தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார காருக்கு கிடைத்த பிரமாண்ட ஆர்டர்.. இத்தனை கார்களையும் வாங்கியது ஒரே ஆளா!
தமிழகத்தில் உற்பத்தி ஆலையை அமைத்து இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் சிட்ரோன்-ம் ஒன்றாகும். ஃபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இந்த கார் கம்பெனி சென்னையை அடுத்து உள்ள திருவள்ளூரிலேயே அதன் ஆலையை அமைத்து இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக இ-சி3 கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலுக்கே ஓர் பெருநிறுவனம் மிகப் பெரிய ஆர்டரை வழங்கி இருக்கின்றது. ஒன்றல்ல, இரண்டல்ல ஒட்டுமொத்தமாக 500 யூனிட்டுகள் இ-சி3 கார் மாடல்களுக்கே ஆர்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ரெஃபெக்ஸ் கிரீன் மொபிலிட்டி லிமிடெட் (Refex Green Mobility Limited) எனும் நிறுவனமே இந்த மாபெரும் ஆர்டரை வழங்கி இருக்கின்றது. மின்சார வாகனங்கள் சார்ந்து பன்முக வர்த்தக பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனமே இதுவாகும். இந்த நிலையிலேயே, தன்னுடைய சேவையை விரிவாக்கம் செய்யும் பொருட்டு இந்த மாபெரும் எண்ணிக்கையிலான ஆர்டரை அது வழங்கி இருக்கின்றது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே இரு நிறுவனங்களும் தற்போது கையொப்பமிட்டுள்ளன. முன்னணி நிறுவனங்கள் பல தங்களின் சேவையில் மின்சார வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன. இவை அதிகம் லாபம் ஈட்டி தரும், அத்தோடு சுற்றுச் சூழலுக்கும் நண்பனாக செயல்படும். இந்த காரணங்களுக்காகவே ஸ்விக்கி, அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களும் தங்களின் டெலிவரி சேவையில் மின்சார வாகனங்களை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே எலெக்ட்ரிக் வாகனம் சார்ந்து வாகன சேவையில் ஈடுபட்டு ரெஃபெக்ஸ் கிரீன் மொபிலிட்டி 500 சிட்ரோன் எலெக்ட்ரிக் கார்களை வாங்கி இருக்கின்றது. இந்தியாவில் சற்றே அதிக விலையில் விற்கப்படும், அதேவேளையில், அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களில் இ-சி3 -யும் ஒன்றாகும்.

மேலும், இது ஓர் ஹேட்ச்பேக் ரக எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடலான டியாகோ இவி-க்கு சவால் விடும் நோக்கில் இந்தியா கொண்டு வரப்பட்ட கார் மாடலே இதுவாகும். இந்த கார் இந்தியாவில் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஃபீல் (Feel) மற்றும் லைவ் (Live), இவையே அந்த தேர்வுகள் ஆகும். இந்த இரண்டிலும் அலங்காரம் மற்றும் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளில் மட்டுமே வித்தியாசம் தென்படும். எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பேக் ஆகியவற்றில் இந்த இரண்டும் ஒரே மாதிரியானதாகவே இருக்கும். அந்தவகையில், எலெக்ட்ரிக் காரில் 57 பிஎஸ் திறனை வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த மோட்டாருக்கான மின்சார திறனை வழங்க 29.2 kWh ஏர் கூல்டு பேட்டரி பேக்கே இ-சி3 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 320 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த எலெக்ட்ரிக் காரை வீட்டு சார்ஜிங் பாயிண்டில் வைத்தும்கூட சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
ஆனால், முழுமையாக சார்ஜாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். உதாரணமாக, 15A சாக்கெட்டைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யும்பட்சத்தில் 10 மணி நேரத்திற்கும் அதிகமான நேரங்களையே முழுமையாக சார்ஜாக எடுத்துக் கொள்ளப்படும். அதுவே, டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்தினால் வெறும் 57 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை அது ஏட்டிவிடும்.
இதேபோல், சிறப்பம்சங்கள் விஷயத்தில் இந்த எலெக்ட்ரிக் கார் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது. ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிக் கொண்ட 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் மிக முக்கியமான அம்சமாகும்.
இதுதவிர, மேனுவல் ஏசி, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் மற்றும் ரிமோட் லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவையும் இ-சி3 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல் பாதுகாப்பு வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்களே அதில் இடம் பெற்றிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த எலெக்ட்ரிக் காருக்கு மிகப் பெரிய ஆர்டர் கிடைப்பது இது முதல் முறையல்ல. சென்ற மாதத்தில்கூட இதேபோல் மிகப் பெரிய ஆர்டரை இந்த நிறுவனம் தன் வசம் ஈர்த்திருந்தது. கேப்-இ (Cab-E) நிறுவனம் சுமார் 2 ஆயிரம் யூனிட்டுகள் சி-இ3 எலெக்ட்ரிக் கார்களுக்கான ஆர்டரை வழங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே புதிய நிறுவனமாக 500 யூனிட்டுகளுக்கான ஆர்டர் தற்போது புதிதாக கிடைத்திருக்கின்றது. இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட் மட்டுமே ரூ. 12 லட்சத்து 76 ஆயிரத்து 300-க்கு விற்கப்படுகின்றது. இத்தகைய காஸ்ட்லியான தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு ஆர்டர் குவிந்துக் கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








