வீட்டுக்குகூட பயன்படுத்திக்கலாம்போல... செம்ம அழகா இருக்கு! டாடாவின் யோதா சிஎன்ஜி பிக்-அப் ட்ரக் வெளியீடு!
டாடா மோட்டார்ஸ் அதன் யோதா சிஎன்ஜி பிக்-அப் ட்ரக்கை இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தியது. இந்த வாகனம் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
டாடா மோட்டார்ஸ் அதன் சிஎன்ஜியால் இயங்கும் யோதா வாகன மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 இன் வாயிலாக நாட்டில் வெளியீடு செய்துள்ளது. யோதா ஓர் பிக்-அப் ட்ரக் ரக வாகனமாகும். வழக்கமான பிக்-அப் ட்ரக்குகளைப் போல் இல்லாமல், இது முழுக்க முழுக்க சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனமாக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூப்பரான வாகனத்தையே சிஎன்ஜி வெர்ஷனில் டாடா மோட்டார்ஸ் வெளியீடு செய்திருக்கின்றது.

இந்த வாகனத்தை மட்டுமின்றி இன்னும் சில தனது வாகன மாடல்களையும் சிஎன்ஜி வெர்ஷனில் வெளியீடு செய்துள்ளது, டாடா மோட்டார்ஸ். அந்தவகையில், இன்ட்ரா வி50 மற்றும் இன்ட்ரா வி20 ஆகிய சிஎன்ஜி மினி லோடு வேன்களையே டாடா மோட்டார்ஸ் இந்தியா ஆட்டோ எக்ஸ்போவில் சிஎன்ஜியாக காட்சிப்படுத்தியது. ஆனால், இவை இரண்டைக் காட்டிலும் யோதா 2.0 பிக்-அப் ட்ரக் மீதே பலரின் கவனம் திரும்பி இருக்கின்றது.
2.0 என்பது, யோதாவை டாடா மோட்டார்ஸ் புதிய தலைமுறை வெர்ஷனாக விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் யோதா கடந்த 15 ஆண்டுகளாக விற்பனையில் இருக்கின்றது. நெடுங்காலமாக ஒரே டிசைனில் இது இருப்பதை மாற்றும் விதமாக யோதாவின் 2.0 டாடா மோட்டார்ஸ் தற்போது உருவாக்கி, அதனை தற்போது வெளியீடும் செய்திருக்கின்றது. பல்வேறு மாற்றங்களை புதிய யோதாவில் டாடா மோட்டார்ஸ் செய்திருக்கின்றது.

குறிப்பாக, முன்பக்க கிரில்லில் பல்வேறு மாற்றங்களை அது செய்திருக்கின்றது. குரோமிலான ஓர் பட்டைப் போன்ற துண்டும், கருப்பு நிற க்ரில்லுமே முன் பக்கத்தில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, முன்பைக் காட்டிலும் ஹெட்லைட்டின் சற்று லேசாக குறைக்கப்பட்டு இருக்கின்றது. அதேநேரத்தில் லைட் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் ஃபெண்டர் சற்று பெரிதாக உள்ளது. இது அதிக தசைப் பற்றுக் கொண்ட வாகனமாக யோதாவை மாற்றி இருக்கின்றது.
இதன் அழகிய தோற்றம் பர்சனல் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தும் வகையில் இருக்கின்றது. அந்தளவிற்கு கவர்ச்சியான வாகனமாக யோதா வர்த்தக வாகனத்தை டாடா உருவாக்கி இருக்கின்றது. இவற்றுடன், முதல் முறையாக இந்த வாகனத்தில் எல்இடி டிஆர்எல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், பனி மின் விளக்கும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. யோதா 2.0 சிஎன்ஜி பிக்-அப் ட்ரக்கில் 2.2 லிட்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா மோட்டார்ஸ் இந்த வாகனத்தை பன்முக தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, பன்முக லோடிங் வசதிக் கொண்ட தேர்வாக இது வழங்கப்பட இருக்கின்றது. சிங்கிள் கேப் மற்றும் க்ரியூ கேப் ஆகிய தேர்வுகளிலேயே இந்த வாகனம் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் விலை பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலும், இது எப்போது விற்பனைக்கு வரும் என்கிற தகவலையும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
புதிய யோதா 2.0 இன்டிபென்டன்ட் ஃப்ரண்ட் சஸ்பென்ஷன் தேர்வு மற்றும் 4X4 டிரைவிங் சிஸ்டம் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 2.0 டன் எடையுள்ள பொருட்களைக் கூட யோதாவில் எடுத்துச் செல்ல முடியும். ஆகையால், இது வர்த்தக பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துபவருக்கு மிக அதிக லாபத்தை தரும் என யூகிக்க முடிகின்றது. குறிப்பாக, பெட்ரோல், டீசலுக்கு செலவாகும் காசையும் சிஎன்ஜி மிச்சப்படுத்த உதவும்.
இதன் கேபின் பகுதி வழக்கமான ஹேட்ச்பேக் காருக்கு இணையானதாக இருக்கும். எனவே, டிரைவருடன் சேர்த்து இன்னும் சிலரும் சொகுசாக இந்த வாகனத்தில் பயணித்துக் கொள்ள முடியும். டாடா மோட்டார்ஸ் ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துக் கொண்டவர்களைக் கவரும் விதமாக தனது பிரபல கார் மாடல்களின் சிஎன்ஜி வெர்ஷனையும் காட்சிப்படுத்தியது. அந்தவகையில் தனது மலிவு விலை கார் மாடலான பஞ்ச் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார் மாடல்களையே சிஎன்ஜி வெர்ஷனில் டாடா காட்சிப்படுத்தியது. இவை இரண்டையும் நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், அது எப்போது என்கிற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








