டாடாவிற்கு ஜாக்பாட்! 25 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்! மொத்தமா வாங்கி போட்றாங்க
இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையின் முடிசூடா மன்னன் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் பெற்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களை வாங்க தனி நபர்களுடன், பல்வேறு நிறுவனங்களும் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகப்பெரிய ஆர்டர்களை தன்வசப்படுத்தி வருகிறது.
இந்த வரிசையில் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையிலான ஆர்டர் ஒன்றை டாடா மோட்டார்ஸ் வென்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வென்றிருப்பது உபேர் (Uber) நிறுவனத்தின் ஆர்டர் ஆகும். இது எவ்வளவு பெரிய ஆர்டர்? என்று தெரிந்தால், நீங்கள் கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள். மொத்தம் 25 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களுக்கு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் உபேர் நிறுவனம் ஆர்டர் கொடுத்துள்ளது. இவை அனைத்தும் டாடா எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் கார்களுக்கான (Tata Xpres-T EV) ஆர்டர்கள் ஆகும்.

டாடா எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு தயாரிப்பு ஆகும். பிரத்யேகமாக ஃப்ளீட் ஆபரேட்டர்களுக்கு மட்டுமே டாடா எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கால் டாக்ஸி போன்ற நிறுவனங்களை நடத்தி வருபவர்கள்தான் ஃப்ளீட் ஆபரேட்டர்கள் எனப்படுகின்றனர்.
டாடா எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 25.5 kWh மற்றும் 26 kWh பேட்டரிகள் ஆகும். இதில், 25.5 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 277 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் 26 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 315 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (Range) ஆகும்.

ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் இந்த பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு 59 நிமிடங்கள் ஆகும். ஆனால் 15A சார்ஜர் இதை செய்வதற்கு 110 நிமிடங்களை எடுத்து கொள்ளும். 25 ஆயிரம் கார்களுக்கான ஆர்டர் என்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் படிப்படியாகதான் டெலிவரி செய்யவுள்ளது. ஆனால் நடப்பு பிப்ரவரி மாதத்தில் இருந்தே உபேர் நிறுவனத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்ய தொடங்கி விடும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding - MoU) தற்போது அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகி விட்டது. உபேர் நிறுவனத்தின் பிரீமியம் வகை சேவையில், இந்த எலெக்ட்ரிக் கார்கள் சேர்க்கப்படவுள்ளன. உபேர் இந்தியா நிறுவனம் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகதான் தற்போது 25 ஆயிரம் டாடா எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் கார்களுக்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, பெங்களூர், ஐதராபாத், டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், மும்பை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் என இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் உபேர் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார்கள் சேவைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. ஃப்ளீட் ஆபரேட்டர்களுக்கு என பிரத்யேகமாக எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், பயணிகள் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 3 தயாரிப்புகளை களத்தில் வைத்துள்ளது.
அவை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV), டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV) ஆகியவை ஆகும். இதில், டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தைக்கு புதுவரவு ஆகும். அதன் டெலிவரி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளன. எதிர்காலத்தில் இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.


Click it and Unblock the Notifications








