தமிழ்நாட்டிற்கு வருமா!! புது தொழிற்சாலைக்கு அடிப்போடும் டொயோட்டா - ஏற்கனவே 2 கர்நாடகாவுக்கு போயிடுச்சு...
டொயோட்டா (Toyota) நிறுவனம் இந்தியாவில் அதன் 3வது தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதற்காக இந்த புதிய தொழிற்சாலை? எங்கு இந்த தொழிற்சாலை அமைய உள்ளது? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில்களை வாருங்கள் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று டொயோட்டா என்றால், அதில் சந்தேகமே இல்லை. மாருதி சுஸுகி நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து இந்தியாவில் டொயோட்டா புது, புது கார்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. தற்சமயம் டொயோட்டாவுக்கு நம் நாட்டில் இரு தொழிற்சாலைகள் உள்ளன.

டொயோட்டாவின் இரு தொழிற்சாலைகளும் கர்நாடகா மாநிலத்தில் உள்ளன. இந்த நிலையில், டொயோட்டா கார்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் தேவையின் காரணமாக 3வது தொழிற்சாலையை உருவாக்கும் பணியில் டொயோட்டா ஈடுப்பட்டு வருவதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன. தொழிற்சாலைக்கான இடம் பார்க்கும் வேலைகளில் ஏற்கனவே டொயோட்டா இறங்கிவிட்டதாகவும் இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொயோட்டா நிறுவனம் தற்போதைக்கு வருடத்திற்கு 4 இலட்ச கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. சில கார்கள் மற்றும் அவற்றிற்கான பாகங்கள் மாருதி சுஸுகி- டொயோட்டா கூட்டணியில் தயாரிக்கப்படுகின்றன. 3வது தொழிற்சாலை பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் டொயோட்டா கார்கள் உற்பத்தி திறன் 30% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 3வது தொழிற்சாலையை டொயோட்டா நிறுவுவதற்கு மற்றொரு முக்கிய காரணம், இந்த நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய எஸ்யூவி கார் என கூறப்படுகிறது. அதாவது, 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் டொயோட்டா ஓர் புத்தம் புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அந்த எஸ்யூவி கார் நிச்சயமாக அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடியதாக இருக்கும் என்பதால் புதிய தொழிற்சாலை ஒன்று தேவை என்றும் டொயோட்டா எண்ணுவதாக கூறப்படுகிறது.
டொயோட்டாவின் இந்த புதிய தொழிற்சாலை வருடத்திற்கு 80,000 - 1,20,000 கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு ஆரம்பத்தில் இருக்கும் என்றும், அதன்பின் வருடத்திற்கு 2 இலட்ச கார்களை உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு புதிய தொழிற்சாலை விரிவுப்படுத்தப்படும் எனவும் நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

மேலும், எதிர்காலத்தில் இந்த புதிய தொழிற்சாலையை மாருதி சுஸுகி நிறுவனமும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. மாருதி சுஸுகி - டொயோட்டா இவை இரண்டிற்கும் இடையேயான கூட்டணி நன்கு வலிமையாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இவை இரண்டும் தங்களது உற்பத்தி பாகங்களை சரியாக விகிதத்தில் பகிர்ந்துக் கொண்டு வருகின்றன.
இன்னும் சொல்லப்போனால், மாருதி சுஸுகியின் பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களில் இருந்து கொண்டுவரப்பட்ட டொயோட்டா கிளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்கள் தான் இந்தியாவில் டொயோட்டாவின் கார்கள் விற்பனையில் 40% ஆக உள்ளன. அதேபோல், டொயோட்டாவின் இன்னோவா கார்களுக்கும், ஃபார்ச்சூனர் கார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மக்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதனால் வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதில் ஆச்சிரியமில்லை. எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் வெளிவர உள்ளது என்பதால், டொயோட்டாவின் புதிய தொழிற்சாலை ஆனது எலக்ட்ரிக் வாகனங்களுக்காக கூட இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









