எலெக்ட்ரிக் வாகனம் பத்தி இவ்வளவு புரளிய கிளப்பியிருக்காங்களா? இதையெல்லாம் நம்பாதீங்க மக்களே!
இன்று உலகம் முழுவதும் உலக இவி தினம் கொண்டாடப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் உலகில் பிரபலமாகி வரும் நிலையில் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க சில தயக்கங்கள் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து மார்க்கெட்டில் இருக்கும் புரளிகள் தான். இப்படியாக மார்க்கெட்டில் வாகனங்கள் குறித்து இருக்கும் புரளிகள் பற்றி தான் இங்கு விரிவாக காணப்போகிறோம்.
இன்று உலகம் முழுவதும் அறிவியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதில் முக்கியமான மாற்றம் தற்போது வாகனங்களில் பயன்பாட்டில் இருக்கும் பெட்ரோல், டீசல் இன்ஜினுக்கு பதிலாக எலெக்ட்ரிக் மோட்டார்கள் பயன்படுத்தி பெறுவது தான். பெட்ரோல் டீசல் இன்ஜின்கள் அதிகமான மாசுவை வெளியேற்றுகிறது எலெக்ட்ரிக் இன்ஜின்கள் அதைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு வாகனங்களை செயல்பட வைக்கிறது.

கடந்த 2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவில் 38லட்சம் பயணிகள் கார்கள் விற்பனையாகியுள்ளது. இதில் 53,843 கார்கள் மட்டுமே எலெக்ட்ரிக் கார்களாக இருக்கிறது. அதாவது ஒட்டுமொத்த விற்பனையில் 1.49% மட்டுமே எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியுள்ளது. இவ்வளவு குறைவான விற்பனைக்கு மார்க்கெட்டில் இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த புரளியை மக்கள் உண்மையான நம்புவது ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இப்படி எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து பரவலாக உள்ள புரளிகளையும் அது குறித்த விளக்கங்களையும் காணலாம்.
கையாள்வது கடினம்: எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் தயாரிக்கிறார்கள். இதனால் பெட்ரோல், டீசல் இன்ஜின் வாகனங்களை பயன்படுத்துவதை விட இது பயன்படுத்துவது சுலபமாக தான் இருக்கும். பெட்ரோல் டீசல் இன்ஜின் வாகனங்களில் மொத்தம் 2000 நகரும் பாகங்கள் செயல்பட்டால் தான் கார் நகர முடியும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் வெறும் 20 நகரும் பாகங்கள் மட்டுமே உள்ளன.

நகரும் பாகங்களின் எண்ணிக்கை குறைவதால் அதன் பராமரிப்பு குறையும் அதே நேரத்தில் அது பழுதாகும் வாய்ப்புகளும் குறைகிறது. இந்தியாவில் பிஎஸ் 6 மாசு கட்டுப்பாட்டு அமலில் இருக்கிறது. இதற்காக பெட்ரோல் டீசல் வாகனங்களில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உட்பகுத்தப்பட்டு மாசுகள் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இவி வாகனங்களில் அந்த மாதிரியான எந்த பொருட்களும் சேர்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ரேஞ்ச் குறித்த பயம்: இவி வாகனங்களை வாங்கும் மக்களுக்கு இருக்கும் முக்கியமான பயம் இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டு எவ்வளவு தூரம் ஓட்டிச் செல்ல முடியும் என்பது தான். மார்க்கெட்டில் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் வாகனம் ஒரு முறை சார்ஜ் போட்டால் 453 கிலோ மீட்டர் பயணிக்கும், ஹூண்டாய் அயானிக் 631 கிலோமீட்டர், எம்ஜி ஸிஎஸ் இவி 521 கிலோமீட்டர் பயணிக்கும் என சான்று அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஆமதாபாத், ஹைதராபாத், சண்டிகர், கொச்சி ஆகிய நகரங்களில் சராசரியாக உள்ள நகர பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் ஒரு நாளைக்கு 10-13 கிலோமீட்டர் வரை பயணிக்கின்றன. கொல்கத்தா, லக்னோ, விஜயவாடா, போபால், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் சராசரியாக வாகனங்கள் 3-7 கிலோமீட்டர் வரை பயணிக்கின்றன. இதனால் உள்ளூர் பயணத்திற்கு இவி கார் ஏற்றதாக இருக்கும் எந்த வகையிலும் பெட்ரோல் டீசல் கார்களை விட குறைச்சலாக இருக்காது.
காரின் விலை மற்றும் பராமரிப்பு செலவுகள்: இவி கார்களை மக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்ட முக்கியமான காரணம் அதன் விலை ஆகும். ஆனால் தற்போது இந்தியாவில் ரூபாய் 7 லட்சம்-1 கோடி ரூபாய் வரை இவி கார்கள் விற்பனையாகி வருகின்றன. டாடா நெக்ஸான் இவி காரை எடுத்துக் கொள்வோம். இது 453கி.மீ ரேஞ்சை முழு சார்ஜில் தரும் எனக் கூறுகிறார்கள் ரியல் வேல்டில் 254கி.மீ தருகிறது என்றே வைத்துக் கொள்வோம்.

டாடா நெக்ஸான் பெட்ரோல் கார் ஒரு லிட்டருக்கு 14கி.மீ மைலேஜ் தருகிறது. அப்படி என்றால் 100கி.மீ பயணிக்க பெட்ரோல் காரில் ரூ 714 மதிப்பிலான பெட்ரோல் செலவாகும். அதுவே இவி காரில் 100கி.மீ பயணிக்க ரூபாய் 65 செலவில் காரை ரீசார்ஜ் செய்துவிடலாம். அதாவது 10% குறைவான செலவுதான் ஆகிறது. இதை நீங்கள் கணக்கிட்டு பார்த்தால் பெட்ரோல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் லாபகரமாக இருக்கும்.
பேட்டரியை சார்ஜ் செய்ய எவ்வளவு செலவாகும்: பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்களில் வீட்டிலேயே ஷேர் செய்ய சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன. இதுபோக பொது இடங்களிலும் சார்ஜிங் மையங்கள் இருக்கிறது. வீட்டில் சார்ஜ் செய்ய ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷனுக்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கட்டணம் தான் டெல்லியை பொறுத்தவரை எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 4.60 தான் செலவாகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் இல்லாமல் நடுவழியில் நிற்குமா: எலெக்ட்ரிக் வாகனங்களை டிசைன் செய்யும் போதே இந்த பிரச்சனையை யோசித்து இதற்கான ஒரு தீர்வையும் அதன் தயாரிப்பாளர்கள் வழங்குகின்றனர். அதன்படி வாகனத்தில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது? இருக்கும் சார்ஜில் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்? என்ற தகவல்கள் எல்லாம் டேஷ் போர்டிலேயே டிஸ்ப்ளே செய்யப்படும்.
இதன் மூலம் ஓட்டுநர் தாங்கள் செல்ல வேண்டிய இடம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது. அடுத்த சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கணக்கிட்டு அதற்கு தகுந்தார் போல் வாகனத்தை பயன்படுத்த முடியும். இதனால் வாகனம் சார்ஜ் இல்லாமல் நடுரோட்டில் நிற்பதை தவிர்க்க முடியும். சரியான திட்டமிடல் இருந்தால் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகச் சிறப்பாக செயல்படும்.
மழை காலங்களில் கார் பழுதாகுமா?: பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்களின் காரின் பேட்டரி காரின் அடிப்பாகத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியுள்ள சாலையில் செல்லும்போது தண்ணீர் பேட்டரிக்குள் ஏறி பேட்டரி முழுமையாக பாதிக்கப்படும் என்ற புரளி மக்கள் மத்தியில் அதிகம் பரவி இருக்கிறது.
ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான இபி வாகனங்கள் ஐபி 67 ரேட்டிங் கொண்ட பேட்டரியை தான் பயன்படுத்துகின்றன. அப்படி என்றால் இந்த பேட்டரி சுமார் 1 மீட்டர் ஆழம் உள்ள தண்ணீரில் தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை எந்தவித பாதிப்பும் இல்லாமல் செயல்படும் அளவிற்கு திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என அதர்தமாகும். இதற்குள் தண்ணீர் செல்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் பெர்பார்மன்ஸ் குறைவானதா? பலர் எலெக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல் டீசல் வாகனங்களை போல அதிக பவர் பெர்பார்மன்ஸை வெளிப்படுத்தாது. மெதுவாக தான் பயணிக்கும் என்று நம்பி வருகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான புரிதல் எலெக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் அதன் முழு டார்க்கை உடனடியாக வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
இதில் எந்த வித கியர்களும் கிடையாது. அதனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஆக்ஸிலேட்டரை அழுத்தியவுடன் அதன் திறன் முழுமையாக திறன் கிடைக்கும். ஆனால் பெட்ரோல் டீசல் வாகனங்களில் அப்படியல்ல அதன் கியரை பொறுத்துதான் அதன் திறன் மாறுபாடு ஏற்படும். அதே நேரம் ஆர்பிஎம் பொருத்து திறன் மாறுபடும்.
ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கும் பேட்டரியை மாற்ற வேண்டுமா? : இவி வாகனம் வாங்கும் போது பலருக்கு இருக்கும் சந்தேகம் பேட்டரியின் செயல்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும் இதனால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் பேட்டரியை மாற்ற வேண்டும் என தவறாக நினைக்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலான இவி தயாரிப்பாளர்கள் பேட்டரிக்கு 8 முதல் 10 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்குகின்றனர். வாரண்டியே இவ்வளவு காலம் என்றால் அதை விட தாண்டியும் இது உழைக்கும். பேட்டரி தன் ஆயுளை இழந்தாலும் அதை மீண்டும் புதுப்பித்து மீண்டும் வேறு வாகனங்களில் பேட்டரி ஆக பயன்படுத்த முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மவுசு அதிகமாகி கொண்டு இருந்தாலும் மக்கள் மத்தியில் இதை வாங்குவதற்கு சில தயக்கங்கள் இருக்கிறது. ஆனால் உண்மையில் இதை ஆய்வு செய்து பார்க்கும்போது பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறப்பாக தான் இருக்கிறது. மக்கள் எந்த வித தயக்கமும் இல்லாமல் சரியாக யோசித்து தங்களுக்கான காரை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications
