இந்தியர்களுக்காக டொயோட்டா கொண்டு வர இருக்கும் 7சீட்டர் காரை பற்றி கேள்விப்பட்டீங்களா? ஹூண்டாய்க்கு தல வலி ரெடி
டொயோட்டா கார் காதலர்கள் மற்றும் எஸ்யூவி வாகன பிரியர்களைக் கவரக் கூடிய ஓர் தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அது என்னவென்றால், உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா (Toyota), இந்தியாவில் விரைவில் அதன் புதுமுக 7 சீட்டர் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்தான்.
அது என்ன கார் மாடல்? அதன் சிறப்புகள் என்ன? எப்போது அந்த வாகனத்தை எதிர்பார்க்கலாம்? மேலும், என்ன விலையில் எதிர்பார்க்கலாம்? அது விற்பனைக்கு வரும் எனில் வேறு எந்தெந்த கார் மாடல்களுக்கு எல்லாம் அதன் வருகை போட்டியாக அமையும்? இது போன்ற முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டொயோட்டா (Toyota) நிறுவனம் சமீபத்தில் அதன் மூன்றாவது உற்பத்தி ஆலையை இந்தியாவில் அமைக்க இருப்பது பற்றிய தகவலை வெளியிட்டது. ஏற்கனவே உள்ள இரண்டு தொழிற்சாலைகளும் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலேயே அமைந்துள்ளன. இந்த இரண்டும் அமைந்திருக்கும் அந்த பகுதியிலேயே மூன்றாவது ஆலையும் அமைக்கப்பட இருக்கின்றது.
பெங்களூருவின் பிடாடி எனும் பகுதியிலேயே நிறுவனத்தின் ஆலைகள் அமைந்திருக்கின்றன. வரவிருக்கும் புதிய ஆலையும் இங்கேயே அமைய இருக்கின்றது. இந்த புதிய ஆலை பற்றிய தகவல்கள் வெளியாகி சில நாட்களே ஆகின்ற நிலையில், தற்போது அந்நிறுவனம் இந்தியாவிற்காக புதிய 7 சீட்டர் எஸ்யூவி ரக காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் அது இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த வாகனத்திற்கு 340டி (340D) எனும் குறிபெயரைச் சூட்டி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்போது கொரல்லா கிராஸ் (Corolla Cross) எனும் பெயரில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் 7 சீட்டர் கார் நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களில் ஒன்றான கொரல்லாவை தழுவியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், இதன் வருகைபற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் டொயோட்டா வெளியிடவில்லை விரைவில் அதுபற்றிய அனைத்து விபரங்களும் வெளியாகலாம் என எதிர்பாக்கப்படுகின்றது.

இப்போதைய நிலவரப்படி கொரல்லா உலக நாடுகள் பலவற்றில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலும் கடந்த காலத்தில் இந்த கார் மாடல் விற்பனையில் இருந்தது. ஆனால், இப்போது அது விற்பனையில் இல்லை. உலக நாடுகளில் அது 5 சீட்டர் வெர்ஷனிலேயே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
2640 மிமீ வீல்பேஸ் அளவுடன் அந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் 7 சீட்டர் எஸ்யூவி ரக கொரல்லா கிராஸ், இதை அதிக வீல்பேஸுடன் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 150 மிமீட்டர் வரை அது கூடுதலாகக் கொண்டிருக்கலாம்.

மூன்றாவது வரிசை இருக்கை அமைப்பை கொரல்லா ஏற்றுக் கொள்ள இந்த அளவு நீட்டிப்பு கட்டாயமாகி இருக்கின்றது. ஆகையால், வெளிப்புற தோற்றத்தில் சற்று பெரியதாகவும், கம்பீரிமானதாகவும் இந்தியாவிற்கான கொரல்லா எஸ்யூவிக் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிஎன்ஜிஏ-சி பிளாட்பாரத்தில் வைத்தே இந்தியாவிற்கான இந்த கார் தயாரிக்கப்படும் என கூறப்படுகின்றது.
இந்த தளத்தைப் பயன்படுத்தியே நிறுவனம் அதன் சப்-காம்பேக்ட் மற்றும் எஸ்யூவி உள்ளிட்ட கார்களை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த பிளாட்பாரத்தின் வாயிலாக முன் வீல் மற்றும் அனைத்து வீல்கள் இயங்கும் வாகனங்களையும் தயாரிக்க முடியும். ஆகையால், இந்த ஆப்ஷன்களை இந்தியாவிற்கான எஸ்யூவி ரக கொரல்லாவில் எதிர்பார்க்கலாம்.
சிறப்பம்சங்களைப் பொருத்த வரை இந்த காரில் புதிய கிரில், பம்பர், காற்றோட்டம் வசதிக் கொண்ட இருக்கை, டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டூயல் ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. எஞ்சினைப் பொருத்த வரை இரண்டு விதமான தேர்வுகள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
1.8 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார்களே புதிய கொரல்லா கிராஸ் எஸ்யூவி காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த இரண்டில் ஒன்றில் ஹைபிரிட் அம்சத்தையும் டொயோட்டா வழங்கும் என நாம் எதிர்பார்க்கலாம். டொயோட்டாவின் புகழ்பெற்ற தயாரிப்பான இன்னோவா ஹைகிராஸில் வழங்கப்படும் ஹைபிரிட் அம்சமே இதில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த புதிய கொரல்லா கிராஸ் எஸ்யூவி ரக கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி700, எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாளனாக அமையும். விலையும் இந்த கார் மாடல்களுக்கு போட்டி அளிக்கும் வகையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், ரூ.15 லட்சம் தொடங்கி ரூ.20 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் புதிய கொரல்லா கிராஸ் எஸ்யூவி-யை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. முன்பெல்லாம் ஹேட்ச்பேக் கார்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்கி வந்தனர். ஆனால், இப்போது டிரெண்ட் மாறிவிட்டது. பலர் எஸ்யூவி-க்களையே அதிகம் விரும்புகின்றனர். அதிக இட வசதி மற்றும் அதிக பேரால் பயணிக்க முடியும் என்பதால் இதற்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









