திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு (Ford) இந்தியாவில் மீண்டும் கால் தடம் பதிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. ஆனால், இது பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வர்த்தைகளும் ஃபோர்டு நிறுவனத்தின் தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை.
இருப்பினும், இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக சில சம்பவங்கள் மட்டும் நாட்டில் அரங்கேறிக் உள்ளன. அந்தவகையில், சமீபத்தில் நிறுவனத்தின் புகழ்பெற்ற எஸ்யூவி கார் மாடல்களில் ஒன்றான எவரெஸ்ட் (Everest) சாலை சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது. மறைப்புகளுடனேயே அந்த கார் சோதனையோட்டம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

நிறுவனத்தின் பிரமாண்ட உருவம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடலே எவரெஸ்ட் ஆகும். ஃபோர்டு என்டீயோவர் காரை நம்மில் பலர் கேள்விப் பட்டிருப்பீர்கள் என நம்புகின்றோம். அந்த கார் மாடலே உலக சந்தையில் எவரெஸ்ட் எனும் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதையே இந்தியாவில் களமிறக்குவதற்கான முயற்சியில் ஃபோர்டு ஈடுபட்டுள்ளது.
இதைக் களமிறக்குவதன் வாயிலாகவே ஃபோர்டு அதன் மறு வருகையை இந்தியாவில் பதிவு செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன. இந்த நிலையிலேயே மற்றுமொரு புதிய தகவலாக, ஃபோர்டு நிறுவனம் புதுமுக எம்பிவி ரக கார் மாடலுக்கு இந்தியாவில் பேடண்ட் பதிவைச் செய்திருப்பது பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன.
மேலும், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி பார்க்கையில் இது அந்நிறுவனத்தின் புதுமுக தயாரிப்பு என்றும், உலக சந்தையில் எங்கும் விற்பனையில் இல்லாத ஓர் கார் மாடல் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. எனவே இந்திய சந்தைக்கான பிரத்யேக ஃபோர்டு காராக இது இருக்கக் கூடும் என நம்பப்படுகின்றது.
தற்போது பேடண்ட் ஆவணங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. இத்துடன், காரின் வரைபடமும் வெளியாகி இருக்கின்றது. ஃபோர்டு இந்த புதுமுக எம்விபி ரக இந்த காரை உள்ளூரிலேயே வைத்துகூட தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிகவும் ஸ்டைலான ஓர் எம்பிவி ரக கார் மாடலாக தன்னுடைய இந்த புதிய காரை ஃபோர்டு வடிவமைத்திருக்கின்றது.
மெல்லிய ஹெட்லைட், பெரிய ஃபோர்டு கிரில், காற்றோட்டத்தை உறுதிச் செய்யக் கூடிய பம்பர் மற்றும் கவர்ச்சியான அலாய் வீல்களை இந்த புதிய கார் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இதுதவிர, பெரிய சன்ரூஃபையும் இந்த எம்பிவி கார் கொண்டிருக்கின்றது. சுறா மீனின் துடுப்பைப் போன்ற அமைப்புடைய ஆன்டென்னாவும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஃபோர்டு இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வரும்பட்சத்தில் இந்தியாவின் பிரபலமான எம்பிவி ரக கார் மாடல்களான மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல், டொயோட்ட ருமியன், கியா கேரன்ஸ் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் ஆகியவற்றிற்கு போட்டியாக அமையும். இந்தியாவின் எம்பிவி கார் பிரிவின் புகழ்பெற்ற கார் மாடல்களாக இவையே இருக்கின்றன. இவற்றில் வரிசையிலேயே விரைவில் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் இணைய இருக்கின்றது.
ஃபோர்டு நிறுவனம் இந்த காருக்கு மட்டுமல்ல, காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடல் ஒன்றிற்கும் அது பேடண்ட் பதிவைச் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா போன்ற கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக்கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார்கள் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. 2025 ஆம் ஆண்டிற்குள் ஃபோர்டு கார்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் ஐசிஇ (ICE) வாகனங்களை மட்டுமின்றி மின்சார கார்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








