Tractor Sales FY23: ஏழை விவசாயிகள் காட்டிலும் பண மழை கொட்டுது! 10 லட்சம் டிராக்டர்களை வாங்கி குவிச்சிட்டாங்க
ஏப்ரல் மாதம் துவங்கிய நிலையில் புதிய நிதியாண்டு துவங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த நிதியாண்டிற்கான விற்பனை நிலவரங்களை ஒவ்வொரு நிறுவனங்களாக வெளியிட்டுள்ளன. இதில் தற்போது உலகிலேயே அதிகமாக இந்தியாவில் டிராக்டர் விற்பனையாகியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. இதை விரிவாகக் காணலாம்.
இந்தியாவில் கடந்த 2022-23ம் நிதியாண்டில் மட்டும் மொத்தம் 9.44 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட 12 சதவீதம் வளர்ச்சியாகும். ஒரே ஆண்டில் இவ்வளவு டிராக்டர்கள் விற்பனையான ஒரே நாடு இது தான். விவசாய வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளது.

இது குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் விவசாய வாகன பிரிவு தலைவர் ஹிமந்த் சிக்கா கூறும் போது: " தற்போது இந்தியாவில் விவசாயிகளின் வருமானம் ஓரளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக அரசு குறைந்த பட்ச ஆதார நிதியை வழங்குகிறது. இதனால் விவசாயிகளின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் கடந்தாண்டு வறட்சியில்லாமல் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிவு இருந்தது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. இதனால் டிராக்டர்களை வாங்கும் முடிவைப் பலர் எடுத்தனர். இது மட்டுமல்ல டிராக்டர் வாங்குவதற்கான ஃபைனான்ஸ் சுலபமாகக் கிடைக்கிறது.

விவசாயிகள் டிராக்டரை தன் வீட்டில் சம்பாதிக்கும் இன்னொரு நபராகவே பார்க்கின்றனர்." எனக் கூறினார். டிராக்டர் விற்பனையைப் பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உள்நாட்டில் விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரிக்கும் என்றாலும் இந்த முறை மிகப்பெரிய அளவில் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் 23 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது மட்டுமல்ல டிராக்டர் தயாரிப்பார்களான மஹிந்திரா, டஃபே, சோனாலிகா, ஜான் டீரி ஆகியோர் பல்வேறு விதமான பவர்களில் டிராக்டர்களை அறிமுகப்படுத்தினர். இதனால் டிராக்டர்களின் பயனாளர்கள் அதிகரித்தனர்.இதுவும் விற்பனை அதிகரிப்பதற்கான முக்கியமான காரணம்.

இந்த விற்பனை அதிகரிப்பு இந்த நிதியாண்டில் முதல் 3 மாதத்திற்கும் தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் விற்பனை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனையில்4-6 சதவீத வளர்ச்சி தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் சீசன் நேரங்களில் பெய்யாத மழை, மற்றும் இயற்கை சீற்றங்களாலும் விவசாயம் பாதிக்கப்பட்டால் டிராக்டர் விற்பனை கணிசமான அளவு குறையும். இதனால் விற்பனையில் நடப்பு நிதியாண்டில் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








