1.75 லட்சம் யூனிட் விற்பனை... உச்சகட்ட வரவேற்பில் பஞ்ச்! விலை இவ்ளோ கம்மியா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா?
டாடா பஞ்ச் கார் 1.75 லட்சம் யூனிட் விற்பனையை எட்டி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விற்பனைக்கு பின்னால் மறைந்திருக்கும் மிக முக்கியமான காரணத்தையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். விலை குறைவு என்கிற காரணத்தையும் தாண்டி பல காரணங்கள் இருக்கின்றன. வாருங்கள் அதுகுறித்து காணலாம்.
டாடா மோட்டார்ஸின் மிக மிக குறைவான விலைக் கொண்ட காராக பஞ்ச் இருக்கின்றது. இந்த காரே விற்பனையில் புதிய சாதனைப் படைத்திருப்பதாக தற்போது ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 1.75 லட்சத்திற்கும் அதிகமான யூனிட் பஞ்ச் கார்கள் விற்பனையாகி இருப்பதே ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த காரை டாடா நிறுவனம் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் களமிறக்கியது. இதற்குள்ளாகவே இந்த அளவு அதிக எண்ணிக்கையில் பஞ்ச் விற்பனையாகி இருக்கின்றது. இந்த அமோக வரவேற்பிற்கு பின்னால் பஞ்ச்-இன் மலிவு விலையே முக்கிய காரணகர்த்தாவாக இருக்கின்றது.
அதேவேளையில் இதுமட்டுமே பஞ்சின் அதீத வரவேற்பு முக்கிய காரணம் என்று கூறிவிட முடியாது. இன்னும் சில காரணங்களும் பஞ்சின் சூப்பரான வரவேற்பிற்கு பின்னால் இருக்கின்றன. அந்தவகையில் முதல் இடத்தில் பஞ்ச் காரின் பாதுகாப்பு திறன் உள்ளது. இந்த கார் ஐந்து ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனமாகும்.

மணிக்கு 64 கிமீ வேகத்தில் பஞ்ச் காரை ஓட வைத்து குளோபல் என்சிஏபி அமைப்பு மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த கிராஷ் டெஸ்ட்டின் வாயிலாகவே பஞ்ச் மிக மிக அதிக பாதுகாப்பான வாகனம் என்பது தெரிய வந்தது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு திறனில் 17.00க்கு 16.45 புள்ளிகளை பஞ்ச் பெற்றது.
இதேபோல், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49.00 புள்ளிகளுக்கு 40.89 புள்ளிகளை பெற்று அசத்தியது. இதன் விளைவாக ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பான கார் என்கிற மகுடத்தை குளோபல் என்சிஏபி பஞ்ச் காருக்கு சூட்டியது. இத்தகைய பாதுகாப்பு திறனை மிகக் குறைவான விலையிலேயே பஞ்ச் வழங்குகின்ற காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் யாரும் எதிர்பார்த்திராத வரவேற்பு பஞ்ச் காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இக்காரில் பாதுகாப்பிற்காக இரட்டை ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் ஸ்வே கன்ட்ரோல் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதுமட்டுமில்லைங்க, பஞ்சை அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட காராக டாடா வடிவமைத்திருக்கின்றது. குறிப்பாக, மலை பாதைகளைக்கூட எளிதில் கடக்கும் வாகனமாக பஞ்ச் இருக்கின்றது.
இதுதவிர தொழில்நுட்ப வசதிகள், பிரீமியம் தர அம்சங்கள் ஆகியவற்றையும் இந்த காரில் வாரி வாரி வழங்கி இருக்கின்றது, டாடா. இவையே பஞ்சிற்கு இந்திய சந்தையில் நல்ல ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. 7 அங்குல தொடுதிரை ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன் வழங்கி இருக்கின்றது.

இத்துடன், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கூடுதலாக, காரின் வெளிப்புறத்திற்கு கவர்ச்சிக்கு சேர்க்கும் விதமாக புரஜெக்டர் ரக ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், 16 இன்ச் அளவுள்ள டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி வால் பகுதி மின் விளக்கு, ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக ஏழு விதமான டூயல்-டோன் வண்ண தேர்வுகள் பஞ்ச் காரில் வழங்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









