Tata Punch Fire Accident: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த டாடா பஞ்ச் கார்! விபத்திற்கான காரணம் என்ன?
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகும் டாடா பஞ்ச் எஸ்யூவி ஏஎம்டி கார் தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த செய்தியை வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிராபல் போர்டியா, இவர் கடந்த ஒர மாதத்திற்கு முன்பு டாடா நிறுவனத்தின் பஞ்ச் என்ற எஸ்யூவி ஏஎம்டி காரை சொந்தமாக வாங்கியிருந்தார். இந்த காரை அவர் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிச்செல்லும் போது காரின் பானட் பகுதியில் தீ பிடித்துள்ளது. இந்த தீயைப் பார்த்தும் அவர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கியுள்ளார்.

அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரும் கார் இருந்த நிலையில் அவர்களும் இறங்கியுள்ளனர். அவர்கள் இறங்கி சில நொடிகளில் அந்த கார் முழுவதும் நெருப்பு பரவியது. இதையடுத்து அவர் தனது செல்போனில் கார் தீப்பிடித்து எரிவதை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அவர்களிடம் இந்த காரின் உரிமையாளர் இந்த கார் தீவிபத்தில் சிக்கியது குறித்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். மேலும் இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த தீவிபத்து குறித்து காரின் உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் இவரது கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்து வெறும் எலும்புக் கூடாகத் தான் கார் கிரேன் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த புகைப்படங்கள் எல்லாம் நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது.
இந்த விபத்திற்கான காரணம் இது வரை வெளியாகவில்லை. விபத்திற்குப் பிறகு அதன் காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் மக்கள் மத்தியில் பிரபலமானதற்குக் காரணமே அதன் பில்டு குவாலிட்டி தான். பாதுகாப்பான காரை விரும்பும் மக்கள் இந்த காரை தான் தேர்வு செய்தனர்.

குலோபல் என்சிஏபி ரேட்டிங்கில் 5 ஸ்டார் பெற்ற குறைந்த விலை காரும் இது தான். இதற்கு முன்னரும் டாடா பஞ்ச் கார் விபத்தில் சிக்கியுள்ளது. ஆனால் அந்த விபத்துக்களின் காரின் தயாரிப்பு தரத்தினால் பெரும் விபத்தில் கூட பயணிக்குக் குறைவான அல்லது லேசான காயங்கள் தான் ஏற்பட்டது.
ஆனால் தற்போது டாடா பஞ்ச் கார் தீப்பிடித்து எரிந்ததாக வெளியான வீடியோ மற்றும் செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் எலெக்ட்ரிக்கல் குறைபாடா, அல்லது மெக்கானிக்கல் பிரச்சனையா என்ற விபரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது குறித்த அடுத்தடுத்து வரும் தகவல் பொறுத்திருந்து பார்ப்போம்.
டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன?: டாடா பஞ்ச் கார் தீ பிடித்து எரிந்தது துரதிருஷ்டவசமானது. இந்த கார் விபத்தில் சிக்கியதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் பல கார்கள் விற்பனையான நிலையில் இந்த ஒரு காரில் மட்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. இது ஏதாவது தயாரிப்பு குறைபாடா என்பதை ஆய்வு செய்து வேறு கார்களில் அதே பிரச்சனை இருந்தால் டாடா நிறுவனம் நேரடியாகத் தலையிட்டு இந்த பிரச்சனை உள்ள கார்களை உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரச்சனை சரி செய்து கொடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








