சென்னை ரேஸ் டிராக்கில் நாய் நுழைந்ததால் மக்களுக்கு இப்படி ஒரு நல்லது நடக்குதா! இததான் இவ்ளோ நாளா எதிர்பாத்தோம்
ஒட்டுமொத்த மோட்டார்ஸ்போர்ட் உலகத்தின் கவனமும் தற்போது சென்னை (Chennai) மீது குவிந்துள்ளது. சென்னையில் ஃபார்முலா 4 நைட் ஸ்ட்ரீட் ரேஸ் (Chennai Formula 4 Night Street Race) நடைபெற்று வருவதுதான் இதற்கு காரணம். சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் போட்டியை நடத்த கூடாது என ஆரம்பத்தில் இருந்தே நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் எல்லாம் தொடரப்பட்டன. சென்னை சாலைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், திட்டமிடலில் பிரச்னைகள் இருப்பதாகவும் அப்போது நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
ஆனால் இந்த பிரச்னைகளை எல்லாம் கடந்து, ஒரு வழியாக சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 31) ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிகள் தொடங்கின. இந்த போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவும் ஏகப்பட்ட குழப்பங்களை நம்மால் பார்க்க முடிந்தது. இவை எல்லாம் இந்த கார் ரேஸை காணலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது போதாதென்று சென்னையின் மானத்தை கப்பலேற்றும் வகையிலான மற்றொரு சம்பவமும் நேற்று இரவு அரங்கேறியது. நேற்று இரவு ரேஸ் டிராக்கில் கார்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்போது திடீரென தெரு நாய் ஒன்று ரேஸ் டிராக்கிற்குள் நுழைந்தது. அப்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் சமயத்தில், மைதானங்களுக்குள் நாய்கள் நுழைவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஐசிசி உலக கோப்பை, ஐபிஎல் ஆகிய விளையாட்டு திருவிழாக்களின்போதும் கூட, நாய்கள் மைதானங்களுக்குள் நுழைந்துள்ளன. இதன் காரணமாக போட்டிகள் சில நிமிடங்கள் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.
இந்த வரிசையில்தான் தற்போது சென்னை ரேஸ் டிராக்கிற்குள்ளும் தெரு நாய் நுழைந்து சேட்டை செய்துள்ளது. இது போன்ற சம்பவம் இன்று (செப்டம்பர் 1) நடைபெற்று விடக்கூடாது என கருதி, ரேஸ் டிராக்கை சுற்றியுள்ள பகுதிகளில் உலாவி கொண்டுள்ள நாய்களை பிடிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே கையோடு சென்னை முழுவதும் சாலைகளில் உலாவி கொண்டுள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பது நம் அனைவருக்கும் தெரியும்.
சில சமயங்களில் தெரு நாய்களும் கூட, சாலை விபத்துக்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. எனவேதான் சென்னை சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சுற்றி கொண்டுள்ள தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நெட்டிசன்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றுதான். தெரு நாய்களால் வாகனங்கள் சாலை விபத்துக்களில் சிக்கும் சம்பவங்கள், சென்னை மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நடக்க கூடிய ஒன்றாக உள்ளது. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்தால், சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை ஓரளவிற்கு குறைக்க முடியும் என்பது எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








