டிரைவரும் தேவையில்ல... க்ளீனரும் தேவையில்ல!! விபத்து என்கிற பேச்சுக்கே இடமில்லை - டெஸ்ட்டிங்கில் இருக்கு!
எதிர்காலத்தில் வாகனங்கள் தன்னிச்சையாக இயங்கக்கூடியவைகளாக இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சாலை விபத்துகளை குறைப்பதற்கு இதுதான் ஒரே வழி என கருதுவோரும் இருக்கின்றனர். டிரைவர் இன்றி தன்னிச்சையாக இயங்கக்கூடிய வாகனங்கள் குறித்த சோதனை உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில், பல்வேறு நிறுவனங்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில், துபாயில் டிரைவர்லெஸ் லாரி ஒன்று சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. எந்த நிறுவனம் உருவாக்கும் லாரி இது என்பதையும், சோதனையின் முடிவுகளையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகளவில் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேற்றம் கண்டுவரும் நகரம் என துபாயை சொன்னால் அது மிகை இல்லை. இதனால், அங்கு தொழில் வளர்ச்சியும் வேகமாக முன்னேற்றம் அடைந்துவருவதில் ஆச்சிரியம் இல்லை. எதிர்காலத்தை நோக்கிய சிந்தனைகளும், அதற்கான முயற்சிகளும் துபாய் அரசாங்கத்திடம் அதிகரித்து வருகின்றன.

எந்த அளவிற்கு என்றால், தற்போது டிரைவர் இல்லா லாரியை ஓட்டி பார்த்து சோதனை செய்திருப்பது வேறு யாரும் இல்லை, துபாய் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் துபாய் தெற்கு என்கிற பிரிவாகும். இந்த துபாய் தெற்கு பிரிவில் அங்கம் வகிக்கும் அதிகாரிகளின் முக்கிய பணி என்னவென்றால், துபாயின் தெற்கு பகுதியில் கப்பல் ஏற்றுமதி/ இறக்குமதிகளை அதிகரிப்பது, விமான போக்குவரத்தை அங்கு விரிவுப்படுத்துவது, மக்கள் குடியிருப்புகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது போன்றதாகும்.
டிரைவர் இல்லா லாரியை தற்போது சோதனை செய்து பார்த்திருப்பதும் கூட துபாய் தெற்கு மேம்பாட்டு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளுள் ஒன்றே ஆகும். எவோகார்கோ என்கிற ஏற்றுமதி/ இறக்குமதி நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த டிரைவர் இல்லா லாரியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து பார்த்துள்ளனர்.
லாரியில் உள்ள வன்பொருள் மற்றும் மென்பொருள் பாகங்களை மேம்படுத்தவதே இந்த சோதனையின் முக்கிய நோக்கமாக இருந்தது. இடையூறுகளை அடையாளம் காண்பது, விபத்துகளை தடுப்பது, நகரும் பொருட்களுடன் மோதலை தவிர்ப்பது, அவசரகால நிறுத்தங்களை திறம்பட மேற்கொள்வது உள்ளிட்டவை இந்த தானியங்கி லாரிகளில் சோதனை செய்துப் பார்க்கப்பட்டன.
லாரியை நிறுத்தும்போதும், வளைவுகளில் திருப்பும்போதும் லாரியில் வழங்கப்பட்டு இருந்த ஆட்டோ பைலட் சிஸ்டம் திறம்பட செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை ஆய்வுகளில் எந்தவொரு ஆபத்தான நிகழ்வுகளும் ஏற்படவில்லை எனவும், துபாயை உலகின் ஏற்றுமதி/ இறக்குமதி மையமாக மாற்றும் துபாய் அரசாங்கத்தின் முயற்சிகளுள் ஒரு பகுதியாக இந்த டிரைவர் இல்லா லாரி உருவாக்கப்படுவதாகவும் துபாய் தெற்கு அமைப்பின் சிஇஓ மெஹ்சென் அகமது தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை ஓட்டத்தில், கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. ஏனெனில், அவர்கள் தான் லாரி செல்ல வேண்டிய பாதையை வரையறை செய்தது மட்டுமின்றி, சோதனை ஓட்டத்தின்போது லாரியை தொடர்ந்து கண்காணித்தனர். ஏற்கனவே கூறியதுபோல், இந்த லாரியை உருவாக்குவதற்காக எவோகார்கோ என்கிற நிறுவனத்துடன் 2022ஆம் ஆண்டில் இருந்து துபாய் அரசாங்கம் கூட்டணியில் உள்ளது.
தற்போதைய மாடர்ன் வாகனங்கள் கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய அட்வான்ஸ்டு தொழிற்நுட்பத்தை தனது உள்கட்டமைப்பிலும் பயன்படுத்த துபாய் அரசாங்கம் விரும்புவது இவ்வாறான கண்டுப்பிடிப்புகள் மூலமாக வெளியே தெரிய வருகிறது. 2030ஆம் ஆண்டிற்குள் துபாயில் இயக்கப்படும் வாகனங்களில் குறைந்தப்பட்சம் 25%-ஐ தானியங்கி வாகனங்களாக கொண்டுவரும் முயற்சியில் துபாய் அரசு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சோதனையில் எந்தவொரு மோதலையும் இந்த டிரைவர் இல்லா லாரி ஏற்படுத்தாதது, அதன் சிறந்த வடிவமைப்பை காட்டுகிறது. மேலும், தைரியமாக நிஜ உலகில் இந்த லாரியை பயன்படுத்தலாம் என்பதையும் இது காட்டுகிறது. இத்தகைய லாரியை உருவாக்குவதற்கு காரணம், கப்பல் ஏற்றுமதி/ இறக்குமதியை எளிமையானதாகவும், அட்வான்ஸானதாகவும் மாற்றுவது ஆகும்.


Click it and Unblock the Notifications








