இன்னும் கொஞ்ச நாள்ல இழுத்து மூடிருவாங்கன்னு பார்த்தா, அடுத்தடுத்து சூப்பரான காரை இறக்க போறாங்க போலயே!
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அடுத்தடுத்து எலெக்ட்ரிக் கார், குடும்பமாக பயணிக்கும் செடான் கார் உள்ளிட்ட சில முக்கிய கார்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தில் தற்போது அதிக எண்ணிக்கையில் கார்கள் இல்லாத நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் இதன் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வருங்காலத்தில் இந்தியாவில் கார்களின் விற்பனை அபரிவிதமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் இந்த மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக புதிய கார்களை எல்லாம் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதற்காக பல்வேறு புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களை ஹோண்டா நிறுவனம் வடிவமைத்துள்ளது.

நீடித்த உழைப்பு சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் மற்றும் மக்கள் விரும்பும் ஸ்டைல் ஆகியவற்றுடன் புதிய ஹோண்டா கார்களை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களின் மனதைக் கவர அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அதன்படி இந்நிறுவனம் விரைவில் வெளியிட போகும் கார்களைப் பற்றிதான் இங்கே காணப் போகிறோம்.
ஹோண்டா எலவேட் இவி: ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தான் தனது எலவேட் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிறுவனம் 2030ம் ஆண்டுக்குள் 5 எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதில் முதல் காராக ஹோண்டா எலவேட் இவி கார் 2025-ம் ஆண்டு அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த வேறு தகவல் எதையும் இதுவரை ஹோண்டா நிறுவனம் வெளியிடவில்லை.

புதிய காம்பேக்ட் எஸ்யூவி : சில ஆண்டுகளுக்கு முன்பு ஹோண்டா நிறுவனம் தனது டபிள்யூ ஆர்வி என்ற காம்பேக்ட் எஸ்யூவி காரை விற்பனையிலிருந்து நிறுத்தியது. இதன் பின்பு 4 மீட்டருக்கு குறைவான எஸ்யூவி காரில் தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்காக புதிதாக ஒரு காம்பேக்ட் எஸ்யூவி காரை அந்நிறுவனம் வடிவமைத்து வருகிறது. இந்த கார் ஹோண்டாவின் அமேஸ் கார் பிளாட்பார்மில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் வந்தால் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக ஹோண்டா நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதன் அறிமுகம் குறித்த விபரங்களும் இதுவரை வெளியாகவில்லை. இந்த கார் அடுத்த ஆண்டு அல்லது 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ்: ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் கார் தனது புதிய அப்டேட்டை விரைவில் பெற உள்ளது. இந்த கார் மூன்றாம் தலைமுறை அப்டேட் உடன் வரும் 2024 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட்டிற்காக இந்த கார் தயாரிக்கப்படும் பிளாட்பார்மே அப்டேட் செய்யப்படும் என தெரிகிறது.
ஹோண்டாவின் சிட்டி மற்றும் அக்கார்டு காரின் வடிவமைப்பு போல இந்த காரும் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் வெளியிலிருந்து பார்க்கும்போது மாடனாகவும் உள்ளே சொகுசு வசதிகள் நிறைந்த காராகவும் வடிவமைக்கப்படலாம். இந்த அப்டேட்டிற்குப் பிறகு இந்த காரின் டிரைவிங் அனுபவம் மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அப்டேட்டில் இன்ஜினை பொறுத்தவரை அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தான் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படலாம். இந்த காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்காது. மாசு கட்டுப்பாட்டுக்காக டீசல் இன்ஜினை ஹோண்டா நிறுவனம் தவிர்க்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டியது
7 சீட்டர் எஸ்யூவி: ஹோண்டா நிறுவனம் தற்போது 7 சீட்டர் எஸ்யூவி கார் ஒன்றை தனது அடுத்த புதிய தயாரிப்பு பட்டியலில் வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்து ஹோண்டா நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த கார் தயாரிக்கப்பட்டால் இது டாடா சஃபாரி, ஹூண்டாய் ஆல்கஹார், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது தான் இந்த கார் எப்படிப்பட்ட கார் என்ற விபரம் நமக்கு தெரிய வரும் இந்நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரின் நீட்டிக்கப்பட்ட வெர்ஷனாக இந்த 7 சீட்டர் கார் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் தனது கார்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டதால் பலர் ஹோண்டா நிறுவனத்தின் கார்களையே மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தற்போது எலவேட் கார் மூலம் மீண்டும் எஸ்யூவி கார் விற்பனையில் தனது காலடி தடத்தை எடுத்து வைத்துள்ளது அடுத்தடுத்து புதிய எஸ்யூவி மற்றும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை மீண்டும் ஹோண்டா நிறுவனத்தால் தக்க வைத்துக் கொள்ள முடியும்


Click it and Unblock the Notifications









