சோலாரில் இயங்கும் மின்சார கார் சீக்கிரமே இந்தியாவில் வெளியாக போகுது.. ஒரு கிமீ பயணிக்க 50காசு மட்டுமே ஆகுமா!!
வேவி மொபிலிட்டி (Vayve Mobility), இதுவே இந்தியாவில் சோலாரில் இயங்கும் எலெக்ட்ரிக் கார் (Solar Electric Car) மாடலை வெளியீடு செய்ய இருக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஈவா (Eva) எனும் கார் மாடலை உருவாக்கி வருகின்றது. இதுவே அந்த சோலாரில் இயங்கும் மின்சார கார் மாடல் ஆகும். இதன் கான்செப்ட் மாடலையே இந்தியாவில் வெளியீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இந்தியாவில் விரைவில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ (Bharat Mobility Global Expo) நடைபெற இருக்கின்றது.
புது டெல்லி-யிலேயே இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி நடைபெற இருக்கின்றது. வருகின்ற 17 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை அது நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியிலேயே வேவி மொபிலிட்டி நிறுவனம் அதன் ஈவா சோலார் இ-காரை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதுவே இந்தியாவின் முதல் சோலாரில் இயங்கும் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். ஈவா, ஓர் காம்பேக்ட் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காரில் மூன்று பேர் வரை மட்டுமே பயணிக்க முடியும். டிரைவர், இரண்டு பயணிகள் பயணிக்கின்ற வகையிலேயே இதன் இருக்கை அமைப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது.
மிகவும் குறுகிய அமைப்பைக் கொண்ட ஓர் காராகவே ஈவா தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த குறுகிய அமைப்பு ஈவா-விற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், நெரிசல் மிகுந்த சாலைகளில் பைக்கில் பயணிப்பதைப் போல இந்த காரில் பயணித்துக் கொள்ள முடியும் என தெரிகின்றது.

தொடர்ந்து, பெட்ரோல் கார்களைக் காட்டிலும் மிக அதிக பண சேமிப்பை இந்த சோலார் வழங்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. உதாரணமாக, ஓர் அதிகம் மைலேஜ் தரும் பெட்ரோல் காரில் ஒரு கிமீ பயணிக்க 5 ரூபாய் வரை செலவாகும் என்றால், ஈவா மின்சார காரில் அதே ஒரு கிமீ பயணிக்க வெறும் 50 காசுகள் மட்டுமே ஆகும்.
எனவே அடித்தட்டு மக்கள் மற்றும் அதிக லாபத்தை எதிர்பார்ப்போரின் கவனத்தை இந்த வாகனம் வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் இந்த காரில் 250 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இதேபோல், இதன் சோலார் வசதி வாயிலாக ஆகும் சார்ஜ் மூலம் ஆண்டு ஒன்றிற்கு மட்டும் 3 ஆயிரம் கிமீ தூரம் வரை பணித்துக் கொள்ள முடியுமாம். தொடர்ந்து, சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
சூரிய ஒளி இல்லாத நேரங்களில் காரை சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாகவே இந்த வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. அதி வேக சார்ஜ் கருவியைக் கொண்டு சார்ஜ் செய்யும் போது வெறும் 5 நிமிடங்களில் 50 கிமீ தூரம் பயணிப்பதற்கான சார்ஜை இந்த கார் எட்விடுமாம்.
இத்தகைய மின்னல் வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ளும் திறனையே ஈவா கொண்டிருக்கின்றது. ஆகையால், விற்பனைக்கு வரும்பட்சத்தில் மின்சார கார் பிரிவில் மிகப் பெரிய புரட்சியை அது செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஈவா சோலார் எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும்.
இதனால் வெறும் 5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை எட்டி விட முடியும். எனவே நகர்புற பயன்பாட்டிற்கு மிக மிக உகந்த டூ-வீலராக அது இருக்கும் என தெரிகின்றது. இத்துடன், இதில் ரைடு செய்வதை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு ஸ்மார்ட் போன் இணைப்பு, மியூசிக் கேட்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சோலாரில் இயங்கும் லைட், ஃபேன் ஆகியவற்றைத் தொடர்ந்து வெகுவிரைவில் இந்த உலகை சோலாரில் இயங்கும் கார்களும் ஆட்சிச் செய்ய இருக்கின்றன. இதற்கு சான்றாகவே ஈவா வருகை அமைய உள்ளது. இந்த காரை வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இதுபற்றிய விபரங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









