இந்தியாவின் டாப் 5 கார் பிராண்டுகள் இது தான்! 5வது இடம் தான் நீங்க யாரும் எதிர்பார்க்காத நிறுவனம்!
கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 3.48 லட்சம் பயணிகள் கார்கள் விற்பனையாகியுள்ள நிலையில், இந்த கார்களை எல்லாம் விற்பனை செய்த டாப் 5 நிறுவனங்களை பற்றி தான் இங்கே நாம் காண போகிறோம். நீங்கள் வழக்கமாக எதிர்பார்க்கும் நிறுவனங்கள் போக சில சர்ப்ரைஸ்களும் இங்கே உங்களுக்காக இருக்கிறது இதைப் பற்றி விரிவாக காணலாம் வாருங்கள்.
ஒவ்வொரு மாத துவக்கத்திலும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கடந்த மாத விற்பனை அறிக்கையை வெளியிடுவார்கள். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் விற்பனையான கார்கள் குறித்து அறிக்கைகள் பெரும்பாலான நிறுவனங்களால் வெளியிடப்பட்டு விட்டன. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் மற்றும் 3.48 லட்சம் பயணிகள் கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. இதில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் முதல் ஐந்து நிறுவனங்களை காணலாம்.

மாருதி சுஸூகி: அதிக எண்ணிக்கையிலான கார் விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியல் என்றால் முதல் இடத்தை கண்ணை மூடிக்கொண்டு மாருதி நிறுவனத்திற்கு கொடுத்து விடலாம். கடந்த அக்டோபர் மாதம் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 1,68,047 பயணிகள் வாகனத்தை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.
இது கடந்த 2022 ஆம் ஆண்டு விற்பனையை ஒப்பிடும்போது 27,710 வாகனங்கள் அதிகமாகும் அதாவது 19.74 சதவீத விற்பனை வளர்ச்சியை இந்நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவில் பெற்றுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 1,40,337 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது.

ஹூண்டாய்: கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 55,128 வாகனங்களை விற்பனை செய்து ஹூண்டாய் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த இரண்டாவது இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஹுண்டாய் நிறுவனமும் மாறி மாறி போட்டி போட்டு வரும் நிலையில் கடந்த மாதம் ஹூண்டாய் நிறுவனம் இந்த இடத்தை தக்க வைத்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்நிறுவனம் வெறும் 48,001 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 7,127 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளன. அதன்படி பார்த்தால் இந்நிறுவனம் 14.84% வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்திய மார்க்கெட்டில் ஹூண்டாய் நிறுவனம் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ்: கடந்த அக்டோபர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 48,337 பயணிகள் வாகனத்தை விற்பனை செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் தனது வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க பல முக்கிய அப்டேட்களை கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதன்படி ஃபேஸ்ஃலிப்ட் செய்யப்பட்ட நெக்ஸான் மற்றும் நெக்ஸான் இவி, ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்கள் சமீபத்தில் அறிமுகமாகி இருந்தன.
கடந்த அக்டோபர் மாதம் விற்பனையை கடந்த2022 ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனையான 45,217 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 3,110 கார்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. இது 6.9% வளர்ச்சியாகும். ஹுண்டாய் மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களை விட டாடா நிறுவனம் குறைவாக சதவீதம்தான் வளர்ந்திருந்தாலும், இந்த நவம்பர் மாதம் அதன் விற்பனை வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா: மஹிந்திரா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 43,708 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் அதிக டிமாண்ட் இருக்கிறது. குறிப்பாக ஸ்கார்பியோ என் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய கார்களுக்கு நீண்ட காத்திருப்பு காலம் இருக்கிறது. இதனால் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 32,226 வாகனங்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
அதை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கூடுதலாக 1182 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. அதாவது இந்நிறுவனம் 35.62% வளர்ச்சியை பெற்றுள்ளது. மஹிந்திரா நிறுவனம் கிட்டத்தட்ட டாடா நிறுவனத்திற்கு போட்டியாக கார்களை விற்பனை செய்யும் நிலைமைக்கு வந்துவிட்டது. மஹிந்திரா நிறுவனம் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கியா: இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை கியா நிறுவனம் பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் சோனட் ஆகிய கார்களுக்கு மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மொத்தம் 24,351 பயணிகள் கார்களை இந்த கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இது கடந்த 2022 ஆம் ஆண்டு விற்பனையான 23,323 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது 1,028 வாகனங்கள் அதிகமாகும். விற்பனை வளர்ச்சி என்பது 4.40 சதவீதமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி குறைவாக இருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களில் இந்நிறுவனம் சிறப்பான விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் படிப்படியாக வளர்ச்சியை சந்தித்து வருகின்றன. கொரோனா காலகட்டத்திற்கு பின்பு மெல்ல மெல்ல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் பழைய நிலையை எட்டி வருகின்றன. இந்த பண்டிகை காலத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உச்சபட்ச விற்பனையை பெற உள்ளது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications









