இந்த 5 காருகள்ல ஒன்னு இருந்தாலும் நாம வணங்கும் தெய்வம் துணைக்கு கூடவே வர மாதிரி.. தீபாவளிக்கு ஒன்ன வாங்கலாம்!
பொதுவாக இந்தியர்கள் பலர் தீபாவளி பண்டிகையின் போது புதிய வாகனங்களை வழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளியின்போதும் பலர் புதிய வாகனங்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய காரை வாங்கும்போது ஏனா-தானோ என வாங்கிவிடாமல், அந்த வாகனம் அதிக பாதுகாப்பு தருமா என்பதை பார்த்து வாங்குவதே நல்லது. இது, உங்களுக்கு மட்டுமல்ல உங்களை நம்பி வரும் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும். இந்தியாவில் இப்போது அதிக பாதுகாப்பு தரம்மிக்க கார்களின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துவிட்டது.
அந்தவகையில், சமீபத்தில் பாரத் என்சிஏபி (Bharat New Car Assessment Program) வாயிலாக அதிக பாதுகாப்பான கார்கள் இவை என அறிவிக்கப்பட்ட கார் மாடல்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இந்தியாவிற்கான கார்களை இந்தியாவிலேயே வைத்து மோதல் ஆய்விற்கு உட்படுத்தி அவற்றின் பாதுகாப்பை தரத்தை ஆய்வு செய்யும் விதமாக தொடங்கப்பட்ட ஓர் அமைப்பே பாரத் என்சிஏபி ஆகும்.

இந்த அமைப்பு இதுவரை ஐந்து டாடா மோட்டார்ஸ் தயாரிப்புகளை மோதல் ஆய்விற்கு உட்படுத்தி அதன் பாதுகாப்பு தரத்தை வெளியிட்டிருக்கின்றது. ஆச்சரியமளிக்கும் விதமாக அவை ஐந்துமே ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை பாதுகாப்பு ரேட்டிங்கையேப் பெற்றிருக்கின்றன. அவை என்னென்ன கார் மாடல் என்பதை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம், வாங்க.
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி: பாரத் என்சிஏபி தொடங்கப்பட்டு முதன் முதலில் இந்த இரண்டு டாடா கார் மாடல்களையே மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த இரண்டு கார் மாடல்களும் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த ஆய்வில் பெற்றன.
இது தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருமிதம் சேர்க்கும் விதமாகவும், பாரத் என்சிஏபி-க்கு நல்ல தொடக்கத்தை வழங்கும் விதமாகவும் அமைந்தது. குறிப்பாக, ஹாரியர் இந்த மோதல் ஆய்வில் பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு 30.08 புள்ளிகளையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 44.54 புள்ளிகளையும்ச பெற்றது.
இந்த அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றதன் காரணத்தினாலேயே ஹாரிய் எஸ்யூவிக்கு ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை பாரத் என்சிஏபி வாரி வழங்கியது. இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், இஎஸ்சி, சீட் பெல்ட், அடாஸ் தொழில்நுட்பம் மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா போன்ற அம்சங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, சில சென்சார்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்தே ஹாரியர் கார் மாடலை பாதுகாப்பானதாக மாற்றியிருக்கின்றது. இதைப் போலவே அதிக பாதுகாப்பு அம்சங்களை டாடா சஃபாரியும் தாங்கியிருக்கின்றது. சொல்லப்போனால் ஹாரியர் காரில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான பாதுகாப்பு அம்சங்கள் சஃபாரியிலும் இடம் பெற்றிருக்கின்றன. இதனால்தான் இதுவும் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை குவித்திருக்கின்றது. பாதுகாப்பு புள்ளிகள் விஷயத்திலும் ஹாரியருடனேயே அது ஒத்துப் போகின்றது.
டாடா பஞ்ச் இவி: பாரத் என்சிஏபி அமைப்பு டாடாவின் ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களைத் தொடர்ந்து பஞ்ச் இவி எனும் டாடாவின் குட்டி எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரையும் மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. பார்க்க குட்டியாக இருக்கும் இந்த கார் மாடல் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் உயரிய வகை வாகனங்களுக்கு இணையானதாக இருப்பது அப்போதே தெரிய வந்தது.
சிறியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49க்கு அதிகபட்சமாக 45 புள்ளிகளையும், பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு மிக மிக அதிகபட்சமாக 31.46 புள்ளிகளையும் பெற்றது. இதனால்தான் இந்த காருக்கு பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இருவருக்கான பாதுகாப்பு ரேட்டிங்கிலும் 5க்கு ஐந்து ஸ்டார்களை அப்படி வாரி வழங்கப்பட்டது.
இந்த எலெக்ட்ரிக் காரில் பாதுகாப்பிற்காக ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், இஎஸ்சி, ரியர் பார்க்கிங் சென்சார், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், ஹில் ஹோல்டு மற்றும் ஹில் டெசன்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்களை டாடா ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கி இருக்கின்றது.
டாடா நெக்ஸான் இவி மற்றும் நெக்ஸான் ஐசிஇ: பாரத் என்சிஏபி பஞ்ச் எலெக்ட்ரிக் கார் மாடலை மோதல் ஆய்விற்கு உட்படுத்திய கையோடு நெக்ஸான் இவி-யையும் மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த மோதல் ஆய்வில் நெக்ஸான் இவி-யும் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களையே பெற்றது.
அது பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32.00 புள்ளிகளுக்கு 29.86 புள்ளிகளைப் பெற்றது. இதேபோல், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49க்கு 44.95 புள்ளிகள் எனும் அதிகபட்ச மதிப்பெண்களை அது பெற்றது. இந்த காரிலும் பாதுகாப்பு அம்சங்கள் என்பதாலும், அதிக உறுதியாக அதனை டாடா தயாரித்திருப்பதாலும் இந்த அளவு அதிக மதிப்பெண்களை அது பெற்றது.
பாரத் என்சிஏபி நெக்ஸான் இவி-யை ஜூன் மாதத்திலேயே மோதல் ஆய்விற்கு உட்படுத்தியிருந்தாலும், இதன் ஐசிஇ (எரிபொருள் எஞ்சின்) வெர்ஷனை சில தினங்களுக்கு முன்னரே மோதல் ஆய்விற்கு உட்படுத்தி அதன் பாதுகாப்பு தரம் பற்றிய ஆய்வுகளை வெளியிட்டது. இந்த வெர்ஷன் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனைப் போலவே ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
நெக்ஸான் ஐசிஇ வெர்ஷன் பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு 29.86 புள்ளிகளையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தி்ல 49 புள்ளிகளுக்கு 44.95 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலிலும் டாடாவின் மற்ற தயாரிப்புகளைப் போலவே பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் தாராள மனதுடன் வாரி வழங்கப்பட்டு உள்ளன.
டாடா கர்வ் இசிஇ மற்றும் கர்வ் இவி: பாரத் என்சிஏபி சில தினங்களுக்கு முன்னர் டாடாவின் நெக்ஸான் எஸ்யூவி காரை மாடலை மட்டுமல்ல அந்த நிறுவனத்தின் கூபே எஸ்யூவி ரக கார் மாடலான கர்வ் ஐசிஇ மற்றும் கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் மாடலையும் மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது.
டாடா கர்வ் ஐசிஇ பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு, 29.5 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 43.66 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றது. இதேபோல், டாடா கர்வ் இவி பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு 30.81 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 44.83 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றது.
இது அக்காரின் உறுதித் தன்மை மற்றும் அதிக பாதுகாப்பு திறனுக்கு கிடைத்த மிகப் பெரிய சான்றாகும். இந்த அளவு அதிக புள்ளிகளைப் பெற்றதன் விளைவாகவே பாரத் என்சிஏபி இதற்கு ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை வாரி வழங்கியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாரத் என்சிஏபி மேலே பார்த்த இந்த கார் மாடல்களை மட்டுமல்ல இன்னும் பல கார் மாடல்களை மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது. ஆனால், இன்னும் அனைத்தின் மதிப்பெண் பற்றிய தகவலையும் அது வெளியிடவில்லை. அதேவேளையில், சமீபத்தில் சிட்ரோன் நிறுவனத்தின் புதுமுக தயாரிப்பான பசால்ட் கார் மாடலின் மோதல் ஆய்வுகுறித்த தகவலை அது வெளியிட்டிருந்தது.
இது ஐந்துக்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே பெற்றிருந்தது என்பது தெரிய வந்து இருக்கின்றது. இந்த தீபாவளிக்கு ஏதேனும் புதிய காரை வாங்கும் பிளான் இருந்தால் இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வாங்கலாம். நிச்சயம் பாதுகாப்பான பயணத்திற்கு இவை துணையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








