விலை காருல சூப்பரான திரையை கட்டாயாமாக்கிட்டாங்க! ஹூண்டாய்க்கு இனிதான் கஷ்ட காலம்!
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றாக பஞ்ச் இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். ரூ. 6 லட்சம் என்கிற குறைவான ஆரம்ப விலையில் இருந்து இந்த குட்டி கார் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த காரிலேயே டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்ட ஓர் அம்சத்தை கட்டாயமாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நவீன கால கார்கள் பலவற்றில் காணப்படும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் (Digital Instrument Cluster) காட்சியளிக்கின்றது. இந்த அம்சத்தையே டாடா மோட்டார்ஸ், அதன் பஞ்ச் கார் மாடலில் கட்டாயமாக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அதாவது, டாடா பஞ்சின் அனைத்து விதமான வேரியண்டுகளில் இதைக் கிடைக்கும் வகையில் வழி வகை செய்ய இருக்கின்றது. ஆகையால், ஆரம்ப நிலை வேரியண்டிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருப்பது கட்டாயமாகும். இந்த அம்சமானது ஆரம்ப நிலை தேர்வுகளில் 4 அங்குலத்தில் வழங்கப்பட இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை ரஷ்லேன் தளமும் அதன் சமீபத்திய செய்தின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. இதே அம்சமே இந்தியாவின் அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட டாடா நெக்ஸானின் ஆரம்ப நிலை தேர்வுகளிலும் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, டாடாவின் மற்ற தயாரிப்புகளான டியாகோ மற்றும் டிகோர் உள்ளிட்டவற்றின் உயர்நிலை தேர்வுகளிலும் இத்தகைய அம்சமே வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே மலிவு விலை கார் மாடலான பஞ்ச்-லும் இந்த அம்சம் கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த டிஜிட்டல் கருவி வாயிலாக பல்வேறு முக்கிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். வாகனத்தின் வேகம், ஃபூயவல் கேஜ், ட்ரிப் பற்றிய தகவல் என ஏகப்பட்ட தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும்.
ஆனால், டேக்கோ மீட்டர் போன்ற விபரங்களை இதில் பெற முடியாது. இந்த சிறப்பம்சம் சேர்ப்பின் காரணமாக பஞ்ச் காரின் விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றதா என்பது தெரியவில்லை. அதேவேளையில், மிக மிக குறைவான அளவில் அதன் விலையை டாடா ஏற்ற வாய்ப்புகள் இருக்கின்றன என்பது நாம் இங்குக் கவனிக்கத்தகுந்தது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பஞ்ச் மாடலின் அனைத்து வேரியண்டுகளிலும் இந்த 4 அங்குல டிஜிட்டல் திரையே வழங்கப்பட்டு இருக்கும். ஆனால், உயர்நிலை தேர்வான கிரியேட்டீவில் மட்டும் அது இடம் பெற்றிருக்காது. இந்த தேர்வில் சமீபத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கேஜ் கிளஸ்டரே வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த திரை டார்க் மீட்டர், ட்ரிப் மீட்டர், ஓடோ மீட்டர், இரவு நேர இலுமினேஷன் கன்ட்ரோல், சர்வீஸ் ரிமைண்டர், கியர் ரெகமென்டேஷன் மற்றும் ஸ்பீடு என ஏகப்பட்ட முக்கிய தகவல்களையும் வழங்கும் திறன் கொண்டது. டாடா பஞ்ச் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ப்யூர், அட்வென்சர், அக்காம்ப்ளிஷ்டு மற்றும் கிரியேட்டீவ் ஆகியவையே அவை ஆகும். இவற்றின் விலை ரூ. 5.99 லட்சம் தொடங்கி ரூ. 10.10 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. எஞ்சினை பொருத்த வரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த மோட்டார் 84 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதே எஞ்ஜினிலேயே சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. இந்த வசதிக் கொண்ட மோட்டார் அதிகபட்சமாக 76 பிஎச்பி மற்றும் 97 என்எம் டார்க்கை வெளியேற்றும். ஆமாங்க, பெட்ரோலைக் காட்டிலும் சற்று குறைவான திறனையே சிஎன்ஜியில் இயங்கும்போது இந்த மோட்டார் வெளியேற்றும்.
டிரான்ஸ்மிஷனைப் பொருத்த வரை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் சேர்த்து டாடா மோட்டார்ஸ் விரைவில் பஞ்ச் கார் மாடலில் எலெக்ட்ரிக் தேர்வையும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதன் அறிமுகம் வரும் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே இந்த காரை தீவிர சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்த டாடா தொடங்கிவிட்டது. ஆகையால், வெகு விரைவில் இதனை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. பஞ்ச் இவி விற்பனைக்கு வரும்பட்சத்தில் அதன் விலை ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் இருக்கும். ஆனால், இதன் துள்ளியமான விலை அறிமுகத்திற்கு பின்னரே தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் ஒன்றாக பஞ்ச் இருக்கின்றது. மலிவு விலை கார் என்பதாலும், அதிக பாதுகாப்பு வசதிகளைத் தாங்கிய கார் என்பதாலும் இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஹூண்டாயின் எக்ஸ்டர்-க்கு மிகப் பெரிய போட்டியாளானாக இந்த கார் இருக்கின்றது. இந்நிலையிலேயே இதற்கு கூடுதல் போட்டியை வழங்கும் விதமாக பஞ்ச் காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








