போட்டியாளர்களை தலையில கொட்டி ஒக்கார வைக்கல ஓடவிட்டிருக்கு.. ஃபார்ச்சூனர் காரால் தத்தளிக்கும் எம்ஜி, ஜீப்!
இந்தியர்களின் வெறுப்பைப் பெறாத ஓர் கார் மாடல் இருக்கும் என்றால் அது டொயோட்டா ஃபார்ச்சூனர் காராக இருக்கும் என தாராளமாகக் கூறலாம். அந்த அளவிற்கு பலரின் பிரியமான கார் மாடலாக ஃபார்ச்சூனர் இருக்கின்றது. என்ன இதன் விலை அரை கோடி ரூபாயைத் தொடும் அளவிற்கு மிக உயரியதாக இருக்கின்ற ஓர் காரணத்தினாலேயே பலருக்கு எட்டாக் கனியாக இருக்கின்றது.
லக்சூரியான பயணத்திற்கு உகந்த வாகனமாக இந்த கார் இருக்கின்றது. இத்தகைய பயணத்தை விரும்புவோர் மத்தியிலேயே இந்த காருக்கு அமோகமான வரேவற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப் போனால் அதன் போட்டியாளர்களுக்கு மிகக் கடுமயைான போட்டியை ஏற்படுத்தும் அளவிற்கு டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்ற மாத விற்பனையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் அதன் போட்டி கார் மாடல்களான எம்ஜி குளோஸ்டர், ஜீப் மெரிடியின், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார் மாடல்களுக்கு மிகப் பெரிய அளவில் தண்ணி காட்டி இருக்கின்றது.
டொயோட்டா ஃபார்ச்சூனர் ரூ. 45 லட்சம் தொடங்கி ரூ. 60 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இத்தகைய அதிக விலையைக் கொண்டிருக்கின்ற போதிலும் அந்த கார் அதன் போட்டியாளர்களுக்கு விற்பனையில் தண்ணீ காட்டி இருக்கின்றது.

அக்டோபர் 2023 இல் மட்டும் இந்த கார் 2,475 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. அதேவேளையில், இதன் போட்டியாளர்களாக கருதப்படும் எம்ஜி குளோஸ்டர் 247 யூனிட்டுகளும், ஸ்கோடா கோடியாக் 176 யூனிட்டுகளும், ஃபோல்க்ஸ்வேகன் டைகுன் வெறும் 98 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.
இந்த கார் மாடல்களையும் மிகவும் மோசமான விற்பனையை ஜீப் மெரிடியன் மற்றும் சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் ஆகியவை பெற்றிருக்கின்றன. இந்த கார் ஒட்டுமொத்தமாகவே 5 யூனிட்டுகளையும், மெரிடியன் 109 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. இதேபோல், ஹூண்டாய் டக்சன் 202 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.

இதன் வாயிலாக, ஃபார்ச்சூனர் அதன் போட்டியாளர்கள் அனைவரின் ஒட்டுமொத்த விற்பனையைக் காட்டிலும் மும்மடங்கு அதிக விற்பனையை சென்ற அக்டோபர் மாதத்தில் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கின்றது. பிரமாண்டமான தோற்றம் மற்றும் நீடித்து உழைக்கும் திறன் தன்மை ஆகியவற்றிற்காக இந்த கார் மிக அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.
பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் ஏராளம். இதுதவிர, இந்த காரால் இந்தியாவின் எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்க முடியும். இதுபோன்ற ஏகப்பட்ட சிறப்புகளை இந்த ஃபார்ச்சூனர் தாங்கி இருக்கின்றது. இதனால், செல்வந்தர்களுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் மிகவும் பிடித்தமான கார் மாடலாக ஃபார்ச்சூனர் இருக்கின்றது.
இந்த காரை இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷனில் வாங்கிக் கொள்ள முடியும். 2.7 லிட்டர் 164 பிஎஸ் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 2.8 லிட்டர் 204 பிஎஸ் 4 சிலிண்டர் டீசல் ஆகிய இரு எஞ்சின் தேர்வுகளே ஃபார்ச்சூனர் காரில் வழங்கப்படுகின்றது.
இரண்டு எஞ்ஜின் தேர்வுகளுடன் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகின்றது. இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் ஃபார்ச்சூனரில் வழங்கப்படுகின்றன. மேலும், 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் சிறப்பு தேர்வாக வழங்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் இந்த காரில் டொயோட்டா நிறுவனம் மைல்டு ஹைபிரிட் வசதியை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், தற்போது லிட்டருக்கு 16 கிமீட்டர் மைலேஜ் தரும் இந்த கார் விரைவில் 24 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜே இந்த கார் ஒரு லிட்டருக்கு வழங்கும் என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications









