இந்த காருக்கு இந்தியாவுல என்ன வேலை!.. மறைப்புகளுடன் சென்னை சாலையில் சுற்றி திரிந்த சீன கார்..
உலக புகழ்பெற்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா (Tesla)-விற்கே டஃப் கொடுக்கும் நிறுவனமாக உருவெடுத்து இருக்கின்றது சீனாவைச் சேர்ந்த பிஒய்டி (BYD) நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவில் முன்னணி பிராண்டாக இல்லை என்றால், உலகின் மற்ற நாடுகளில் இதற்கு நல்ல டிமாண்டும், வரவேற்பும் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே இந்தியாவையும் தன்னுடைய வசிய வளையத்திற்குள் சுருட்டிப் போடும் முயற்சியில் அந்த நிறுவனம் (பிஒய்டி) களமிறங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அதாவது, நிறுவனம் தன்னுடைய புதுமுக எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த வாகனமே தற்போது சென்னையில் மறைப்புகளுடன் சுற்றி திரிந்திருக்கின்றது.

பிஒய்டி புதுமுக காரின் வருகையை இன்னும் உறுதி செய்யவில்லை. விரைவில் அதுபற்றிய தகவலை அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், தன்னுடைய புதிய காரை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியிலேயே பிஒய்டி நிறுவனம் அதனை சோதனையோட்டத்திற்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றது. சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வரும் அந்த கார் பிஒய்டி நிறுவனத்தின் சீல் (Seal) மாடல் ஆகும்.
இது ஓர் செடான் ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த காரை நடப்பாண்டின் மார்ச் மாதத்திற்கு பிஒய்டி விற்பனைக்கு அறிமுகம் செய்துவிடும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், இந்த காரை பிஒய்டி இந்தியாவில் ஒரு முறை அறிமுகம் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
சென்ற ஆண்டில் இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றது. அப்போதே, இந்த சீல் செடானை பிஒய்டி இந்தியாவில் முதல் முறையாக வெளியீடு செய்தது. தற்போது அதனை விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் நிறுவனம் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. இதன் உயர்நிலை தேர்வு மிக மிக அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது.
உலக அளவில் இந்த எலெக்ட்ரிக் காரை இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வில் பிஒய்டி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. 61.4 kWh மற்றும் 82.5 kWh ஆகியவையே அவை ஆகும். இதில் முதல் ஒன்று ஓர் முழு சார்ஜில் 500 கிமீ ரேஞ்ஜையும், அடுத்த ஒன்று ஓர் முழு சார்ஜில் 700 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இரண்டு பேட்டரி பேக்குகளும் பிளேட் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை ஆகும். சிறிய பேட்டரி பேக்கை 110 kW வரையில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். பெரிய பேட்டரி பேக்கை 150 kW சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பேட்டரி பேக்கைப் போலவே எலெக்ட்ரிக் மோட்டார் விஷயத்திலும் இரண்டு விதமான ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. அந்தவரிசையில், 1 மோட்டார் மற்றும் இரட்டை மோட்டார் தேர்வே வழங்கப்படுகின்றன. இந்தியாவில் டூயல் மோட்டார் செட்-அப் தேர்வே முதலில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது அதிகபட்சமாக 530 எச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இதனால் அதிகபட்சமாக வெறும் 3.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும். இது ஹூண்டாய் ஐயோனிக் 5 மற்றும் கியா இவி6 ஆகியவற்றைக் காட்டிலும் கூடுதல் வேக திறன் ஆகும்.
இத்தகைய திறன் வாய்ந்த காரையே தற்போது இந்தியாவில் சோதனைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றது பிஒய்டி. இந்த நிலையிலேயே இந்த காருக்கு பிஒய்டி கார் விற்பனையாளர்கள் அதிகாரப்பூர்வமற்ற புக்கிங்கைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத்தொடர்ந்து விரைவில் இந்த காரின் டெலிவரி பணிகளும் தொடங்கப்படும் என கூறப்படுகின்றது. இதற்கு ரூ. 50 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஒய்டி ஆட்டோ உலக அளவில் சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் மட்டும் 5,26,409 யூனிட்டுகள் வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இது டெஸ்லாவைக் காட்டிலும் மிக மிக அதிகம் ஆகும். டெஸ்லா, இதே காலகட்டத்தில் 4,84,507 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைப் போலவே ஒவ்வொரு மாத விற்பனையிலும் டெஸ்லாவை வீழ்த்துக் கொண்டிருக்கின்றது சீன நிறுவனம்.


Click it and Unblock the Notifications








