சென்னையில் டெஸ்லா ஆலை அமைய வாய்ப்பு! பச்சை கொடி காட்டிய மத்திய அரசு!
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது ஆலையை அமைத்து கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவது தற்போது உறுதியாகி உள்ளது. அதன்படி நாம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாக இந்நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை துவங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தற்போதைய அப்டேட் தகவல்களை கீழே காணலாம் வாருங்கள்.
டெஸ்லா நிறுவனம் உலக அளவில் மிக பெரிய கார் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்களை உலக மக்கள் எல்லாம் விரும்பி வாங்கி வருகின்றனர். ஏராளமான மக்கள் டெஸ்லா தானியங்கி காரை பயன்படுத்த ஆர்வமாக இருக்கின்றனர். தற்போது இந்தியாவில் டெஸ்லா கார்கள் நேரடியாக விற்பனையில் இல்லை. வெளிநாட்டில் வாங்கப்பட்ட கார்களை தான் இந்தியாவில் இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

அதுவும் டெஸ்லாக் கார்களில் இந்தியாவில் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் அம்சங்கள் இல்லை என்பதால் இந்த காரை இந்தியாவில் வாங்கி பயன்படுத்துவது என்பது முடியாத காரியமாக இருக்கிறது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது ஆலையை அமைத்து கார்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இதற்கு முன்னர் டெஸ்லா நிறுவனம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை இந்தியாவில் இறக்குமதி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அப்படியாக இந்தியாவில் கார்களை இறக்குமதி செய்ய வரிக்குறைப்பு எதுவும் செய்ய முடியாது என மத்திய அரசு சொன்னதால் தற்போது இந்தியாவிலேயே கார்களை தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தை கடந்து சில மாதங்களுக்கு முன்னர் துவங்கிய நிலையில் தற்போது இது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. அதன்படி டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது ஆலையை அமைக்க இடத்தை தேர்வு செய்து விட்டதாகவே தெரிகிறது. ஆனால் எந்த இடம் என்ற தகவல் இதுவரை டெஸ்லா நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்த தகவல் மிக ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.
ஆனால் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் டெஸ்லா நிறுவனம் தனது ஆலையை அமைத்து அந்த ஆலையை வரும் 2024-ம் ஆண்டு செயல்பாட்டிற்கு கொண்டு வந்து விடும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மத்திய அரசு இதற்கான அனுமதி மற்றும் உதவிகளை செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதையும் டெஸ்லா நிறுவனம் வெளியிடவில்லை. அதே நேரம் மத்திய அரசிடம் இருந்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

வரும் ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை குஜராத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான இறுதி கட்டப் பணிகள் துவங்க உள்ளது.
அதன்படி டெஸ்லா நிறுவனம் தனது ஆலையை அமைக்க மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை தேர்வு செய்துள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளன. இந்த இதில் எந்த மாநிலத்தை இது செய்து டெஸ்லா நிறுவனம் தனது ஆலையை அமைக்கும் என்ற முடிவு ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் தெரியவரும்.

பெரும்பாலும் தமிழகத்திற்கு இந்த ஆலை வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. சென்னை பகுதியில் இந்த ஆலை அமைக்கப்பட்டால் அங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்ய வசதியாக இருக்கும் என்பதால் டெஸ்லா நிறுவனம் சென்னையை தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளது.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது ஆலையை அமைத்தவுடன் முதல் காராக தனது மாடல் 3 காரை தான் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் தற்போது சர்வதேச மார்க்கெட்டில் 39,990 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 30 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த காரை தற்போது இந்தியாவில் இருந்து ஒருவர் வாங்க வேண்டும் என்றால் ரூபாய் 70 முதல் 80 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியது வரும். ஆனால் இந்த கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் ரூ 30 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவது என்பது ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி விடும். இந்தியா தற்போது உலக அளவில் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இருக்கிறது. டெஸ்லா நிறுவனம் இங்கு வரும் பட்சத்தில் இந்தியாவிற்கு ஏற்ற தானியங்கி கார்கள் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் அதன் விற்பனை துவங்கும். இது ஆட்டோமொபைல் துறையே புரட்டிப் போடும் விஷயமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









