மாருதியாலையே ஒன்னும் பண்ண முடியல.. இதுல சீன நிறுவனம் வேற வந்து மோத போகுதா!.. மூக்கு உடையாம இருந்தா சரிதான்!
தார் ராக்ஸ் (Thar Roxx), மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த காரை மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இந்த ஆகஸ்டு மாதத்தின் மத்தியில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 3 டோர் தார் கார் மாடலின் ஐந்து கதவுகள் கொண்ட வெர்ஷனே இந்த தார் ராக்ஸ் மாடல் ஆகும். இந்த கார் மாடலுக்கு போட்டியளிக்கும் விதமாக ஏற்கனவே சந்தையில் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) மற்றும் போர்ஸ் கூர்கா (Force Gurkha ) ஆகிய கார் மாடல்கள் விற்பனையில் உள்ளன.
இந்த கார் மாடல்களால் தார் மார்கெட்டை அசைத்துகூட பார்க்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்த நிலையிலேயே, மஹிந்திரா தன்னுடைய பலத்தை பெருக்கிக் கொள்ளும் பொருட்டு புதிய தார் ராக்ஸையும் களமிறக்கி இருக்கின்றது. இந்த கார் மாடலுக்கு போட்டியாகவே சீன கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD), நாட்டில் ஓர் பெரிய உருவம் கொண்ட ஆஃப்-ரோடர் எஸ்யூவி ரக காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் இந்தியாவில் பாவோ (Bao) எனும் கார் மாடலுக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதைய நிலவரப்படி பிஒய்டி நிறுவனத்தின்கீழ் இ6 எம்பிவி (e6 MPV) ரக காரும், அட்டோ 3 எஸ்யூவி (Atto 3 SUV) ரக காரும், சீல் செடான் (Seal Sedan) ரக காரும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
மூன்றுமே பிரீமியம் மற்றும் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் ரக கார் மாடல் ஆகும். இவற்றின் வரிசையிலேயே நான்காவதாக பிஒய்டி நிறுவனம் புதிய பாவோ கார் மாடலை விற்பனைக்கு இணைக்க இருக்கின்றது. உலக சந்தையில் இந்த பெயரில் ஏற்கனவே பிஒய்டி ஓர் கார் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பாவோ 5 எனும் பெயரில் சீன சந்தையில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆஃப்-ரோடு எஸ்யூவி கார் பிரிவிலேயே அது விற்கப்படுகின்றது. இதை வைத்தே இந்த கார் மாடல் இந்தியாவிலும் ஆஃப்-ரோடு எஸ்யூவி கார் பிரிவில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஃபோர்டு ப்ரோன்கோ (Ford Bronco) மற்றும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) போன்ற உலகப் புகழ்பெற்ற கார் மாடல்களுடன் ஒத்துப் போகும் தோற்றத்திலேயே இந்த பாவோ 5 கார் மாடலை பிஒய்டி தயார் செய்திருக்கின்றது. அதாவது, பாக்ஸி தோற்றத்திலேயே பாவோ தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த தோற்றமே அது ஓர் பிரீமுயம் தர கார் என்பதையும் உறுதிப்படுத்தும் விதமாக இருக்கின்றது. பிஒய்டி நிறுவனம் மின்சார கார் உற்பத்திக்காக அறியப்பட்டாலும், நிறுவனத்தின் பாவோ 5 கார் மாடல் ஐசிஇ எஞ்சினையேத் தாங்கியிருக்கின்றது. இதில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டாருடன் சேர்த்து இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களையும் இந்த காரில் பிஒய்டி வழங்கி இருக்கின்றது. இதற்கு தேவையான மின்சாரத்தை வழங்குவதற்காக 31.8 kWh பேட்டரி பேக்கையும் பிஒய்டி இந்த காரில் இணைத்திருக்கின்றது. எல்எஃப்பி பிளேட் (LFP Blade) வகை பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பெட்ரோல் எஞ்சின் ஆகிய இரண்டும் இணைந்து நான்கு வீல்களுக்கும் இயங்கும் திறனை வழங்கும். இந்த திறனே பாவோ 5-வை அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டதாக மாற்றியிருக்கின்றது. 677 எச்பி மற்றும் 760 என்எம் டார்க்கையே இந்த கார் உருவாக்கும் என கூறப்படுகின்றது.
மேலும், இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 180 கிமீ என தெரிகின்றது. மேலும், வெறும் 4.8 செகண்டுகளில் இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இத்தகைய திறன்மிக்க காராகவே பாவோ 5-னை பிஒய்டி தயார் செய்திருக்கின்றது.
மேலும், இத்தகைய திறன்மிக்க காராகவே பாவோ இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான அட்டோ 3, சீல் மற்றும் இ6 ஆகிய கார் மாடல்களைப் போலவே இதுவும் அதிகம் பிரீமியம் அம்சங்கள் தாங்கிய வாகனமாக இருக்கும் என கூறப்படுகின்றது. உலக சந்தையிலும் அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய காராகவே இது விற்பனையில் இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சொகுசு மற்றும் ஆடம்பர ரக கார் விரும்பிகள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக அட்டோ 3 காட்சியளிக்கின்றது. இந்த டிரெண்டை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே பிஒய்டி நிறுவனம் விரைவில் இந்தியாவில் ஓர் ஆஃப்-ரோடு காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









