மீண்டும் ஃபோர்டு? இந்திய கார் நிறுவனங்களுக்கு இப்போவே வேர்க்க ஆரம்பிச்சி இருக்கும்!! முதல் காரே இதுதானா?
ஃபோர்டு (Ford) நிறுவனம் அதன் பிரபலமான எவரெஸ்ட் காரின் வாயிலாக மீண்டும் இந்திய மார்க்கெட்டில் களம்புக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எந்த அளவிற்கு நம்பகமானது என்பதையும், ஃபோர்டில் இருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படும் எவரெஸ்ட் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு கார் நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் ஆதிக்கத்தை செலுத்தி உள்ளன. இந்தியாவிலும் கூட ஃபோர்டு நிறுவனம் முன்னணி கார் நிறுவனமாக பல ஆயிரம் கார்களை விற்பனை செய்து வந்தது. ஈக்கோ ஸ்போர்ட், எண்டேவியர் என பல தரமான கார்கள் ஃபோர்டு நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன.

ஆனால், சில வருடங்களுக்கு முன் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேறியதை இப்போது வரையிலும் கார் ஆர்வலர்கள் பலரால் நம்ப முடியவில்லை. இதனாலோ என்னவோ... இந்திய சந்தையில் ஃபோர்டு மீண்டும் களமிறக்க உள்ளதாக அவ்வப்போது வதந்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.
எலக்ட்ரிக் கார்களுக்கு நல்ல மார்க்கெட் இந்தியாவில் உருவாகி வருவதால், எலக்ட்ரிக் கார்கள் மூலமாக இந்தியாவில் தனது 2வது இன்னிங்ஸை ஃபோர்டு துவங்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன் வெளியான வதந்தியை உங்களில் நிறைய பேர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்த வரிசையில், இந்தியாவில் எவரெஸ்ட் காரின் மூலமாக மீண்டும் கார்கள் விற்பனையை துவங்க ஃபோர்டு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஃபோர்டு எவரெஸ்ட், நிறைய வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள ஃபோர்டு கார் ஆகும். ஆனால், இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை. ஏனெனில், இந்தியாவில் 'எவரெஸ்ட்' என்கிற பெயரை வேறொரு கார்ப்பிரேட் நிறுவனம் தனது தயாரிப்புக்காக வாங்கிவிட்டது. ஆனால், இந்த பெயரை வாங்கும் முனைப்பில் ஃபோர்டு உள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இருப்பினும், இந்தியாவில் ஃபோர்டு எவரெஸ்ட் கார்களின் உற்பத்தி எப்போது துவங்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. ஃபோர்டு இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் திட்டத்தில் இருப்பதால், ஒருவேளை எவரெஸ்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இதன் உற்பத்தி பணிகள் வருகிற 2025ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2026ஆம் ஆண்டில் இருந்தே துவங்கும் என தெரிகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் சென்னைக்கு அருகே உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் ஒரு கார் தோற்றம் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த கார் 3 வரிசைகளில் இருக்கைகளை கொண்டதாக இருந்தது. காரின் முன்பக்கம் பெட்டகம் போன்ற வடிவத்தை கொண்டிருந்தது. காரின் முன்பக்கத்தில் க்ரில் பகுதியானது நன்கு பெரியதாக இருந்தது.
இது ஃபோர்டு எவரெஸ்ட் காராக இருக்கலாம் என கூறப்படுகிறது. எவரெஸ்ட் காரில் இருந்து வடிவமைக்கப்பட்டதே எண்டேவியர் ஆகும். இருப்பினும், ஃபோர்டு தொழிற்சாலைக்கு அருகே கண்டறியப்பட்டுள்ள இந்த கார் எண்டேவியரை காட்டிலும் நிமிர்ந்த தோற்றத்தை கொண்டிருந்தது. எவரெஸ்ட் காரின் தோற்றம்தான் அவ்வாறு இருக்கும். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, இந்தியாவில் ஃபோர்டு எவரெஸ்ட் கார் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோர்டு எவரெஸ்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்பிருந்தாலும், இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவே. மார்க்கெட்டை விட்டு சென்றிருந்தாலும், இப்போதும் சில ஃபோர்டு கார்கள் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒருவேளை அந்த வரிசையில் எவரெஸ்ட் இணைந்துவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









