எலெக்ட்ரிக் அவதாரத்தில் வருகிறது டாடா சியாரா! மறக்கவே முடியாத காருக்கு மீண்டும் உயிர் கொடுக்க போறாங்க!
இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழாவாக கருதப்படுவது ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) ஆகும். இந்த சூழலில், 2023 ஆட்டோ எக்ஸ்போ பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (ஜனவரி 11) தொடங்கியது. காலையில் இருந்து மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai) உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி கெத்து காட்டி வந்தன.
ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால் 550 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க கூடிய இவிஎக்ஸ் (EVX) என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) கான்செப்ட் மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் இன்று காலை காட்சிப்படுத்தியது. அதே நேரத்தில் ஹூண்டாய் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் (Hyundai Ioniq 5 EV) விலைகளை அறிவித்தது.

ஆட்டத்தை ஆரம்பித்த டாடா!
இந்த சூழலில், மாலை நெருங்க நெருங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா சியாரா எலெக்ட்ரிக் கார் (Tata Sierra EV) மற்றும் டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் கார் (Tata Harrier EV) ஆகிய மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி, போட்டி நிறுவனங்களை கலங்கடித்துள்ளது. இந்த 2 கார்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகமே தேவையில்லை. இவை இரண்டுமே எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்கள்தான்.
இதில், டாடா சியாரா காரை நீங்கள் திரைப்படங்களில் அடிக்கடி பார்த்திருக்க கூடும். ஆனால் இந்திய சாலைகளில் இந்த காரை பார்ப்பது தற்போது மிகவும் அரிதான விஷயமாகும். ஏனெனில் கடந்த 1991ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாடா சியாரா காரின் உற்பத்தி, கடந்த 2003ம் ஆண்டே நிறுத்தப்பட்டு விட்டது. இந்த சூழலில், கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியாரா எலெக்ட்ரிக் காரை காட்சிக்கு வைத்திருந்தது. இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு முறை ஆட்டோ எக்ஸ்போவில் டாடா சியாரா காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சியாரா காரை எலெக்ட்ரிக் அவதாரத்தில் விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட தயாராகி விட்டது என்பதையே இது உணர்த்துகிறது. மறுபக்கம் டாடா ஹாரியர் காரானது, தற்போது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் கார்களில் ஒன்றாக ஹாரியர் திகழ்கிறது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது காட்சிப்படுத்தியுள்ளது.
ரேஞ்ச்!
ஆனால் டாடா சியாரா எலெக்ட்ரிக் கார் மற்றும் டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் கார் ஆகியவற்றின் தொழில்நுட்ப விபரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. எனினும் இவை இரண்டும் உருவத்தில் பெரிய கார்கள் என்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் பொருத்தப்பட்டிருப்பதை விட, பெரிய பேட்டரி தொகுப்பு பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முறை முழுமையாக நிரப்பினால், சுமார் 500 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய கூடிய வகையிலான பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம்.

முதலிடத்தை தக்க வைக்க அதிரடி திட்டம்!
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முதலிடத்தில் உள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார், டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ஆகியவை இதற்கு காரணமாக உள்ளன. இந்த முதலிடத்தை தக்க வைத்து கொள்வதற்காக, எதிர்காலத்தில் நிறைய எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
அதன் முன்னோட்டமாகவே தற்போது டாடா சியாரா எலெக்ட்ரிக் கார் மற்றும் டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் கார் ஆகிய மாடல்கள் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரும்பட்சத்தில், எதிர்காலத்திலும் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகும். இதற்கெல்லாம் முன்னதாக நடப்பு 2023ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் எலெக்ட்ரிக் காரை (Tata Punch EV) விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








