காரை புக் பண்ணா காருடன் சேர்த்து மேட்ச் டிக்கெட் இலவசம்!! இந்த டிக்கெட் கிடைக்குறது ரொம்ப கஷ்டமாச்சே...
பிஒய்டி சீல் இவி (BYD Seal EV) எலக்ட்ரிக் காருக்கான புக்கிங்குகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த எலக்ட்ரிக் காரை புக் செய்வோருக்கு அசத்தல் பரிசு ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன பரிசு? இந்த எலக்ட்ரிக் காரை முன்பதிவு செய்வதற்கு டோக்கன் தொகை எவ்வளவு? என்பது போன்ற விபரங்களுடன் சீல் இவி காரை பற்றிய விபரங்களையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சீனாவை சேர்ந்த பிரபலமான எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் பிஒய்டி ஆகும். சீனாவில் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளிலும் வணிகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிஒய்டி ஆனது டெஸ்லாவை போல் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் கார்களை மட்டும் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். சீன கார் நிறுவனமான பிஒய்டி 2021இல் இருந்து இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.

தற்சமயம் பிஒய்டி பிராண்டில் இருந்து 2 எலக்ட்ரிக் கார்கள் விற்கப்படுகின்றன. இ6 மற்றும் அட்டோ3 என்பன அவை ஆகும். 3வது எலக்ட்ரிக் காராக சீல் எலக்ட்ரிக் செடான் காரை பிஒய்டி இந்தியாவில் களமிறக்குகிறது. இந்த 2024 மார்ச் 5ஆம் தேதி இந்திய மார்க்கெட்டில் பிஒய்டி சீல் இவி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அப்போதுதான், இந்த எலக்ட்ரிக் காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் அறிவிக்கப்படும்.
எங்களுக்கு தெரிந்தவரையில் ரூ.50 லட்சம் என்கிற அளவில் பிஒய்டி சீல் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த சீன எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு நம் இந்தியாவில் துவங்கப்பட்டுவிட்டன. இதனை பற்றி ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பதிவிட்டு இருந்தோம். இந்த எலக்ட்ரிக் காரை புக் செய்வதற்கான டோக்கன் தொகையாக ரூ.1 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது, பிஒய்டி சீல் இவி எலக்ட்ரிக் காரை முன்பதிவு செய்பவர்களுக்காக ஓர் அசத்தலான அறிவிப்பை பிஒய்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, வருகிற 2024 ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் சீல் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் புக் செய்பவர்கள் ஐரோப்பாவில் நடக்கும் UEFA யூரோ சாம்பியன்ஷிப் 2024 போட்டியை நேரில் காணும் வாய்ப்பை பெறலாம். UEFA என்பது ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு என்பதன் ஆங்கில சுருக்கம் ஆகும்.
UEFA நடத்தும் 2024ஆம் ஆண்டிற்கான யூரோ சாம்பியன்ஷிப் போட்டி தொடருக்கான அதிகாரப்பூர்வ பார்ட்னராக பிஒய்டி உள்ளது. இதன் மூலமாகவே, சீல் எலக்ட்ரிக் காரை புக் செய்பவர்களை ஐரோப்பாவிற்கு இந்த கால்பந்து போட்டியை நேரில் காண அழைத்து செல்கிறோம் என தைரியமாக பிஒய்டி அறிவித்துள்ளது. கால்பந்து போட்டியை காண்பதற்கான டிக்கெட் உடன் சேர்த்து இந்தியாவில் இருந்து ஐரோப்பாவில் போட்டி நடக்கும் இடத்திற்கு செல்வதற்கான விமான டிக்கெட்களையும் பிஒய்டி வழங்கவுள்ளது.

இது ரவுண்ட்-ட்ரிப் ஆகும். அதாவது, கஸ்டமர்களை மீண்டும் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு விமானத்தில் பிஒய்டி அழைத்துவரும். 2024 ஜூன் 14ஆம் தேதி துவங்கி ஜூலை 14ஆம் தேதி வரையில் ஒரு மாத காலத்திற்கு ஜெர்மனி நாட்டில் உள்ள பல்வேறு ஸ்டேடியங்களில் UEFA யூரோ 2024 கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 51 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில் சில போட்டிகளுக்கு சீல் காரை புக் செய்யும் கஸ்டமர்களை பிஒய்டி நேரில் அழைத்து சென்று காட்டலாம். ஒரு கஸ்டமருக்கு ஒரு போட்டி என அட்டவணை வகுக்கக்கப்படலாம். சீல் இவி எலக்ட்ரிக் காரை ஏப்ரல் 30 வரையில் புக் செய்யும் அனைத்து கஸ்டமர்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்பது தெரியவில்லை. இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு பிஒய்டி டீலர்ஷிப் மையத்தை தொடர்பு கொள்ளவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.50 லட்சம் என்பது சீன மற்றும் ஐரோப்பிய மக்களுக்கு ஒரு காரை வாங்குவதற்கு ஏற்ற விலையாக இருக்கலாம். ஆனால், நம் இந்தியாவில் இவ்வளவு விலையில் ஒரு எலக்ட்ரிக் காரை வாங்குவதற்கு எத்தனைபேர் தயாராக உள்ளனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மற்றப்படி, பிஒய்டி சீல் இவி எலக்ட்ரிக் காரின் தொழிற்நுட்ப அம்சங்களிலும் சரி, பவர்டிரெயினிலும் சரி எந்த குறையும் சொல்ல முடியாது.


Click it and Unblock the Notifications









