இது ஒரு தல வலிங்க! டயருல காத்த நிரப்பின உடனேயே வெளியேறிடுதா? இத செஞ்சா ரொம்ப நாளைக்கு காத்து அப்படியே நிக்கும்
வாகன உரிமையாளர்கள் பலர் சந்திக்க கூடிய மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக டயரில் இருந்து விரைந்து காற்று வெளியேறுவது இருக்கின்றது. அப்பதான் காற்றை நிரப்பிட்டு வந்திருப்போம். ஆனால், டயரில் கொஞ்சம் கூட காற்று இருக்காது. பஞ்சரானதை போல் காற்று முழுவதுமாக வெளியேறி இருக்கும்.
ஆனால், பஞ்சர் ஆகியிருக்காது. இருந்தும் காற்று வெளியேறி இருக்கும். இத்தகைய பிரச்னையை நீங்களும் சந்தித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால், அதற்கு ஒரு சில காரணங்கள் மட்டுமே இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும், இவ்வாறு காற்று நிரப்பிய உடனேயே அது வெளியேறுவதற்கான காரணம் என்ன என்பதை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பலர் இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு டயரை மாற்றுவது மட்டும்தான் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதுதான் இல்லை. வேறு சில வழிமுறைகளும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண உள்ளன. பொதுவாக, அதிக பயன்பாடு காரணமாக ஏற்படும் தேய்மானத்தினாலேயே இத்தகைய பிரச்னை வாகனங்களில் காணப்படுகின்றன.
அதிக தேய்மானம் காரணமாக டயர் மற்றும் வீல்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி விரிவடைய ஆரம்பிக்கும். இங்கு அதிகம் நெருக்கம் இருந்தால் மட்டும் காற்று வெளியேறுவது தடுக்கப்படும். ஆனால், பள்ளம் மற்றும் மேடுகள் நிறைந்த சாலையில் அதிகம் பயணிப்பதன் காரணத்தினால் டயர் மற்றும் ரிம்முக்கான இணைப்பில் பாதிப்பு ஏற்படுகின்று.

இதன் விளைவாகவே காற்று கசிவு என்பது ஏற்படுகின்றது. பஞ்சரானதை போல் அதன் பிரதிபலிப்பு இருக்கும். இந்த சிக்கலுக்கு டயரை மாற்றுவதற்கு பதிலாக மெக்கானிக்கை அணுகலாம். புதிய டயரை மாற்றுவது மிக சிறந்த வழியாக இருந்தாலும், வேறு சில வழிகளும் இதற்கான தீர்வுகளாக உள்ளன. புதிய டயர் மாற்றத்திற்கு பெரும்தொகையை செலவிட வேண்டியிருக்கும்.
அதவேளையில், இதை நாமே வீட்டிலேயே வைத்து சரி செய்துவிடவும் முடியும். இதற்கு ஒரு சில உபகரணங்கள் இருந்தாலே போதும். அதில் காற்று அடிக்கும் கருவி மிக முக்கியமானது. முதலில் காற்று வெளியேறிய வீலை தனியாக கழட்டி அதில் காற்றை நிரப்ப வேண்டும்.

பின்னர், ஒரு அகலமான வாய் கொண்ட பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை அடுத்து, அதில் சோப்பு பவுடர் அல்லது ஷேம்பூவை போட்டு கலக்கிக் கொள்ள வேண்டும். இதைத்தொடர்ந்து, அந்த பாத்திரத்தில் பிரச்னை இருக்கும் வீலை உள்ளே அமுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது, அந்த பாத்திரத்தில் கொப்பளிப்பு ஏற்பட்டால் கட்டாயம் ரிம் மற்றும் டயர் இடைவெளியில் இருந்து காற்று வெளியேறுகின்றது என அர்த்தம்.
இதுபோன்று நடக்கவில்லை எனில் வாகனத்தின் டயரில் எந்த பிரச்னையும் இல்லை என்றே அர்த்தமாகும். அதேவேளையில், குமிழ்வுகள் உருவாகிக் கொண்டிருந்தால் அதைக் கட்டாயம் மெக்கானிக்கிடம் காண்பிக்க வேண்டும். இல்லை எனில் வீட்டிலேயே வைத்து அதை சரி செய்வதற்கான வழிகளை பார்க்கலாம். இதற்கான பஞ்சர் ப்ரூஃப் திரவங்கள் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இதை டயருக்குள் உட்செலுத்துவதன் வாயிலாக பஞ்சர் ஆனாலும் காற்று வெளியேறுவதை தவிர்க்க முடியும். இதுதவிர மற்றொரு வழியையும் நம்மால் பயன்படுத்த முடியும். அதவாது, ரிம்மையும், வீலையும் தனியாக கழட்டி அதன் பின்னர் வீல்களைச் சுத்தப்படுத்த வேண்டும். துருக்கள் அல்லது தூசிகள் ஏதேனும் இருந்தால் அது வெளியேற்றப்படும்.
இதனாலும் காற்று வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சுத்தம் செய்த பின்னர் காற்று வெளியேறுவதை தவிர்க்கும் விதமாக அந்த ரிம்மில் பெயிண்ட் பூச்சு செய்துகொள்ளலாம். இதன் வாயிலாகவும் காற்று வெளியேறுவதை தவிர்க்க முடியும். இதற்கு ஒரு சில நூறு ரூபாய்கள் மட்டுமே செலவாகும்.
மெக்கானிக்கிடம் செல்லும்பட்சதில் ஒரு சில ரூபாய்கள் மட்டுமே கூடுதலாக செலவாகும். அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால், நீங்களாக சரி செய்வதை தவிர்த்துவிட்டு, மெக்கானிக்கை நாடுவதே நல்லது. விரைவில் இதற்கான பலனை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். டயர் அதிகம் தேய்ந்து காணப்பட்டால், அதை மாற்றுவதே நல்லது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பள்ளம், மேடுகள் இல்லாத சாலையைக் காண்பது மிக மிக அரிது. ஆகையால், நம்மில் பலர் இந்த விநோத டயர் பிரச்னைச் சந்தித்து இருப்பீர். இந்த மாதிரியான சூழலுக்கு என்ன காரணம் என்பதை இப்போது அறிந்திருப்பீர்கள். ஆகையால், காற்று அடிக்கடி வெளியேறுவதைக் கண்டு பயப்படாமல் நீங்களே இனி வரும் காலங்களில் அதை சரி செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









