டாடா கார்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை - எல்லாமே 5-ஸ்டார் ரேட்டிங் கார்கள்!! பாரத் என்சிஏபி...
பாரத் என்சிஏபி (Bharat NCAP), நாட்டில் விற்பனை செய்யப்படும் கார்களின் தரத்தை அறிவதற்காக இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்திய சோதனை குழு ஆகும். க்ளோபல் என்சிஏபி, ஆசியன் என்சிஏபி, ஐரோப்பிய என்சிஏபி உள்ளிட்டவை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பாரத் என்சிஏபி இணைந்துள்ளது. மத்திய அரசு பாரத் என்சிஏபி -ஐ கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. ஆனால், பாரத் என்சிஏபி-இல் கார்களை சோதனை செய்யும் பணிகள் டிசம்பர் மாதத்தில் இருந்துதான் துவங்கின. அப்போதில் இருந்து தற்சமயம் வரையில் மொத்தம் 4 கார்கள் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அவை நான்கும் டாடா மோட்டார்ஸின் எஸ்யூவி கார்கள் ஆகும்.
1. டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV): பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் சமீபத்தில் உட்படுத்தப்பட்ட கார்களுள் ஒன்று. இதன் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் இந்த ஜூன் மாத துவக்கத்தில்தான் வெளியாகின. க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் டாடா நெக்ஸான் 5 நட்சத்திரங்களை அள்ளி ஆச்சிரியப்படுத்தியது. பாரத் என்சிஏபி-இல் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் வெர்சனான நெக்ஸான் இவி 5 ஸ்டார்களை பெற்றுள்ளது.

பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 29.86 மதிப்பெண்களையும், சிறியவர்கள் பாதுகாப்பில் 49க்கு 44.95 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.14.49 லட்சத்தில் இருந்து ரூ.19.49 லட்சம் வரையில் உள்ளன. ஒருமுறை சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 465கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக சான்றளிக்கப்பட்டுள்ள நெக்ஸான் இவி காருக்கு விற்பனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 போட்டியாக உள்ளது.
2. டாடா பஞ்ச் இவி (Tata Punch EV): நெக்ஸான் இவி உடன் சேர்த்து, சமீபத்தில் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்ட மற்றுமொரு டாடா கார் பஞ்ச் இவி ஆகும். இந்தியாவில் அதிக பேர் வாங்கும் எலக்ட்ரிக் காராக மாறிவரும் பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரும் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது.

பாரத் என்சிஏபி-இல் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு சுமார் 31.46 மதிப்பெண்களையும், சிறியவர்கள் பாதுகாப்பில் 49க்கு 45 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. பஞ்ச் இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.99 லட்சத்தில் இருந்து ரூ.15.49 லட்சம் வரையில் உள்ளன. மக்கள் மத்தியில் டாடா பஞ்ச் கார்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
3. டாடா ஹெரியர் (Tata Harrier): டாடா மோட்டார்ஸில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் 5-சீட்டர் எஸ்யூவி கார் ஹெரியர் ஆகும். இந்த கார் இந்த ஆண்டு துவக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக டாடா ஹெரியர் கார் பாரத் என்சிஏபி-இல் சோதனை செய்யப்பட்டது. அதாவது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாரத் என்சிஏபி-இல் சோதனை செய்யப்பட்ட முதல் கார்களுள் ஒன்று ஹெரியர் ஆகும்.

எதிர்பார்த்ததை போல், பாரத் என்சிஏபி-இல் டாடா ஹெரியருக்கு 5 நட்சத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காஸ்ட்லீயான டாடா கார் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 30.08 மதிப்பெண்களையும், சிறியவர்கள் பாதுகாப்பில் 49க்கு 44.54 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. டாடா ஹெரியரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.15.49 லட்சத்தில் இருந்து ரூ.26.44 லட்சம் வரையில் உள்ளன.
4. டாடா சஃபாரி (Tata Safari): ஹெரியரை காட்டிலும் விலையுயர்ந்த டாடா கார் சஃபாரி ஆகும். ஏனெனில், 5-சீட்டர் எஸ்யூவி காரான ஹெரியரின் 6/ 7-இருக்கை வெர்சனாக சஃபாரி விற்பனை செய்யப்படுகிறது. ஹெரியர் உடன் சேர்த்து சஃபாரியையும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாரத் என்சிஏபி-இல் கிராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தி இருந்தது.

ஹெரியரை போன்று, சஃபாரி காரும் கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, ஹெரியரை போன்று பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 30.08 மதிப்பெண்களையும், சிறியவர்கள் பாதுகாப்பில் 49க்கு 44.54 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. டாடா சஃபாரி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.16.19 லட்சத்தில் இருந்து ரூ.27.34 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாரத் என்சிஏபி-இல் உட்படுத்தப்பட்ட முதல் 4 கார்களும் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளன. இது எதிர்பாராத நல்ல ராசியாக பார்க்கப்படுகிறது. பாரத் என்சிஏபி-இல் அடுத்ததாக உட்படுத்தப்பட உள்ள கார்கள் எந்த அளவிற்கான மதிப்பெண்களை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, அடுத்ததாக நிஸான் மேக்னைட் உள்பட சில கார்கள் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications









