செப்டிக் டேங்க் கேஸில் ஓடக்கூடிய டிராக்டர்... மஹிந்திரா தயாரிப்பில் குறையே சொல்ல முடியாது!!
மஹிந்திரா டிராக்டர்ஸ் (Mahindra Tractors), உலகின் மிக பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று என சொன்னால் அது மிகையில்லை. இந்த நிறுவனம் அதன் முதல் உயிரி எரிவாயு (Biogas) டிராக்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட உயிரி எரிவாயுவில் இயங்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டிராக்டரின் பெயர் மஹிந்திரா யுவோ டெக்+ (Yuvo Tech+) ஆகும். பசுமையான சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கக் கூடியதான இந்த டிராக்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய வாகனங்கள் ஏற்கனவே நிறைய விற்பனைக்குவர ஆரம்பித்துவிட்டன. சிஎன்ஜி கார் & பைக்குகள் கூட வர ஆரம்பித்துவிட்டன. ஆனால் மறுப்பக்கம், உயிரி எரிவாயுவில் இயங்கக்கூடிய வாகனங்கள் அதிகமாக விற்பனையில் இல்லை. புவியில் இருந்து இயற்கையாய் கிடைக்கும் எரிவாயு ஆனது இயற்கை எரிவாயு என்றும், இயற்கையாக உருவாகுவதுடன் செயற்கையாக நாம் உண்டாக்கும் எரிவாயு ஆனது உயிரி எரிவாயு என்றும் கூறப்படுகிறது.

இயற்கை எரிவாயு ஆனது உயிரி எரிவாயுவின் ஒருபகுதியே ஆகும். உயிரி எரிவாயுவில் விலங்கு கழிவுகள், வீணாகும் உணவு, மூடிய பரப்பிற்குள் தேங்கி நிற்கும் நீர் உள்ளிட்டவற்றினால் உண்டாகும் எரிவாயுகள் உள்பட ஏகப்பட்டவை அடங்குகின்றன. இதனால், தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் உற்பத்தி செய்யக்கூடியதாக உயிரி எரிவாயு உள்ளது. இருப்பினும், உயிரி எரிவாயுவில் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் முயற்சிகள் இன்னமும் ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளன.
உலகின் மிக பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் மஹிந்திரா டிராக்டர்ஸே இப்போதுதான் அதன் முதல் பயோகேஸ் டிராக்டரை அறிமுகம் செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். புதுடெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் முன்னிலையில் மஹிந்திரா யுவோ டெக்+ டிராக்டரின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த டிராக்டரினால் சுற்றுச்சூழல் மாசடைவது தடுக்கப்படுவது மட்டுமின்றி, புவியில் சேரும் கார்பன்களின் அளவுகளையும் குறைக்கும் என மஹிந்திரா டிராக்டர்ஸ் தெரிவித்துள்ளது. டீசல் டிராக்டர்களுக்கு இணையான பவர் மற்றும் பெர்ஃபார்மன்ஸில் உருவாக்கப்பட்டுள்ள யுவோ டெக்+ டிராக்டரை விவசாயம் உள்பட இதர வேலைகளுக்கும் பயன்படுத்தலாம்.
இந்த டிராக்டரில் பொருத்தப்பட்டுள்ள சிபிஜி டிராக்டர் டெக்னாலஜி ஆனது விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் என இரண்டையும் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா டிராக்டர்ஸ் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மஹிந்திராவின் இந்த புதிய பயோகேஸ் டிராக்டர் ஆனது இந்தியாவின் வாகன தரநிலைகள் அனைத்திற்கும் ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.
மஹிந்திராவில் இருந்து சிஎன்ஜி டிராக்டர்களும் விற்பனை செய்யப்படுகின்றன. வாகனங்கள் மூலமாக விவசாய துறையில் முன்னேற்றம் கொண்டுவர வேண்டும் என்பதில் மஹிந்திரா குழுமம் தீவிரமாக உள்ளது. மஹிந்திரா குழுமம் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று மஹிந்திரா டிராக்டர்கள் ஆகும். மஹிந்திராவின் ஆரம்ப காலம் டிராக்டர்களில் இருந்தே துவங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய விவசாயத்தில் மஹிந்திரா டிராக்டர்களின் பங்களிப்பு பெரியது. கடந்த காலங்களில் இருந்து டிராக்டர்கள் உற்பத்தியில் பல்வேறு விதமான முயற்சிகளை மஹிந்திரா மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், தற்போது முதல் உயிரி எரிவாயு டிராக்டரை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போதைக்கு யுவோ டெக்+ டிராக்டர் காட்சிக்கு மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. விலை அறிவிக்கப்பட்டு டிராக்டரின் அறிமுகம் இன்னும் சில வாரங்களில் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








