காட்டுக்குள்ள ட்ரக்கிங் போறீங்களா!.. ஃபாஸ்டேக் இருந்தா ஈசி.. எப்படி தெரியுமா?
வாகனங்களுக்கான சுங்க வரியை சுலபமாக வசூலிக்கும் விதமாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஓர் சாதனமே ஃபாஸ்டேக். வாகனங்களின் விண்ட்ஷீல்டில் ஸ்டிக்கர்போல் அது ஒட்டப்பட்டு இருக்கும். அந்த சின்ன காகித துண்டே டோல்கேட்டுகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல் கட்டணத்தை செலுத்த உதவுகின்றது. ரோடியோ அதிர்வெண்ணைக் கொண்டே அது இயங்குகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் வாயிலாகவே ஒவ்வொரு முறையும் வாகனங்கள் டோல்கேட்டைக் கடக்கும்போது தானாகவே டோலுக்கான கட்டணம் செலுத்தப்படுகின்றது. இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, அதில், போதுமான தொகையை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். அவ்வாறு, போதிய தொகை அந்த ஃபாஸ்டேக்கில் இருந்தால் நீண்ட நேரம் காத்திருக்காமல் டோல் கட்டணத்தைச் செலுத்திவிட முடியும்.

கடந்த காலங்களில் டோல்கேட்டுகளில் நீண்ட நேரம் காத்திருந்து கட்டணத்தை செலுத்த வேண்டும் என்கிற சூழல் இருந்தது. ஆனால், இப்போது அது கணிசமாக மாறி இருக்கின்றது. சின்ன ஸ்கேனிலேயே டோலுக்கான கட்டணம் ஃபாஸ்டேக் வாயிலாக செலுத்தப்படுகின்றது. இந்த தொழில்நுட்பத்தை இனி வேறு சிலவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிற தகவலே இப்போது வெளியாகி இருக்கின்றது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India), ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்துடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டு இருக்கின்றது. ஃபாஸ்டேக் வாயிலாக புலிகள் சரணாலாயத்திற்கான கட்டணத்தை வசூல் செய்துகொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பரவி இருக்கும் நாகார்ஜூனா-ஸ்ரீசைலம் புலிகள் காப்பகத்திற்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் வந்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மிக சுலபமான சேவையை வழங்கும் விதமாகவே புதிய ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இனி வரும் காலங்களில் புலிகள் காப்பதற்கான நுழைவுக் கட்டணத்தை பார்வையாளர்களால் ஃபாஸ்டேக் வாயிலாக செலுத்திவிட முடியும்.
மேலும், நீண்ட நெடிய வரிசையில் கால்கடுக்க காத்திருக்க வேண்டும் என்கிற சூழலும் இதன் வாயிலாக தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. சில நேரங்களில் நாகார்ஜூனா-ஸ்ரீசைலம் புலிகள் காப்பகத்தில் டிக்கெட் எடுக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகின்றது. இதனால், எஞ்ஜாய் செய்யும் எண்ணமே போய்விடக் கூடும்.
இத்தகைய அவல நிலையே தற்போது போக்கப்பட்டு இருக்கின்றது. இதனால், அடுத்து வரும் நாட்களில் புலிகள் காப்பகத்தை பார்க்க வருவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வாகனங்களில் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 2021 பிப்ரவரி மாதம் முதல் ஃபாஸ்டேக் அனைத்து வாகனங்களிலும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இது இல்லாத வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ஆகையால், அனைத்து வாகனங்களிலும் தற்போது ஃபாஸ்டேக் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. எனவே, புலிகள் காப்பகத்திற்கான கட்டணத்தைச் செலுத்துவதில் யாரும் சிரமமப்பட மாட்டார்கள் என யூகிக்க முடிகின்றது. ஃபாஸ்டேக்கினால் அரசுக்கு வருவாய் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
உதாரணமாக இதுவரை இல்லாத அளவில் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி மட்டும் அரசுக்கு 193.15 கோடி வருவாய் ஃபாஸ்டேக் வாயிலாக கிடைத்திருக்கின்றது. இது வழக்கமாக தினந்தோறும் கிடைக்கும் சுங்கவரியைக் காட்டிலும் 1.16 கோடி ரூபாய் அதிகம் ஆகும். இதுவரை இந்த அளவு அதிக வசூல் வேறு எந்த நாளிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய சூப்பரான ஃபாஸ்டேக்கையே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள புலிகள் காப்பகத்தை பார்வையிட பயன்படுத்திக் கொள்ளலாம் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்து இருக்கின்றது. இதனால் கட்டணக் கொள்ளை, நீண்ட காத்திருப்பு ஆகியவற்றை பார்வையாளர்களால் தவிர்த்துக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications