டொயோட்டா இன்னோவாவையும் இந்தியாவையும் பிரிக்கவே முடியாது - இன்னும் எத்தனை வருஷதுக்கு விற்பனையில் இருக்கும்?
இந்தியாவில் டொயோட்டா காரான இன்னோவா கிரிஸ்டாவின் விற்பனை 2025ஆம் ஆண்டு வரையில் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ள இந்த தகவலை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
எந்தவொரு காருக்கும் சந்தையில் ஆயுட்காலம் என்பது இருக்கும். உதாரணத்திற்கு 20 வருடங்களுக்கு முன்னர் ஆல்டோ 800 காருக்கு அப்படியொரு வரவேற்பு கிடைத்தது. தற்போதும் ஓரளவிற்கு நல்ல வரவேற்பே கிடைத்துவந்த நிலையில், பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட மாசு உமிழ்வு விதிமுறைகளினால் ஆல்டோ 800 காரின் விற்பனையை நிறுத்த வேண்டிய கட்டாயம் மாருதி சுஸுகிக்கு ஏற்பட்டது. இவ்வாறு, ஒரு சமயத்தில் சந்தையில் பிரபலமாக விளங்கிய காரை ஒரு கட்டத்திற்கு மேல் விற்பனை செய்ய முடியாமல் போகலாம்.

அதுபோன்றுதான், இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் கார்களுள் ஒன்றான இன்னோவாவின் விற்பனையும் ஒரு கட்டத்திற்கு மேல் நிறுத்தப்படும் என்பது உறுதி. இருப்பினும், அத்தகைய காலத்தை டொயோட்டா இன்னோவா இன்னும் எட்டவில்லை எனவும், இந்த பிரபலமான டொயோட்டா எம்பிவி கார் குறைந்தது 2025ஆம் ஆண்டு வரையில் ஆவது விற்பனையில் இருக்கும் எனவும் தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
2016இல் முதல் தலைமுறை மாடல் 'டொயோட்டா இன்னோவா' பெயரில் அறிமுகமான நிலையில், 2ஆம் தலைமுறை மாடல் இன்னோவா கிரிஸ்ட்டா என்ற பெயரில் சந்தைக்கு வந்தது. சமீபத்தில் இன்னோவா ஹைகிராஸ் என்ற பெயரில் இன்னோவாவின் ஹைப்ரீட் வெர்சனும் இந்தியாவில் அறிமுகமானது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். இவ்வாறு இன்னோவா கார்களின் கால் தடத்தை இந்தியாவில் தொடர்ந்து விரிவுப்படுத்தும் முனைப்பில் உள்ள டொயோட்டா நிறுவனம் இன்னோவாவின் விற்பனையை இந்தியாவில் நிறுத்துவதற்கு தற்போதைக்கு வாய்ப்பே இல்லை.

ஆனால், 2025ஆம் ஆண்டு வரையில் நிச்சயமாக டொயோட்டா இன்னோவா கார்கள் விற்பனையில் இருக்கும் என கூறப்படுவது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் தனது வலிமையான டீசல் என்ஜினினால் இன்னோவா பிரபலமாகியது. இந்த எம்பிவி ரக காரின் ஒரே குறை என்னவென்றால், சற்று அதிகப்படியான விலை ஆகும். இதனை நன்கு தெரிந்து கொண்டதன் விளைவாகவே, இன்னோவாவின் விலை குறைவான வெர்சனாக மாருதி சுஸுகி நிறுவனம் எர்டிகாவை கொண்டுவந்தது.
மாருதி சுஸுகி எர்டிகா, தற்சமயம் நம் நாட்டு சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாக கூடிய கார்களுள் ஒன்றாக உள்ளது. இன்னோவா கிரிஸ்ட்டாவின் விற்பனை கடந்த ஆண்டில் சில மாதங்களுக்கு நிறுத்தப்பட்டது. ஆனால் சிறிய இடைவெளியில், இன்னோவா ஹைகிராஸ் அறிமுகப்படுத்தப்பட்டது, அதனை தொடர்ந்து இன்னோவா கிரிஸ்ட்டாவும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரு இன்னோவா கார்களுக்கும் முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

எந்த அளவிற்கு என்றால் இன்னோவா ஹைகிராஸ் மற்றும் இன்னோவா கிரிஸ்ட்டா கார்களை முன்பதிவு செய்து 60,000க்கும் மேற்பட்டோர் டெலிவிரிக்காக காத்திருக்கின்றனர். இந்த அதிகப்படியான தேவையை சமாளிக்கும் விதமாக டொயோட்டா நிறுவனம் அதன் தொழிற்சாலையில் 3வது ஷிஃப்டை அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த வருடங்களில் குறைக்கடத்திகளுக்கு உலகளவில் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த பற்றாக்குறை மட்டும் ஏற்படவில்லை எனில், 3வது ஷிஃப்ட்டை எப்போதோ டொயோட்டா கொண்டுவந்து இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இன்னோவா கார்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே ஓர் நெருங்கிய பிணைப்பு உள்ளதை மறுப்பதற்கில்லை. அதிகப்படியான விலையால் சிலரால் இன்னோவா கார்களை வாங்க முடியாமல் போய் இருக்கலாம், ஆனால் பலருக்கு இன்னோவா கார்களே ஃபேவரட்டாக உள்ளது. ஆதலால் இன்னோவா கார்களின் விற்பனையை டொயோட்டா நிறுத்துவதற்கு தற்போதைக்கு வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









