அவசர அவசரமாக இந்தியாவிற்கு விசிட் கொடுத்த எலான் மஸ்கின் ஆட்கள்.. எதற்கு இந்த திடீர் படையெடுப்பு தெரியுமா?
டெஸ்லா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இந்தியாவின் முக்கிய அதிகாரிகளை சந்திக்க நாட்டிற்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பு எதற்காக, இதன் வாயிலாக இந்தியாவில் நடைபெற இருக்கின்றது என்பது பற்றிய முழு விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலக புகழ்பெற்ற மின் வாகன உற்பத்தி நிறுவனம் டெஸ்லா இன்க் (Tesla inc). இந்த நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளே இந்தியாவின் முக்கி அதிகாரிகளை சந்திக்க இன்று வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெஸ்லா இந்தியா நுழைவை முன்னிட்டே இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

உலக பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமானதே இந்த டெஸ்லா நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதிப்பதற்கான முயற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றது. ஆனால் அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததாக தெரியவில்லை. இதன் விளைவாகவே நிறுவனத்தின் இந்திய வருகை வெறும் கனவாகவே இருக்கின்றது.
இந்தியாவில் இறக்குமதி செய்தே வாகனங்களை விற்க டெஸ்லா திட்டமிட்டு இருக்கின்றது. இதற்காக அரசிடம் இறக்குமதி வரியை குறைக்குமாறு டெஸ்லா கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், அரசோ வரியை குறைக்க வாய்ப்பே இல்லை என்பதை போல செயல்பட்டு வருகின்றது. ஏற்கனவே டெஸ்லாவின இந்த கோரிக்கை திட்டவட்டமாக இந்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதனால் முந்தைய பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. மேலும், அதன் வருகையை டெஸ்லா கிடப்பில் போட்டது. இதன் விளைவாகவே டெஸ்லாவின் கால் தடம் இந்தியாவில் இப்போது வரை பதியப்படாமலேயே இருக்கின்றது. இந்த நிலையிலேயே நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இந்தியா விரைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த சந்திப்பில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டிருக்கும் என நம்பப்படுகின்றது. ஒருவேளை அரசிடம் இருந்து டெஸ்லாவிற்கு அனுமதி கிடைத்திருக்கும் எனில் அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களிலேயே நிறுவனத்தின் முன்னணி எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கிவிடும். நிறுவனத்தின் ஒற்றை கார் மாடல்கூட அதிகாரப்பூர்வமாக இப்போது வரை விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.

இருப்பினும், அம்பானி போன்ற சில முன்னணி தொழிலதிபர்கள் டெஸ்லா எலெக்ட்ரிக் காரை பிரத்யேகமாக இந்தியாவில் எக்ஸ்போர்ட் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தாங்கள் வாங்கிய ஓர் காரின் விலையில் பெரும் பகுதியை அரசுக்கு வரியாக செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய நிலைப்பாட்டிற்கே எதிர்ப்பு தெரிவித்து வரியை குறைக்குமாறு டெஸ்லா நீண்ட காலமாக இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றது. ஆனால், இந்திய அரசு வரியை குறைக்க மாட்டோம் என்பதில் அதிக உறுதியாக இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி, 40,000 அமெரிக்க டாலர்களுக்கு குறைவான மதிப்புக் கொண்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு இறக்குமதி வரியாக 60 சதவீதம் வசூல் செய்யப்படுகின்றது.
அதுவே, 40,000 அமெரிக்க டாலர்கள் அதிக விலையைக் கொண்ட அந்த வாகனம் இருக்கும் எனில் 100 சதவீதம் வரி வசூலிக்கப்படும். ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களுக்கும் இதே நிலைதான் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் விளைவாக டெஸ்லா நிறுவனத்துடன் இன்னும் சில நிறுவனங்களும் இந்திய அரசிடம் இறக்குமதி வரியை குறைக்குமாறு கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக அளவில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலும் இந்த காருக்கு எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனால், இந்திய அரசின் அதிக வரி விதிப்பின் காரணத்தினால் அந்த நிறுவனத்தால் கால் தடம் பதிக்க முடியாத நிலை தென்படுகின்றது. விரைவில் இந்த நிலையில் நல்ல தீர்வு எட்டப்படும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









