பைக்கை போல மைலேஜை வாரி வழங்கும் காராக மாற போகுது டீசல் ஃபார்ச்சூனர்.. அசர வைக்கும் தகவலை வெளியிட்ட டொயோட்டா!
டொயோட்டா நிறுவனத்தின் சிறப்பான தயாரிப்புகளில் ஒன்றாக ஃபார்ச்சூனர் இருக்கின்றது. பிரமாண்டமான தோற்றம் கொண்ட இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அதிக சொகுசான பயணத்தை விரும்புவோர் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு இந்த காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதுதவிர, அரசியல்வாதிகள் மத்தியிலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு தரமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கார் மாடலையே மிக மிக அதிக மைலேஜ் தரும் வாகனமாக டொயோட்டா விரைவில் மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் ஓர் வீடியோவை அதன் அதிகாரப்பூர்வ யுட்யூப் சேனல் வாயிலாக வெளியிட்டு இருக்கின்றது.

நிறுவனம் சமீபத்தில் அதன் டர்போ எஞ்ஜின் கார்களுக்கான ஒரு புதிய 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்ட (48v Mild Hybrid System)த்தை உருவாக்கியது. இது எப்படி இயங்கும் மற்றும் எந்தெந்த வகையில் எல்லாம் எரிபொருளை சிக்கனப்படுத்தும் என்பதை விளக்குகின்ற வீடியோவையே டொயோட்டா வெளியிட்டு இருக்கின்றது.
இந்த 48 வோல்டு ஹைபிரிட் சிஸ்டம் என்பது எரிபொருள் எஞ்ஜின் இயங்கிக் கொண்டிருக்கும் போதே அதன் இயக்க சக்தியை மின்சக்தியாக மாற்றி பேட்டரியில் சேகரித்துக் கொள்ளும். பின்னர் அந்த மின் சக்தியை கார் இயக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும். இத்தகைய தரமான சிஸ்டத்தையே தன்னுடைய டீசல் டர்போ கார்களுக்காக டொயோட்டா தயாரித்து இருக்கின்றது.
தற்போது வரை பெட்ரோல் கார்களில் மட்டுமே ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் மைல்டு ஹைபிரிட் என்கிற தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே டொயோட்டாவின் டீசல் கார்களிலும் இனி வரும் நாட்களில் ஹைபிரிட் வசதி இடம் பெறும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இந்த 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் முதலில் நிறுவனத்தின் ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக் மற்றும் லேண்ட் க்ரூஸர் பிராடோ ஆகிய கார் மாடல்களிலேயே இடம் பெற இருக்கின்றது. இதுதவிர, அடுத்த தலைமுறை ஃபார்ச்சூனர் காரிலும் இந்த அம்சத்தை டொயோட்டா வழங்கும் என கூறப்படுகின்றது.
இந்த அம்சம் இடம் பெறும் எனில் தற்போது வழங்கக் கூடிய மைலேஜைக் காட்டிலும் கூடுதலான மைலேஜை வழங்க இந்த சிஸ்டம் பெரும் உதவியாக இருக்கும். தற்போது விற்பனையில் இருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் பெட்ரோல் தேர்வு ஒரு லிட்டருக்கு 10 கிமீ முதல் 10.3 கிமீ வரையிலும், டீசல் தேர்வு ஒரு லிட்டருக்கு 14.27கிமீ தொடங்கி 14.4கிமீ வரையிலும் மைலேஜ் தரக் கூடியதாக இருக்கின்றது.
இந்த மைலேஜ் திறனுடன், அதாவது, டீசல் காரில் கூடுதலாக 48 வோல்டு மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் சேர்க்கப்படும் எனில் இதன் மைலேஜ் திறன் 14 கிமீ என்பதில் இருந்து 20 கிமீட்டருக்கும் அதிகமாக மாற வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த அளவிற்கு எரிபொருள் சிக்கனத்தை வழங்கக் கூடிய ஓர் அம்சமே இந்த 48 வோல்டு மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் ஆகும்.
இந்த சிஸ்டம் மூன்று முக்கிய நன்மைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. இந்த சிஸ்டம் நிறுத்தம் மற்றும் வாகன இயக்கத்தை மிகவும் மென்மையாக்குகிறது. இதன் வாயிலாக மிக பெரிய அளவில் எரிபொருள் சிக்கனம் செய்யப்படும். இதைத்தொடர்ந்து, டீசல் எஞ்ஜினின் செயல் திறனையும் அது அதிகரிக்கச் செய்யும்.
தான் சேகரித்த மின்சாரம் வாயிலாகவே இந்த செயலை அது செய்யும். ஆகையால், இந்த நிலையிலும் எரிபொருள் சிக்கனம் என்பது மிக தாராளமாக நடைபெறும். இத்துடன், கடைசியாக முழுமையாக மின்சார மோடிலும் இயங்கிக் கொள்ளவும் இந்த சிஸ்டம் உதவும். ஆனால், இந்த நிலையில் குறைவான வேகத்தில், குறைவான கிமீ தூரம் வரை மட்டுமே நம்மால் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய தரமான வசதிக் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் காரே வெகு விரைவில் உலகை கலக்க வர இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி டொயோட்டா அதன் அடுத்த தலைமுறை ஃபார்ச்சூனர் காரை அடுத்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்துவிடும் என கூறப்படுகின்றது. ஆனால், துள்ளியமான நாள் விபரம் பற்றிய தகவலை அது வெளியிடவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் ஃபார்ச்சூனர் கார் பிரியர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றது. மேலும், இந்த காரை நோக்கிய எதிர்பார்ப்பை இப்போதே அவர்கள் மத்தியில் ஏற்பட தொடங்கிவிட்டது. குறிப்பாக, இது எந்த மாதிரியான மைலேஜை வழங்கும் என்பதே பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








