வர திங்கள்கிழமை எல்லாரும் ஆபிசுக்கு லீவு சொல்ல போறாங்க! குடும்பத்தோட போற காருக்கு அன்றுதான் புக்கிங் தொடங்குது
இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் கியா கார்னிவல் லிமோசைன் (Kia Carnival Limousine)-ம் ஒன்றாகும். இந்த காருக்கே வர திங்கள்கிழமை முதல் புக்கிங் பணிகள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் அறிவிப்பின்படி, செப்டம்பர் 16, நள்ளிரவு 12 முதல் புக்கிங் பணிகள் தொடங்கப்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது. புக்கிங் கட்டணம் ரூ. 2 லட்சம் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. கியா கார் விற்பனையாளர்கள் ஏற்கனவே இந்த கார் மாடலுக்கான புக்கிங் பணிகளை அதிகாரப்பூர்வமற்ற நிலையில் ஏற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே தற்போது நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கார்னிவல் லிமோசைன் கார் மாடலுக்கான புக்கிங் பணிகளை தொடங்கி இருக்கின்றது. கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் மற்றும் கியா கார் விற்பனையகங்கள் வாயிலாக இந்த காரை வாடிக்கையாளர்களால் செப்டம்பர் 16 முதல் புக் செய்துக் கொள்ள முடியும்.

கியா கார்னிவல் லிமோசைன் ஓர் சொகுசு மற்றும் நவீன கால அம்சங்கள் நிரம்பிய எம்பிவி ரக கார் மாடல் ஆகும். குறிப்பாக, இந்த காரை பெரும் தொழிலதிபர்களுக்கு ஏற்ற ஓர் வாகனமாகவே கியா தயார் செய்திருக்கின்றது. அதேவேளையில், அதிக இருக்கைகளைக் கொண்ட வாகனமாகவும் இதனை அந்நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.
ஆகையால், குடும்பத்துடன் பயணிக்க ஏதுவான கார் மாடலாக கியா கார்னிவல் லிமோசைன் உள்ளது. வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி, இந்த கார் 7 மற்றும் 11 இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது. ஆனால், கியா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரத்தில், மற்ற சில சிறப்பம்சங்கள் இடம் பெற இருப்பதை அது உறுதி செய்திருக்கின்றது.
அந்தவகையில், இந்த காரில் சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு இரண்டாவது வரிசையில் லக்சூரி பவர்டு ரிலேக்சேஷன் வசதிக் கொண்ட இருக்கைகள் வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. தொடர்ந்து, கால்களுக்கும் சப்போர்ட் செய்யும் வசதி மற்றும் வெண்டிலேஷன் வசதியை ஆகியவற்றையும் கார்னிவல் கொண்டிருக்கும் என நிறுழனம் தெரிவித்து இருக்கின்றது.
இதுதவிர, ஒரே டச்-சில் ஸ்லைடாகும் டோர், மிகவும் அகலமான இரண்டு எலெக்ட்ரிக் சன்ரூஃப்கள், 12 ஸ்பீக்கர்கள் அடங்கிய போஸ் பிரீமியம் சவுண்டு சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த காரில் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதுதவிர, இரண்டு பெரிய திரைகளும் இந்த காரில் வழங்கப்பட இருப்பதை கியா உறுதி செய்திருக்கின்றது.
வளைவான இரண்டு திரைகளே அக்காரில் வழங்கப்பட இருக்கின்றன. இரண்டும் 12.3 அங்குலத்தில் இருக்கும். அதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று க்ளஸ்டராகவும் செயல்படும். இதுதவிர, இந்த காரில் லெவல் 2 அடாஸ் அம்சத்தை வழங்க இருப்பதையும் கியா உறுதி செய்திருக்கின்றது. இதன் வாயிலாக 23 விதமான தன்னாட்சி வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இன்னும் பல அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்களையும், சொகுசு வசதிகளையும் இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிற்கு கியா கார்னிவல் ஏற்கனவே பழக்கப்பட்ட கார் மாடல் ஆகும். இப்போது விற்பனைக்கு வர இருப்பது அதன் புதிய தலைமுறை வெர்ஷன் ஆகும்.
முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் மிகவும் கவர்ச்சியான மற்றும் அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாக புதிய தலைமுறை கார்னிவல் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய தலைமுறைக்கும் சிறப்பான வரவேற்பு இந்திய பணக்காரர்கள் மத்தியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் இந்தியாவில் புதிய தலைமுறை கார்னிவல் கார் மாடலை மட்டுமில்லைங்க, விரைவில் இவி9 கார் மாடலையும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் மிக சிறப்பான வரவேற்பையும், பல்வேறு விருதுகளையும் வென்ற கார் மாடலாக இவி9 இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலும்கூட. இதுவே கார்னிவல் கார் மாடலுடன் சேர்த்து விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








