தமிழ்நாடு அரசு பஸ்களில் பாதி விலையில் டிக்கெட்! எப்படி வாங்கணும் தெரியுமா?
தமிழக அரசு விரைவு பேருந்துகளில் ஒரே மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது அடிக்கடி வெளியூர் செல்லும் பயணிகளுக்கு இந்த சலுகை மிகப்பெரிய பலனைத் தரும் எனக் கூறுபடுகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
தமிழகத்தில் 300 கி.மீ தூரத்திற்கு அதிகமான வழித்தடங்களில் தமிழக விரைவு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் பேருந்துகள் இயங்கப்பட்டு வருகின்றன. மிதவைப் பேருந்து, இருக்கை பேருந்து, படுக்கை வசதி கொண்ட பேருந்து, குளிர் சாதன வசதி கொண்ட பேருந்து ஆகிய வகையில் மொத்தம் 1078 பேருந்துகள் விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 251 வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் போக்குவரத்துத் துறை மானியக்கோரிக்கையின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் மாதம் 5 முறைக்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த திட்டம் தற்போது நடை முறைக்கு வந்துள்ளது.
இந்த திட்டத்திற்காக TNSTC தளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பஸ்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் மாதம் 5 முறைக்கு மேல் புக் செய்து பயணம் செய்தால் 6வது முறையிலிருந்து புக் செய்யும் போது அவர்களுக்குப் பயண கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

உதாரணமாக ஒருவர் சென்னையிலிருந்து வாரம் வாரம் திருநெல்வேலி செல்கிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் புக் செய்யும் முதல் 5 டிக்கெட்டிற்கு முழு பணத்தைச் செலுத்த வேண்டும். அதன் 6வது டிக்கெட்டிலிருந்து அவர் எத்தனை டிக்கெட் எடுத்தாலும், அவருக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். பாதி கட்டணத்திலேயே அவர் பயணத்தைச் செய்ய முடியும்.
இது ஒரு தனி நபருக்கு மட்டுமே பொருந்தும் 5 முறை தனி நபராக வந்துவிட்டு 6வது முறை குடும்பத்துடன் வரும் போது அவருக்கு இந்த சலுகையை குடும்பத்தினருக்கும் கேட்டுப் பெற முடியாது. அதே நேரம் 5 முறையும் ஒரே பெயரில் அவர் பயணித்திருக்க வேண்டும். வேறு வேறு பெயரில் பயணித்துவிட்டு 6வது முறை சலுகை வேண்டும் எனக் கோர முடியாது. அதே நேரம் குடும்பமாக ஒரே மாதத்தில் 5 முறை பயணித்திருந்தால் 6வது முறை பயண கட்டணத்தில் சலுகை குடும்பத்தில் 5 முறை பயணித்த அனைவருக்கும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை தொடர்ந்து அரசு பஸ் சேவைகளை மக்களைப் பயன்படுத்த வைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 3 பேர் மட்டுமே பலனடைந்துள்ளனர். இது மட்டுமல்ல, விரைவு பேருந்துகளில் உள்ள சுமை தூக்கும் பெட்டிகள் தற்போது மாதம் ரூ6 ஆயிரத்திற்கு வாடகைக்கு விடப்படுகின்றன. ஒரு பெட்டியில் 100 கிலோ வரை எடை கொண்ட பொருளை ஏற்றிச் செல்லலாம்.
இந்த திட்டத்தில் நெல்லை மற்றும் சேலத்தைச் சேர்ந்த இருவர் பலன் பெறுகின்றனர். வெளியூர்களுக்குத் தினமும் சரக்கு அனுப்பும் வியாபாரிகள், விவசாயிகள், தங்கள் பொருளை அனுப்ப இதை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களுக்குச் சுயதொழில் மூலம் வருமானம் ஈட்ட வசதியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து கழகத்தின் இந்த அறிவிப்பு நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். இதன் மூலம் அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு அதிகமாகும். தனியார் பஸ்கள் தான் தற்போது இந்த துறையின் பெரும்பாலான வருமானத்தைப் பெற்று வருகின்றனர். அரசு பேருந்துகளில் விலை குறைவாக இருந்தாலும் போதுமான பராமரிப்பு இல்லாததால் மக்கள் அதை விரும்புவதில்லை. இதனில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








