ஃபோர்டுக்கு இந்தியா மேல மீண்டும் காதல் வந்திருச்சோ.. சென்னையில் தென்பட்ட பிரமாண்ட உருவம் கொண்ட ஃபோர்டு கார்!
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறி ஓராண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. நிறுவனம் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை என இரண்டையும் முழுமையாக நாட்டில் நிறுத்திவிட்டது. இந்தமாதிரியான சூழலிலேயே தற்போது இந்த அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் மீண்டும் அதன் கால் தடத்தைப் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ஃபோர்டு நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று, இந்திய சாலையில் வாகனத்தை ஏற்றி செல்லும் லாரி ஒன்றில் பயணிக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கின்றது. அது, 2024 ஃபோர்டு எவரெஸ்ட் கார் மாடல் ஆகும். சென்னை சாலையிலே அந்த கார் பயணித்திருக்கின்றது.

ஃபோர்டு, தன்னுடைய இந்திய மறு வருகை பற்றிய தகவலை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதன் விளைவாக நிறுவனம் சார்ந்த வதந்தியான தகவல்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றாகவும், மேலும், நிறுவனத்தின் மறு வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்த காரின் தரிசனம் அமைந்திருக்கின்றது.
தற்போது காட்சி தந்திருக்கும் போர்டு எவெரஸ்ட் இந்தியாவில் கால் தடம் பதிக்கும் எனில் அது என்டீயோவர் எனும் பெயரிலேயே விற்பனைக்கு வரும். இந்த கார் மாடலுக்கு சொகுசு மற்றும் எஸ்யூவி கார் பிரியர்கள் மத்தியில் மிக சிறந்த எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது.

Source: Autocar India மேலும், ஃபோர்டு என்டீயோவர் விற்பனைக்கு வரும் எனில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி குளோஸ்டர் ஆகிய எஸ்யூவி கார்களுக்கே போட்டியாக அமையும். இதுமட்டுமில்லைங்க, தற்போது ஃபோர்டு நிறுவனம் டாடா மோட்டார்ஸுடன் இணைந்து இந்திய வர்த்தக பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே பதிவெண் எதுவும் இல்லாமல் ஃபோர்டு எவரெஸ்ட் இந்தியாவில் காட்சி தந்திருக்கின்றது. நேபால் போன்ற சந்தையில் ஏற்கனவே இந்த கார் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நம்முடைய அண்டை நாட்டைப் போலவே இந்தியாவிலும் இறக்குமதி வாயிலாகவே ஃபோர்டு கார்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.
இதுபோன்ற தகவல்கள் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டிருக்க, மறுபக்கம், இந்த கார் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சென்னையைச் சேர்ந்தவரால் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்கிற தகவலும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ஃபோர்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகததே இதுபோன்ற பரவலான தகவல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
சமீபத்தில்கூட இந்தியாவைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் ஃபோர்டு எஃப் 150 ரேப்டர் காரை தன்னுடைய தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் காட்சி தந்திருப்பது 2024 ஃபோர்டு எவரெஸ்ட் ஆகும். இந்த கார் பார்க்க பிரமாண்டமான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது.
இதுமட்டுமின்றி, தொழில்நுட்ப வசதிகளிலும் இது நம்மை பிரம்மிக்க வைக்கும் வகையிலேயே இருக்கின்றது. உதாரணமாக அடாஸ் அம்சம் போன்ற நவீன கால சிறப்பு தொழில்நுட்பங்கள் பல இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், 19 அங்குல அலாய் வீல், சைடு ஸ்டெப், எல்இடி லைட்டுகள், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிகல்லி அட்ஜெஸ்டபிள் முன் பக்க இருக்கை, மல்டி ஃபங்க்சன் ஸ்டியரிங் வீல், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எஞ்ஜினை பொருத்த வரை 2.0 லிட்டர் பை-டர்போ டீசல் மோட்டார் ஆப்,னே வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 206 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போது ஃபோர்டு விரும்பிகள் பலர் இருக்கின்றனர். ஆனால், இவர்களைப் போல இன்னும் பலரை கவர ஃபோர்டு தவறிவிட்டது. புதுமுக மற்றும் அப்டேட் செய்யப்பட்ட வாகனங்களை இந்தியாவிற்காக ஒதுக்குவதை தவறியதன் விளைவாகவே இந்தியர்கள் பலர் இந்த பிராண்டை ஒதுக்கிவிட்டனர். இதன் விளைவாகவே அது சந்தையை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியது.


Click it and Unblock the Notifications








