இப்படியொரு கார் வந்ததே நம்மில் நிறைய பேருக்கு தெரியாது!! நாம் கண்டு கொள்ளாமல் போன 5 தரமான கார்கள்!
இந்தியா (India), உலகின் மிக பெரிய கார் சந்தைகளுள் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜப்பானை முந்தி சமீபத்தில்தான் உலகின் 3வது மிக பெரும் கார் மார்க்கெட் என்கிற சிறப்பை நம் இந்தியா பெற்றது. இன்னும் நமக்கு முன்பாக அமெரிக்கா, சீனா என்ற 2 நாடுகள் மட்டுமே உள்ளன.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் 1 மாதம் முழுக்க விற்பனையாகும் கார்கள் நம் நாட்டில் வெறும் சில மணிநேரங்களில் விற்பனையாகி விடுவதாக சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பை பெற்ற பல்வேறு கார்கள் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன, தற்போதும் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.
இருப்பினும், சில கார்கள் நம் இந்திய மார்க்கெட்டில் எடுப்படாமல் போய் உள்ளன. அதாவது, வெளிநாட்டில் அவற்றிற்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்திருக்கலாம், ஆனால் இந்தியாவில் அவற்றின் விற்பனை எடுப்படவில்லை. இதனால், ஒரு கட்டத்திற்கு மேல் அவற்றின் விற்பனையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வாறு, இந்திய மக்களை கவராமல் சென்ற 5 தரமான கார்களை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

மாருதி சுஸுகி கிஸாஷி (Maruti Suzuki Kizashi): ஜப்பானில் மிகுந்த வரவேற்பை பெற்றுவந்த, சுஸுகி கிஸாஷி காரை 2011ஆம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கிஸாஷி கார்கள் நம் நாட்டில் விற்பனையாகவில்லை. இதற்கு முக்கிய காரணம், கிஸாஷி காரின் அதிகமான விலை ஆகும். ஏனெனில், இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை.

டொயோட்டா யாரிஸ் (Toyota Yaris): இந்த டொயோட்டா செடான் காரை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஏனெனில், யாரிஸ் காரின் விற்பனையை சில வருடங்களுக்கு முன்புதான் டொயோட்டா நிறுவனம் நிறுத்தியது. இந்த காரின் விற்பனை போதிய அளவுக்கு இல்லாததற்கும், காரின் அதிகமான விலை முக்கிய காரணம் ஆகும். அதேபோல், யாரிஸில் டீசல் என்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படாததும் குறையாக பார்க்கப்பட்டது.

ஸ்கோடா ஆக்டாவியா காம்பி (Skoda Octavia Combi): ஐரோப்பிய மக்களால் அதிகம் வாங்கப்பட்ட எஸ்டேட் ரக கார்கள் இந்தியாவில் கடைசி வரையில் ஜொலிக்கவே இல்லை. இந்த வகையில், ஸ்கோடாவின் ஆக்டாவியா காம்பி காரையும் நம் மக்கள் பெரியதாக கண்டுக் கொள்ளவில்லை. இந்தியாவில் 2002இல் இந்த எஸ்டேட் காரை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்தது.

ஸ்கோடா யெட்டி (Skoda Yeti): ஜெர்மன் தரத்தில் தரமானதாக உருவாக்கப்பட்டாலும், யெட்டி காரின் தோற்றம் பெரியதாக நம் இந்தியர்களை கவரவில்லை. 2.0 லிட்டர் என்ஜின் உடன் உருவாக்கப்பட்ட ஸ்கோடா யெட்டி கார் 4x2 மற்றும் 4x4 திறன்களில் உருவாக்கப்பட்டது. டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களமிறக்கப்பட்டதே ஸ்கோடா யெட்டி காரின் தோல்விக்கு காரணம் ஆகும்.

டாடா ஹெக்ஸா (Tata Hexa): டாடா அரியா என்ற மார்க்கெட்டில் தோல்வியுற்ற காரை அடிப்படையாக கொண்டு ஹெக்ஸாவை டாடா மோட்டார்ஸ் உருவாக்கியது. இதுவே, ஹெக்ஸாவின் தோல்விக்கு காரணம் ஆகும். இருப்பினும், ஹெக்ஸா காரை வாங்கியவர்கள் அதன் ஹேண்ட்லிங் மற்றும் சவுகரியத்தை பாராட்டினர். இருந்தாலும், டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக விற்பனை செய்யப்பட்டதால் ஹெக்ஸா காரின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 5 கார்களில் பெரும்பாலானவற்றின் விற்பனை அவற்றின் அதிகப்படியான விலையின் காரணமாகவே சிறப்பாக இல்லை. இந்த 5 கார்கள் மட்டுமின்றி, இன்னும் வேறு சில கார்களும் கூட நம் இந்திய மார்க்கெட்டில் வெற்றி பெறவில்லை. ஆனால், அவற்றுள் இந்த 5 மாடல்கள் மட்டுமே தரத்திலும், செயல்படுதிறனிலும் சிறப்பானவைகளாக இருந்தும் வெற்றி பெறாததால் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம்.


Click it and Unblock the Notifications









