மழை காலத்துல ஜாலியா டிராவல் செய்யனுமா?.. இத ஃபாலோ பண்ணுங்க உங்கள எப்பேர்பட்ட வெள்ளத்தாலும் தடுக்க முடியாது!
மழை காலத்துல டிரைவ் பண்றதே ஒரு தனி அழகுங்க. குறிப்பாக, அந்த நேரத்துல பசுமை நிறைந்த வனம் அல்லது மலை பகுதியில் பயணித்தால் அப்போது கிடைக்கக் கூடிய புத்துணர்வும், புதுமையான அனுபவமும் வேறு எங்கேயும், எப்பவும் கிடைக்காது. அந்த அளவு மிக சிறந்த டிராவல் அனுபவம் மழை காலத்தின்போது கிடைக்கும்.
அதேநேரத்தில், மழைக் காலத்தில் டிராவல் செய்வது என்பது மிகுந்த ஆபத்தான ஒன்றாகும். மழைக் காலத்தில் சாலைகளில் எங்கு பள்ளம்-மேடு இருக்கின்றது என்பதே தெரியாது. குறிப்பாக, மழை நீர் நிறைந்த சாலைகளில் பயணிக்கும்போது எப்போது வண்டி பிரேக் டவுன் ஆகும் என்பதும் தெரியாது.

இதுதவிர வெள்ள நீரால் வாகனம் மிக மோசமான பாதிப்புகளுக்கும் ஆளாகும். எனவேதான், கன மழையின்போது டிராவலை தவிர்த்துவிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றது. மிக முக்கியமாக மழைக் காலத்தில் பயணிக்கும்போது தெளிவான பார்வையைப் பெறுவதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படும். இதனால் கடந்த காலங்களில் பல்வேறு விபத்துகள் அரங்கேறி இருக்கின்றன.
இதைத்தவிர்க்க ஒரு சில வழிமுறைகள் உள்ளன. அவை என்ன என்பதையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். ஒரு சில செயல்களைச் செய்வதன் வாயிலாக மழைக் காலத்தில் ஏற்படும் மங்களான தெரிவுநிலையை நம்மில் போக்கிக் கொள்ள முடியும். அந்த செயல்கள் என்ன என்பதையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பார்க்கலாம், வாங்க.

மழை லேசானதோ அல்லது கன மழையோ எதுவாக இருந்தாலும் விண்ட்ஷீல்டில் வந்து விழும் மழைத் துளிகள் கட்டாயம் ஓட்டுநர் தெளிவாக சாலையைப் பார்ப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். இதுதவிர பக்கவாட்டில் உள்ளன ஜன்னல் கண்ணாடிகள் வாயிலாக சாலையைப் பார்ப்பதும் சிரமமாக இருக்கும். ஆகையால், திறம்பட செயல்படுவது அங்கு தடுக்கப்படும்.
இருட்டில் தொலைத்த பொருளை தடவி தடவி தேடுவதைப் போலவே இந்தமாதிரியான சமயங்களில் டிராவல் செய்ய நேரிடும். இந்த மாதிரியான சூழலைத் தவிர்க்க முன் பக்கத்தில் வைப்பரை பயன்படுத்தலாம். வைப்பர் கொஞ்சம் புதிதாக இருந்தால் மிக நல்லது. ஆகையால், மழைக் காலத்திற்கு முன்னரே உங்கள் காரின் வைப்பர் சரியாக வேலை செய்கிறதா என்பதை ஒரு முறை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில், தற்போது சந்தையில் கண்ணாடிகளில் தண்ணீர் ஒட்டுவதைத் தவிர்க்கக் கூடிய ரசாயனங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதனைப் பயன்படுத்தும்போது நம்முடைய வாகனங்களில் வைப்பரை பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியமே இருக்காது. விண்ட்ஷீல்டில் வந்து விழும் ஒரு துளிகூட அதன்மீது தங்காது. தாமரை இலையில் விழும் நீரைபோல அனைத்தும் வழிந்தோடும்.
அதே நேரத்தில், வைப்பரை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமலேயே இருக்கக் கூடாது. இதன் காரணத்தினாலேயே விரைவில் வைப்பர்கள் பழுதாகின்றன. ஆகையால், அவ்வப்போது வைப்பரை பயன்படுத்தி அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்கச் செய்யலாம். ஒரு வேளை வைப்பரை மாற்ற விரும்பினால் தரமானதாகவும், பிராண்டட் வைப்பரையும் பயன்படுத்தலாம்.

விண்டோக்களை எப்படி டிஃபாக் செய்வது? மழைக் காலத்தில் பயணிக்கும்போது அனைவரும் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னையாக டிஃபாக் இருக்கின்றது. அதாவது, காரின் உட்பக்கத்தில் உள்ள கண்ணாடிகளில் பனிபடரும் பிரச்னை ஏற்படும். வெளிப்புறம் குளிர்ச்சியாகவும், உட் பக்கம் சற்று உஷ்னமாக இருந்தால் இந்த சிக்கல் ஏற்படும்.
நாம் விடும் மூச்சு காற்று பனியாக கண்ணாடிகளில் படரும். இது நம்முடைய தெரிவுநிலையை பாதிக்கச் செய்யும். இதைத் தவிர்ப்பதற்கு இப்போதைய நவீன கார்களில் டிஃபாகிங் வசதி வழங்கப்படுகின்றது. இந்த பட்டனை தட்டினால் அது காரின் கண்ணாடிகளில் படர்ந்திருக்கும் பனிகளை போக்கிவிடும். இந்த சிஸ்டம் தற்போது வெளிப்புற சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதைத் தனியாக வாங்கி பொருத்திக் கொள்ள முடியும். இதுதவிர காரின் ஜன்னல் கண்ணாடிகளை லேசாக திறந்து வைக்கலாம். இதனால் காருக்குள் இருக்கும் காற்று சுழற்சி செய்யப்பட்டு டிஃபாக் ஆகும். அதேநேரத்தில் குறைவான அளவில் காரின் ஏசியை பயன்படுத்துவதாலும் டிஃபாக் செய்து கொள்ள முடியும்.
ஆனால், வெளியிலும் குளிர், உள்ளேயும் குளிர் என்பதை பெரும்பாலும் மழைக் காலத்தில் யாரும் விரும்ப மாட்டார்கள். ஆகையால், முதலில் கூறிய விஷயங்களை நீங்கள் பன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஆன்டி ஃபாக் கிரீம் மற்றும் கெமிக்கல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் வாயிலாக நீர் துளிகள் தேங்குவதை முழுமையாக தவிர்க்க முடியும்.

ஹெட்லைட்டுகளை பகல்நேரத்திலும் ஒளிர விடலாம்: மழை காலத்தில் ஏற்படும் தெரிவு நிலை சிக்கலை தவிர்க்க ஹெட்லைட்டுகளை ஒளிர செய்துக் கொள்ளலாம். ஆனால், நாம் பயன்படுத்தும் ஹெட்லைட் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு எந்த நேரத்திலும் சிக்கலை ஏற்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆகையால், எதிரில் வருபவர்கள் அவர்களுடைய ஹெட்லைட்டுகளை பாஸ் செய்து காண்பித்தால் உங்கள் காரின் ஹெட்லைட்டை அதற்கேற்பவாறு ஆன்-ஆஃப் செய்து உதவிட வேண்டும். இதுதவிர, உங்கள் வாகனம் வருவதை பிற வாகனங்கள் அறிந்துக் கொள்ள இன்டிகேட்டர்களை தொடர்ச்சியாக பிளிங்க் செய்ய வேண்டும். இதனால் விபத்துகளை கட்டாயம் தவிர்க்க முடியும். மேலும், எதிரில் வருவது என்ன மாதிரியான வாகனம் என்பதை அறிந்துக் கொள்ளவும் இது உதவுகின்றது.

ஓவர்டேக் மற்றும் திடீர் லேன் மாற்றங்களை செய்ய வேண்டாம்: திடீர் என லேனை மாற்றுவது மற்றும் ஓவர்டேக் செய்வதை மழைக்காலத்தில் ஒருபோதும் செய்யக் கூடாது. ஏனெனில், இது நமக்கு பின்னால் மற்றும் எதிரில் வருபவர்களை ஆபத்தில் சிக்க வைத்துவிடும். அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் அது ஆபத்தாக மாறிவிடும்.
ஆகையால், சிக்னல் செய்துவிட்டு அதன் பின்னர் லேனை மாற்றிக் கொள்ளுங்கள். மேலும், ஈரமான சாலையில் போதிய கிரிப் கிடைக்காது என்பதால் ஓவர்டேக் செய்யும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அப்படி என்றால் மட்டுமே மிகுந்த பாதுகாப்பான பயணத்தை நம்மால் பெற முடியும்.
அதிக வேகம் மற்றும் மழை நீர் நிறைந்த சாலையில் கூடுதல் கவனம் தேவை: ஈரமான சாலை அதி-வேக பயணத்திற்கு உகந்ததல்ல. போதிய கிரிப் டயர்களுக்கு கிடைக்காது என்பதாலும், சாலை கூடுதல் வழு-வழுப்பானதாக இருக்கும் என்பதாலும் அது அதிக ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே மிதமான வேகத்தில் உங்கள் பயணத்தை தொடர்வதே நல்லது.
அதேவேளையில், அதிக நீர் தேங்கி இருக்கும் எனில் அந்த பாதையை தவிர்த்துவிடுவதும் நல்லது. மழைக் காலத்தில் ஒரு சில இடங்களில் திடீரென பள்ளம் தோன்றி இருப்பதை செய்தியிலும், சமூக ஊடகங்களிலும் நாம் பார்த்திருப்போம். இந்த ஆபத்தான சூழலைத் தவிர்க்கவே மழை நீர் நிறைந்த சாலை வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் டிப்ஸ்: மழைக் காலத்தில் பயணத்தைத் தொடர்வதற்கு முன்னர் உங்கள் காரின் டயர்கள் சிறந்த நிலையில் இருக்கின்றதா?, பிரேக் மிக சிறப்பாக வேலை செய்கிறதா?, தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் டூல்ஸ்கள் இருக்கின்றதா? என்பதை பார்த்துவிட்டு உங்கள் பயணத்தைத் தொடர்வது மிக சிறந்த யுக்தி ஆகும்.


Click it and Unblock the Notifications









