பிரம்மாண்ட ஆர்டரை தட்டி தூக்கிய தமிழக நிறுவனம்... ஆயிரக்கணக்கான பஸ்களை ஒரே ஆளா வாங்க போறது அவங்களா!
இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று அசோக் லேலண்ட் (Ashok Leyland). தமிழக தலைநகர் சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அசோக் லேலண்ட் நிறுவனம், லாரி மற்றும் பஸ்கள் போன்ற வர்த்தக வாகனங்களின் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. இதில், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பஸ்களை இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளின் போக்குவரத்து கழகங்களும் பயன்படுத்தி வருகின்றன. எம்எஸ்ஆர்டிசி என சுருக்கமாக அழைக்கப்படும் மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகமும் (Maharashtra State Road Transport Corporation) இதில் ஒன்றாகும்.
தற்போதைய நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து கழகங்களில் ஒன்றாக உள்ள எம்எஸ்ஆர்டிசி-யிடம் ஒட்டுமொத்தமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இருக்கின்றன. இந்த சூழலில், தற்போது மிகப்பெரிய பஸ் ஆர்டர் ஒன்றை, அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு எம்எஸ்ஆர்டிசி வழங்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது 2,104 பஸ்களுக்கான பிரம்மாண்டமான ஆர்டர் ஆகும். இதன் மதிப்பு 981.45 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய சிஎம்விஆர் (CMVR - Central Motor Vehicles Rules) தரநிலைகளுக்கு இணக்கமானதாக இந்த பஸ்கள் இருக்கும். அத்துடன் AIS 153 விதிமுறைகளுக்கு இணக்கமான கட்டமைப்பை இந்த பஸ்கள் கொண்டிருக்கும்.
செயல்திறனை பொறுத்தவரையில் இந்த பஸ்களில் 197 ஹெச்பி ஹெச்-சீரிஸ் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பஸ்களின் பின் பகுதியில் ஏர் சஸ்பென்ஸன் வழங்கப்பட்டிருக்கும். மேலும் பயணிகளுக்கு சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கு தேவையான அதிநவீன வசதிகளும் இந்த பஸ்களில் இடம்பெற்றிருக்கும்.

இது குறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான ஷெனு அகர்வால் (Shenu Agarwal) கூறியது பின்வருமாறு: மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகத்துடனான எங்களது நீண்ட கால உறவு தொடர்வது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
திறன் மிக்க மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட தயாரிப்புகளை உருவாக்குவதில் எங்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வை இந்த புதிய ஆர்டர் எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. எங்களுடைய வாடிக்கையாளர்களை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். அத்துடன் அவர்களின் தேவைகளை விரைவாக பூர்த்தி செய்கிறோம்.
இந்த விஷயங்கள், எங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. இவ்வாறு ஷெனு அகர்வால் கூறினார். மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகம் மிகப்பெரிய ஆர்டர் வழங்கியதன் காரணமாக, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 2 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் பொது போக்குவரத்து வளர வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த பிரம்மாண்டமான புதிய ஆர்டரின் மூலமாக, இந்தியாவின் பொது போக்குவரத்து அமைப்பின் வளர்ச்சிக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் குறிப்பிடத்தக்க வகையில் தனது பங்களிப்பை வழங்குகிறது என்பது சிறப்பான ஒரு விஷயம்.


Click it and Unblock the Notifications








