கோடி ரூபாய் உங்க கிட்ட இருக்கலாம்!! ஆனாலும் இந்த டொயோட்டா காரை வாங்க முடியாது!
டொயோட்டா (Toyota) நிறுவனம் இந்தியாவின் அதன் லேண்ட் க்ரூஸர் (Land Cruiser) காருக்கான முன்பதிவுகளை இந்தியாவில் சைலண்ட்டாக நிறுத்திக் கொண்டுள்ளது. இதனால், பணக்காரர்கள் இந்த காரை வாங்க திட்டமிட்டுவந்த நிலையில், அது தற்காலிகமாக தடைப்பட்டு உள்ளது. இதுகுறித்தும், லேண்ட் க்ரூஸர் காரை பற்றியும் முழுமையாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகளவில் பலரால் நன்கு அறியப்பட்ட கார் நிறுவனங்களுள் ஒன்றாக டொயோட்டாவை சொல்லலாம். அந்த அளவிற்கு, கடந்த பல வருடங்களாக தரமான தயாரிப்புகளை இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. இந்த வகையில் டொயோட்டா உலகளவில் விற்பனை செய்யும் தரமான காராக லேண்ட் க்ரூஸரை சொல்லலாம்.

இன்னும் சொல்லப்போனால், டொயோட்டா நிறுவனத்தை பற்றி தெரியாதவர்கள் கூட லேண்ட் க்ரூஸர் காரை பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர். லேண்ட் க்ரூஸர் கார்களின் ஒரே குறை என்னவென்றால், கோடிகளில் நிர்ணயிக்கப்படும் அவற்றின் அதிகப்படியான விலைதான். ஏனெனில், அதற்கேற்ப லேண்ட் க்ரூஸர் கார்கள் அளவில் நன்கு பெரியதாக, தரையில் இயங்கும் சொகுசு கப்பல் போல் உருவாக்கப்படுகின்றன.
லேண்ட் க்ரூஸரில் நியூ ஜென்ரேஷன் வெர்சனை கடந்த 2022ஆம் ஆண்டில் டொயோட்டா இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. புதிய லேண்ட் க்ரூஸர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.2.10 கோடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்பின், கடந்த ஜனவரியில் புதிய லேண்ட் க்ரூஸரை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கின.

இந்த நிலையில், இந்த காரின் புக்கிங் & டெலிவிரிகள் குறித்த ஓர் அதிர்ச்சிக்கர தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனம் லேண்ட் க்ரூஸர் காருக்கான புதிய புக்கிங்குகளை ஏற்பதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளதாம். ஆதலால், புக்கிங்குகளை மீண்டும் துவங்கும் வரையில் புதிய லேண்ட் க்ரூஸர் கார்களை இந்தியாவில் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு, லேண்ட் க்ரூஸர் கார்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் வரவேற்பும், இதன் காரணமாக குவிந்துவரும் முன்பதிவுகளும் காரணமாக கூறப்படுகிறது. அதாவது, மேலும் புக்கிங்குகளை ஏற்காமல், இப்போது வரையில் கிடைத்துள்ள புக்கிங்குகளுக்கு முதலில் லேண்ட் க்ரூஸர் கார்களை உற்பத்தி செய்துவிடுவோம் என்கிற திட்டத்தில் டொயோட்டா உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், டொயோட்டாவிடம் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே புக்கிங் நிறுத்தத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும். கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தப்பட்டது.
புதிய லேண்ட் க்ரூஸரில் 3.3 லிட்டர், வி6 டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 305 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் இசட்.எக்ஸ் என்ற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே புதிய லேண்ட் க்ரூஸர் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லேண்ட் க்ரூஸர் காரின் புக்கிங் நிறுத்தப்பட்டு இருப்பது இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு அதிர்ச்சிக்கரமான செய்தியாக இருக்காது என்பது உண்மைதான். இருப்பினும், வழக்கமாகவே லேண்ட் க்ரூஸர் காரை புக்கிங் செய்து டெலிவிரி எடுப்பதற்கு பல மாதங்கள் ஆகும் எனும்போது, இவ்வாறு புக்கிங் நிறுத்தப்பட்டு இருப்பது இந்த காரை சொந்தமாக்குவதற்கு ஆகும் காலத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications









