Tata Car Price இவ்ளோ அதிகரிக்க போகுதா! என்ன நினைச்சுட்டு டாடா இதை பண்ணுதுனே தெரியலையே!
இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வெகு விரைவில் அதன் அனைத்து புதிய கார்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிறுவனம், நடப்பாண்டின் தொடக்கத்தை விலை உயர்வுடனேயே வரவேற்றது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்த நிலையிலேயே இப்போது மீண்டும் ஒரு முறை தன்னுடைய கார்களின் விலையை உயர்த்த டாடா திட்டமிட்டு இருக்கின்றது. 0.6 சதவீதம் வரை தன்னுடைய கார்களின் விலையை உயர்த்த இருக்கின்றது, டாடா மோட்டார்ஸ். இந்த புதிய விலை உயர்வு வரும் மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் ஒட்டுமொத்த வாகன காதலர்களையும் சோகத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சமீபத்தில்தான் புதிய மாசு உமிழ்வை காரணம் காட்டி டாடா அதன் கார் மாடல்கள் சிலவற்றின் விலையை உயர்த்தியிருந்தது. இந்த நிலையிலேயே மூன்றாவது முறையாக அது மீண்டும் விலை உயர்வை செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.
பிஎஸ்6 கட்டம் 2-ஐ காரணம் காட்டியே சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் விலை உயர்வை செய்தது. இதைக் காரணம் காட்டி டாடா மட்டுமின்றி இந்தியாவின் பிற வாகன உற்பத்தியாளர்களும் புதிய வாகனங்களின் விலையை உயர்த்தினர் என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி, கியா, ஹூண்டாய், எம்ஜி என அனைத்து நிறுவனங்களும் விலை உயர்வைச் செய்தன.

இப்போதைய நிலவரப்படி டாடா மோட்டார்ஸின்கீழ், டியாகோ, டியாகோ இவி, டிகோர், டிகோர் இவி, பஞ்ச், அல்ட்ராஸ், நெக்ஸான், நெக்ஸான் இவி, ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தின் விலையே 0.6 சதவீதம் வரை மே1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட இருக்கின்றது.
புதிய வாகனங்களின் கட்டுமான செலவு பலமடங்கு அதிகரித்து வருவதால், தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் செலவு பாரத்தைக் குறைக்கும் பொருட்டே இந்த விலை உயர்வை டாடா செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது முதலே புதிய வாகனங்களின் விலை இமாலய அளவில் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது.

ஆரம்பத்தில் வாகன உற்பத்தி பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் டிரான்ஸ்போர்ட் ஆகியவற்றால் விலை உயர்வு செய்யப்பட்டு வந்தன. இப்போதும் சில முக்கிய பாகங்களின் தட்டுப்பாடு அதிகளவில் காணப்படுகின்றது. இதன் விளைவாகவும், இரும்பு மற்றும் பிற உலோக பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்துக் கொண்டு வருவதும் வாகனங்களின் விலையை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளன.
இதற்கு சான்றாகவே டாடா மோட்டார்ஸின் புதிய விலை உயர்வு அறிவிப்பு அமைந்து உள்ளது. டாடாவை போலவே அடுத்தடுத்து வேறு சில வாகன உற்பத்தி நிறுவனங்களும் விலை உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான தொடக்க புள்ளியையே டாடா தற்போது தொடங்கி வைத்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சமீப சில காலமாக நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே விலை உயர்வை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது, டாடா. இதன் விளைவாக எதிர்காலத்தில் டாடா வாகனங்களின் விற்பனை லேசாக பாதிக்குலாம் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









