இந்த எஸ்யூவி கார்களில் பாதுகாப்புக்கு எந்த குறையும் இருக்காது!! 5 ஸ்டார்ஸ் சும்மா ஒன்னும் கொடுக்கல...
மைலேஜ் பார்த்து புது கார் வாங்கும் காலம் போய், தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புதியதாக கார் வாங்கும்போது, அந்த காரில் உள்ள தொழிற்நுட்ப அம்சங்கள் என்னென்ன? என்பதையும், பாடி கட்டமைப்பு எந்த அளவிற்கு உறுதியாக உள்ளது? என்பதையும் ஆராயும் அளவிற்கு ஆழமாக இறங்குகின்றனர். இதில், க்ளோபல் என்சிஏபி வழங்கும் மதிப்பெண்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன.
டாடா நெக்ஸான் (Tata Nexon): இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக உள்ளது. 2017இல் அறிமுகம் செய்யப்பட்ட நெக்ஸான் 2018ஆம் ஆண்டில் முதல்முறையாக க்ளோபல் என்சிஏபி-இல் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. அப்போது முழு 5 ஸ்டார்களையும் பெற்று, டாடா நிறுவனத்தை மட்டுமில்லாமல், மொத்த இந்திய தயாரிப்புகளையும் நெக்ஸான் பெருமைப்படுத்தியது. இந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் க்ளோபல் என்சிஏபி-இல் சோதனை செய்யப்பட்ட 2024 நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரும் 5 ஸ்டார்களை அள்ளியுள்ளது.

டாடா ஹெரியர் & சஃபாரி (Tata Harrier & Safari): டாடா மோட்டார்ஸின் விலையுயர்ந்த கார்களான இவை, க்ளோபல் என்சிஏபி-இல் 5 ஸ்டார்களை பெற்றுள்ளன. இதில், டாடா ஹெரியர் கார் தான் இந்தியாவின் பாரத் என்சிஏபி-இல் முதலாவதாக கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட கார் ஆகும். இந்த விலைமிக்க டாடா கார்கள் இரண்டிலும் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகளை பெற முடியும்.

டாடா பஞ்ச் (Tata Punch): டாடா மோட்டார்ஸின் அளவில் சிறிய மைக்ரோ-எஸ்யூவி காரான பஞ்ச் கடந்த வருடத்தில் அனைவரையும் ஆச்சிரியமளிக்கும் வகையில் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. க்ளோபல் என்சிஏபி-இல் பஞ்ச் காருக்கு ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்ட மதிப்பெண்கள் 57.34 புள்ளிகள் ஆகும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் & ஸ்கோடா குஷாக் (Volkswagen Taigun & Skoda Kushaq): இந்த இரு காம்பெக்ட் எஸ்யூவி கார்களும் ஒரே மாதிரியான பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். ஏனெனில், ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா இரண்டும் கூட்டணியில் உள்ளன. குழந்தைகள் பாதுகாப்பில் மேற்கூறப்பட்டுள்ள டாடா கார்கள் கூட 5 ஸ்டார்களை பெறவில்லை. ஆனால், இந்த ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் கார்கள் 5 ஸ்டார்களை பெற்றுள்ளன.

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N): இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா காரான ஸ்கார்பியோ-என் மாடலும் இந்தியாவின் பாதுகாப்பான எஸ்யூவி காராக விளங்குகிறது. க்ளோபல் என்சிஏபி-இல் பெரியவர்கள் பாதுகாப்பில் இந்த கார் முழு 5 ஸ்டார்களை பெற்று இருப்பினும், குழந்தைகள் பாதுகாப்பில் வெறும் 3 ஸ்டார்கள் மட்டுமே பெற்றுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700): இந்திய மார்க்கெட்டில் தற்போதைக்கு விலைமிக்க மஹிந்திரா காராக விளங்கும் எக்ஸ்யூவி700 க்ளோபல் என்சிஏபி-இல் பெரியவர்கள் பாதுகாப்பில் முழு 5 ஸ்டார்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 4 ஸ்டார்களையும் பெற்றுள்ளது. க்ளோபல் என்சிஏபி-இல் ஒட்டுமொத்தமாக இந்த கார் பெற்ற மதிப்பெண்கள் 57.69 ஆகும். ஸ்கார்பியோ-என் உடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவு ஆகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300): இந்த வரிசையில் நாம் பார்க்கும் 3வது மஹிந்திரா கார் இதுவாகும். க்ளோபல் என்சிஏபி-இல் முழு 5 நட்சத்திரங்களை பெற்ற முதல் மஹிந்திரா கார் இதுவாகும். க்ளோபல் என்சிஏபி-இல் ஒட்டுமொத்தமாக 53.86 மதிப்பெண்களை பெற்றுள்ள எக்ஸ்யூவி300 காருக்கு பெரியவர்கள் பாதுகாப்பில் 5 ஸ்டார்களும், குழந்தைகள் பாதுகாப்பில் 4 ஸ்டார்களும் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லிஸ்ட்டில் டாடா மற்றும் மஹிந்திரா கார்கள் தான் அதிகமாக இருப்பதை காணலாம். அப்படியென்றால், டாடா மற்றும் மஹிந்திரா கார்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பானவை ஆக உருவாக்கப்படுகின்றன என்பதை அறியலாம். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா இரண்டும் ஓர் முழு இந்திய கார் உற்பத்தி நிறுவனங்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications









