மாருதி கூட போட்டி போடனும்னா பயங்கர ஸ்ட்ராங்கா இருக்கனும்!! மஹிந்திரா எடுக்க போகும் அடுத்த அதிரடியான ஆயுதம்!
மஹிந்திரா தார் (Mahindra Thar)-இல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய மாடலுக்கு அர்மடா என பெயர் வைக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றியும், மஹிந்திரா தார் வாகனத்தில் புதியதாக கொண்டுவரப்பட உள்ள இந்த மாடலை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
மஹிந்திரா நிறுவனத்தின் அடையாளங்களுள் ஒன்றாக தார் வாகனத்தை சொல்லலாம். மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான தார் கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம், மஹிந்திரா தார் வாகனம் 3 கதவுகளுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தார் வாகனத்தில் பயணத்தின்போது அசவுகரியமான உணர்வு கிடைப்பதாக சிலர் கூற கேட்க முடிகிறது.

இதனை முன்கூட்டியே அறிந்ததன் காரணமாகவே, மாருதி சுஸுகி நிறுவனம் ஆரம்பத்திலேயே அதன் ஜிம்னி வாகனத்தை 5 கதவுகளுடன் அறிமுகம் செய்து, விற்பனை செய்து வருகிறது. அதேநேரம், மஹிந்திராவும் அதன் தார் வாகனத்தை 5 கதவுகளுடன் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த நிலையில், 5-கதவு தார் வாகனம் 'அர்மடா' (Armada) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய தார் வாகனத்தை காட்டிலும் ரக்டான தோற்றத்தில் களமிறக்கப்படுவதால், 5-கதவு தாருக்கு அதற்கேற்ப பெயர் வைக்க மஹிந்திரா விரும்புவதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன. மஹிந்திரா தார் 5-கதவு மாடலுக்கு சூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பெயர்கள்: அர்மடா, கல்ட், ரெக்ஸ், சாவன்னா, ரோக்ஸ், கிளாடியஸ் மற்றும் செஞ்சூரியன் ஆகும்.

இந்த பெயர்களுக்கான காப்புரிமையை மஹிந்திரா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஒவ்வொரு பெயரையும் நிபுணர்கள் பலரது பரிந்துரையின்படி மஹிந்திரா நிறுவனம் தேர்வு செய்து, காப்புரிமையை பெற்றுள்ளது. இதில் அர்மடா பெயருக்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 5-கதவு தார் வாகனத்தின் அறிமுகத்தை வருகிற 2024ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கிறோம்.
ஏனெனில், 5-கதவு தார் வாகனத்தை இந்திய சாலைகளில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. அப்போது கிடைக்க பெற்ற படங்களின் மூலம், புதிய தாரில் புதுமையான டிசைனில் க்ரில், அப்கிரேடான எல்இடி ஹெட்லைட்கள், புதிய அலாய் சக்கரங்கள், திருத்தப்பட்ட டிசைனில் பம்பர், சிங்கிள் பேன் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என்பதை அறிய முடிந்தது.

அதேபோல், தொழிற்நுட்ப அம்சங்களிலும் புதிய தார் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, அளவில் பெரியதான 10-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழிற்நுட்பம், முன் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட், புதிய ஸ்டேரிங் சக்கரம், சீலிங்கில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை தார் 5-கதவு வாகனத்தில் இடம்பெறலாம்.
தற்போதைய மாடர்ன் கார்களில் பரவலாக வழங்கப்பட்டு வரும் அடாஸ் (ADAS) மஹிந்திரா தார் 5-கதவு வாகனத்தில் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மற்றப்படி, தற்போதைய தார் 3-கதவு வாகனத்தில் வழங்கப்படும் அதே 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் எம் ஸ்டாலியோன் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் புதிய தார் 5-கதவு மாடலிலும் வழங்கப்படும் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய பெயரில் அறிமுகம் செய்யப்பட்டால், தற்போதைய 3-கதவு தாருக்கும், புதிய 5-கதவு தாருக்கும் தோற்றத்திலும் பெரிய வித்தியாசம் இருக்கும். அதுவுமில்லாமல், மாருதி சுஸுகி ஜிம்னிக்கு விற்பனையில் போட்டியாக விளங்கவுள்ளதால், அதற்கேற்ப 5-கதவு தார் வாகனத்தை மஹிந்திரா உருவாக்கும் என்பது உறுதி. புதிய தார் 5-கதவு வாகனத்திற்கு எந்த பெயர் சரியானதாக இருக்கும்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









