மாருதி, ஹூண்டாய் ஓரமா போங்க.. இந்தியாவுக்கு புதுசா ஒரு பிராண்டு வர போகுது! இதோட முக்கிய இலக்கே டாடாதான்!
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களாக மாருதி சுஸுகி (Maruti Suzuki), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் ஹூண்டாய் (Hyundai) உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் விதமாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ (VinFast Auto) நிறுவனம் அதன் இந்திய வருகையை அறிவித்தது. இந்த நிறுவனம் உற்பத்தி ஆலையை இந்தியாவில் அமைக்கும் பணிகளையே தொடங்கிவிட்டது. தென் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்திலேயே வின்ஃபாஸ்ட் வாகன உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகின்றது.

விரைவில் இங்கு கார் உற்பத்தி பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மேலும் ஓர் புதுமுக நிறுவனம் இந்தியாவில் விரைவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் லீப் மோட்டார் (Leapmotor) எனும் பிராண்டே இந்தியாவில் கால்தடத்தைப் பதிக்க இருக்கின்றது.
இதை உறுதிப்படுத்துகின்ற விதமான தகவல்களே தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த பிராண்டும் ஓர் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமே ஆகும். ஆமாங்க, தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்க இருக்கும் வின்ஃபாஸ்ட்டும் ஓர் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம்தான். மேலும், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வரும் சீனாவைச் சேர்ந்த பிஒய்டி-யும் மின்சார வாகன உற்பத்தியாளர்தான்.

இந்த நிலையிலேயே மற்றுமொரு சீன மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான லீப் மோட்டார் இந்தியாவில் நுழைவதற்கான பணியில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. இது ஸ்டெல்லண்டிஸ் குழுமம் (Stellantis Group) உடனான இணைவின்கீழ் இந்தியாவில் இயங்க இருக்கின்றது. விரைவில் அடுத்து வரும் சில வாரங்களில் நிறுவனம் அதன் முதலீட்டு திட்டம் பற்றிய தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் விலை குறைவான கார்களை விற்பனைக்குக் கொண்டு வருவதே நிறுவனத்தின் நோக்கம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், இந்த பிராண்டின் வருகையால் மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தலை வலி ஏற்படும் என ஏற்படுகின்றது.

அதேவேளையில், இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் மின்சார கார் பிரிவில் டாடா மோட்டார்ஸே தலைவனாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பிராண்டின் மின்சார கார்களே நாட்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, டாடாவின் நெக்ஸான்.இவி மிக அமோகமான விற்பனை இந்தியர்களிடத்தில் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த வரவேற்பை உடைத்து தன் பக்கம் ஈர்க்கும் நோக்கிலேயே லீப் மோட்டார், ஸ்டெல்லன்டிஸ் கை கோர்த்து இந்தியாவில் நுழைய இருக்கின்று. லீப் மோட்டாரின் 20 சதவீத பங்கை ஸ்டெல்லன்டிஸ் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அது, 1.5 மில்லியன் யூரோக்களை லீப் மோட்டார் மீது முதலீடு செய்திருக்கின்றது.
லீப் மோட்டார் உலக நாடுகளில் குட்டியான எலெக்ட்ரிக் கார்கள் தொடங்கி பெரிய உருவம் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள் வரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளாக சி11 (C11), சி01 (C01) மற்றும் டி03 (T03) ஆகிய மாடல்கள் இருக்கின்றன.
இதில், டி03 கார் மாடலையே லீப் மோட்டார் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் மாடலை குட்டியான தோற்றம் கொண்ட ஹேட்ச்பேக் கார் மாடலே இதுவாகும். இது ஓர் முழு சார்ஜில் 403 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும்.
இது விற்பனைக்கு வந்தால் டாடா மோட்டார்ஸின் டியாகோ, டிகோர் மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படும் மாருதி சுஸுகியின் இவிஎக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும். மிக அதிக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய எலெக்ட்ரிக் காராகவும் லீப் மோட்டாரின் டி03 காட்சியளிக்கின்றது.
லெவல் 2 டிரைவிங் அசிஸ்டன் சிஸ்டம் (driving assistance system), 8 அங்குல முழு எல்சிடி திரை, 10.1 அங்கு தொடுதிரை, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், பூனையின் கண் போன்ற ஹெட்லைட்டுகள் மற்றும் 15 அங்குல அலுமினிய அலாய் வீல்கள் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை இந்த கார் தாங்கி இருக்கின்றது. குறிப்பாக, உரிமையாளரின் முகத்தைக் கண்டறிந்து சிறப்பு செயல்களை செய்யும் திறனையும் இந்த கார் கொண்டிருக்கின்றது. எனவே இந்த கார் விற்பனைக்கு வரும் எனில் மிகப் பெரிய புரட்சியை மின்சார கார்கள் பிரிவில் அது செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதைபோலவே நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளும் அதிக சிறப்புகளைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றன. அவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக லீப் மோட்டார் இந்தியாவில் வரும் நாட்களில் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவை இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சில கார் மாடல்களுக்கு சவால்விடும் வகையில் இருக்கும் என்றும் யூகிக்கப்படுகினறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதன் வருகை இந்தியாவில் டாடா மோட்டார்ஸ்க்கே மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தக் கூடியதாக அமைய இருக்கின்றது. இதுதவிர, வின்ஃபாஸ்ட் பிராண்டும் இதன் வருகையால் மிகப் பெரிய பாதிப்பைச் சந்திக்கும் என யூகிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இரண்டு நிறுவனங்களும் இன்னும் கால் தடம் பதிக்கவில்லை. விரைவில் அவை இந்தியாவில் களமிறங்கிய பின்னரே என்ன நடக்கும் என்பது தெரிய வரும்.


Click it and Unblock the Notifications









