17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் ஆடி செய்துள்ள சாதனை... இதுக்கு இத்தனை வருஷமா?
ஆடி (Audi) நிறுவனம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் வெற்றிக்கரமாக 1 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இந்தியாவில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள ஆடி நம் நாட்டில் 2007ஆம் ஆண்டில் இருந்து அதன் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வகையில் பார்த்தால், கார்கள் விற்பனையில் 1 லட்சம் மைல்கல்லை அடைய இந்த நிறுவனத்திற்கு 17 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. இதுகுறித்தும், இந்தியாவில் ஆடி நிறுவனம் விற்பனை செய்யும் கார்கள் குறித்தும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜெர்மனியில் இருந்து பல்வேறு லக்சரி கார் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அந்த நிறுவனங்களில் ஒன்றுதான் ஆடி ஆகும். ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பில் அங்கம் வகிக்கும் ஆடி இந்தியாவில் லக்சரி கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு அடுத்து 3வது இடத்தில் உள்ளது.

சீனா, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்து நமது இந்தியா ஆனது ஆடி நிறுவனத்திற்கு மிக முக்கியமான மார்க்கெட்டாக விளங்குகிறது. 2007ஆம் ஆண்டில் இந்தியாவில் கார்களை விற்பனை செய்ய ஆடி நிறுவனம் துவங்கியது. 2007க்கு முன்பும் சில ஆடி கார்கள் இந்தியாவில் உள்ளவர்களால் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், அவை வெளிநாட்டில் இருந்து கஸ்டம்ஸ் மூலமாக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டவை ஆகும்.
இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக கார்களை விற்பனை செய்ய ஆடி நிறுவனம் ஆரம்பித்தது 2007ஆம் ஆண்டில் ஆகும். 2007ஆம் ஆண்டில் ஏறக்குறைய 350 கார்களை இந்தியாவில் ஆடி விற்பனை செய்தது. ஆரம்பத்தில் ஏ4 போன்ற கார்களை ஆடி அறிமுகம் செய்தாலும், ஆடி க்யூ7 மற்றும் க்யூ5 போன்ற கார்களுக்கே உடனடியாக இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் கிடைக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், இந்தியாவில் கார்கள் விற்பனையில் வெற்றிக்கரமாக 1 லட்சம் என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை ஆடி நிறுவனம் சுமார் 17 வருடங்களுக்கு பிறகு கடந்துள்ளது. இதன்படி பார்த்தால், சராசரியாக ஒவ்வொரு வருடத்திலும் 5,500இல் இருந்து 6,000 ஆடி கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எலக்ட்ரிக் கார்கள் விற்பனையிலும் ஆடி நிறுவனம் தீவிரம் காட்டி வருவதால், இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அடுத்ததாக க்யூ8 என்கிற விலையுயர்ந்த லக்சரி எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஆடி க்யூ8 எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் சமீபத்தில்தான் துவங்கப்பட்டன. விருப்பப்படுபவர்கள் ரூ.5 லட்சம் டோக்கன் தொகை உடன் இந்த காரை புக் செய்யலாம்.
மொத்தம் 8 விதமான கலர் ஆப்ஷன்களில் ஆடி க்யூ8 இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த புதிய ஆடி காருக்கு உள்ளே டேஸ்போர்டில் 3 திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 3 திரைகள் இன்ஃபோடெயின்மெண்ட், ஏசி கண்ட்ரோல் பேனல் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கானவை ஆகும். க்யூ8 காரில் 3.0 லிட்டர் டி.எஃப்.எஸ்.ஐ என்ஜின் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான புதிய அறிமுகங்களினால் ஆடி கார்கள் விற்பனை அதிகரிக்கும் என்பது உறுதி. முதல் 1 லட்சம் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு 17 வருடங்களை எடுத்துக் கொண்ட ஆடி நிறுவனம் அடுத்த 1 லட்சம் கார்களை எத்தனை வருடங்களில் விற்பனை செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








