அப்படிபோடு! டெஸ்லா இந்தியா வருகைக்கு இருந்த தடைகள் உடைப்பு! இவிகளை குறைந்த வரியில் இறக்குமதி செய்ய அனுமதி!
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் தயாரித்த எலெக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்ய நிபந்தனை அடிப்படையில் இறக்குமதி வரியில் சலுகை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான சட்ட வரைவுகள் தற்போது தாக்கல் ஆகியுள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவிலேயே வாகனங்களை தயாரித்து விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் வாகனங்கள் இறக்குமதி செய்தால் அதிகமான இறக்குமதி வரி என்பது விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது 100 சதவீதம் வரை இறக்குமதி வரிகள் விதிக்கப்படுகிறது.

இந்நிலையின் தற்போது உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, பல உலக நாடுகள் இணைந்து எலெக்ட்ரிக் வாகனங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும், அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் பல்வேறு விதமான திட்டங்களை வகுத்து வருகின்றனர். வாகன உற்பத்தியாளர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் மானியங்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்ய வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக இருந்து வந்தது. இதை நிபந்தனை அடிப்படையிலாவது இந்திய அரசு வழங்க வேண்டும் என்ற பேச்சு வார்த்தை இருந்து வந்தது. உலகில் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவதற்காக இப்படியான கோரிக்கையை முன் வைத்தது.

அதன் அடிப்படையில் தற்போது மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவிற்குள் குறைவான இறக்குமதி வரையில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய நிபந்தனை அடிப்படையில் புதிய விதிமுறை ஒன்றை வகுத்துள்ளது. இதற்கான சட்ட வரைவும் தற்போது தாக்கல் ஆகியுள்ளன. இதன்படி இனி டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் தனது வாகனத்தை இறக்குமதி செய்து விற்பனை செய்ய துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்குள் குறைந்த விலையில் வெளிநாடுகளில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றால் முக்கியமான சில நிபந்தனைகளை நிறுவனம் பின்பற்ற வேண்டும். முக்கியமாக அந்நிறுவனம் இந்தியாவிற்குள் இறக்குமதியை துவங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவிற்கு 4150 கோடியை முதலீடாக கொண்டு வர வேண்டும். இப்படியாக கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்பட்ட பின்பு தான் குறைவான வரியில் எலெக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்.
இது மட்டுமல்ல இப்படியாக குறைவான வரியில் இறக்குமதி செய்தாலும் ஆண்டுக்கு 8000 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே நிறுவனத்தால் இறக்குமதி செய்ய முடியும். அதற்கு மேல் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது. மூன்று ஆண்டுகளுக்குள் நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை இந்தியாவிலேயே தயார் செய்து விற்பனைக்கு கொண்டு வர வேண்டும்.
இப்படியாக இந்தியாவில் அந்நிறுவனம் ஆலை அமைத்த பின்பு ஒரு வாகனத்தை தயாரிக்க 35 சதவீதமான உதிரி பாகங்களை முற்றிலுமாக இந்தியாவிலேயே அந்நிறுவன ம் கொள்முதல் செய்து அல்லது உற்பத்தி செய்து பயன்படுத்த வேண்டும். இதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதை எல்லாம் செய்வதாக ஒப்புதல் அளித்தால் மட்டுமே தற்போது குறைவான வரியில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எல்லாம் செய்து ஒரு நிறுவனம் வாகனத்தை இறக்குமதி செய்கிறது என்றால், அந்த வாகனத்தின் விலை 35 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 29 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். அப்படி குறைவாக இருந்தால் அந்த வாகனத்திற்கு 15 சதவீதம் மட்டுமே இறக்குமதி வழியாக விதிக்கப்படும் என தற்போது மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய 70 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இப்படியான வரி குறைப்பை மத்திய அரசு செய்துள்ளது. இதன் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவிலான முதலீடுகள் இந்தியாவில் வரும். இதனால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பதற்காக இந்த முயற்சிகளை மத்திய அரசு எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








