எத்தனை கனவுகளோடு இந்தியா வந்திருக்கும்... சிட்ரோன் கார்கள் விற்பனை இனியாவது சூடுப்பிடிக்குமா?
சிட்ரோன் (Citroen), இந்தியாவில் சமீப ஆண்டுகளில் நுழைந்த வெளிநாட்டு கார் நிறுவனங்களுள் ஒன்று. 2021ஆம் ஆண்டில் சி5 ஏர்கிராஸ் மூலமாக நுழைந்த சிட்ரோன், இந்தியாவில் தற்சமயம் மொத்தம் 5 விதமான கார்களை விற்பனை செய்கிறது. அவற்றுள் ஒரு எலக்ட்ரிக் காரும் உள்ளது. ஆனால், இத்தனை வருடங்களில் இந்தியாவில் சிட்ரோன் ஒரு நிலையான இடத்தை பிடித்ததா என கேட்டால், இல்லையென்று தான் சொல்ல வேண்டும். இதற்கு சாட்சியாக, நடந்து முடிந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட சிட்ரோன் கார்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் சிட்ரோன் அறிமுகப்படுத்திய முதல் காரான சி5 ஏர்கிராஸ், மார்க்கெட்டில் பெரிய தோல்வி கார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், ஆரம்பத்தில் இருந்தே இந்த காரின் விற்பனை பெரியதாக இல்லை. ஆனால், அதன்பின் சூதாரித்துக் கொண்ட சிட்ரோன், இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்றப்படி அளவில் சிறியதான கார்களை குறைவான விலைகளில் கொண்டுவந்தது.

குறிப்பாக, வெளிநாடுகளில் வெற்றி பெற்ற சி3 என்கிற ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் 3 விதமான வெர்சன்களில் சிட்ரோன் விற்பனை செய்ய ஆரம்பித்தது. இதற்கிடையில், சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிட்ரோன் பசால்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா கர்வ் காருக்கு போட்டியாக சிட்ரோன் அறிமுகம் செய்த கூபே ஸ்டைலிலான எஸ்யூவி கார் பசால்ட் ஆகும்.
கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1,275 கார்களை இந்தியாவில் சிட்ரோன் விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டில் இதே ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 576 கார்களை மட்டுமே சிட்ரோன் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், சிட்ரோன் கார்களின் விற்பனை இந்தியாவில் 121.35% அதிகரித்துள்ளது. 2023 ஆகஸ்ட் மாதத்திலாவது பரவாயில்லை, கடந்த 2024 ஜூலையில் வெறும் 335 கார்களை மட்டுமே இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது.

இந்த வகையில் பார்த்தால், கடந்த ஜூலையை காட்டிலும் ஆகஸ்ட்டில் சுமார் 940 சிட்ரோன் கார்கள் அதிகமாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த அதிரடியான முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணம், இந்தியாவில் சிட்ரோனின் சமீபத்திய அறிமுகமான பசால்ட் ஆகும். ஏனெனில், இந்திய சந்தையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான சிட்ரோன் கார், பசால்ட் ஆகும்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 579 பசால்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத்தனைக்கும், ஆகஸ்ட் 9ஆம் தேதியில் இருந்தே பசால்ட் காரின் விற்பனை துவங்கப்பட்டது. அதாவது, வெறும் 22 நாட்களில் 579 பசால்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட சிட்ரோன் கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள், பசால்ட் ஆகும்.

பசால்ட்டிற்கு அடுத்து சிட்ரோன் இந்தியா நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட காராக 2வது இடத்தில் சி3 உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 507 சி3 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விலை குறைவான ஹேட்ச்பேக் காரான இது, 2023 ஆகஸ்ட்டில் 250 யூனிட்களும், 2024 ஜூலையில் வெறும் 90 யூனிட்களும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
இதற்கடுத்து 3வது இடத்தில் சி3 காரின் எலக்ட்ரிக் வெர்சனான இசி3 உள்ளது. கடந்த மாதத்தில் 150 இசி3 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஆகஸ்ட்டில் 271 இசி3 கார்களும், 2024 ஜூலையில் 177 இசி3 கார்களும் விற்கப்பட்டு இருந்தன. இவை இல்லாமல், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 38 சி3 ஏர்கிராஸ் கார்கள் மற்றும் ஒரேயொரு சி5 ஏர்கிராஸ் காரை சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதலில் சி5 ஏர்கிராஸை அறிமுகம் செய்து சிட்ரோன் சிறிய தவறு செய்திருந்தாலும், அதனை உடனடியாக திருத்திக் கொண்டது பாராட்டுக்குரியது. அதேபோல், மார்க்கெட் டிரெண்ட்டை புரிந்துக் கொண்டு கூபே ஸ்டைலிலான காரை அறிமுகம் செய்தது உலக அரங்கில் சிட்ரோனின் அனுபவத்தை காட்டுகிறது. பசால்ட்டின் அறிமுகத்தினால் இந்திய மார்க்கெட்டில் தனக்கான ஒரு இடத்தை சிட்ரோன் பிடிக்கும் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications









