எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த கார்களை யாருமே மறக்க மாட்டாங்க! இந்தியர்களின் மனம் கவர்ந்த மாடல்களின் தொகுப்பு
உலகின் மிகப் பெரிய வாகன சந்தைகளில் இந்தியா-வும் ஒன்றாக இருக்கின்றது. நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என கூறும் அளவிற்கு அது மிகப் பெரிய அளவில் அது வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றது. இதனால்தான் இந்தியாவை மையப்படுத்தி வாரத்திற்கு ஒன்று அல்லது மாசத்துக்கு ஒன்று என்கிற வீதத்தில் புதுமுக வாகனங்களின் அறிமுகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
அதேநேரத்தில், வந்த வாகனங்கள் அனைத்தும் இந்தியாவில் அப்படியே தங்கிவிடுவதில்லை. அதாவது இந்தியர்களின் மனதைக் கவர்ந்துவிடுவதில்லை. எனவே இந்திய வாகன வரலாற்றில் வந்த தடம் தெரியாமல் வந்த வேகத்திலேயே சந்தையை விட்டு வெளியேறிய கார் மாடல்களும் இருக்கின்றன. அதேநேரத்தில், ஒரு சில கார் மாடல்களின் பெயர்கள் இந்திய வாகன உலகின் வரலாற்றில் கல்வெட்டுக்களை போல அழிக்க முடியாததாக மாறியிருக்கின்றன.

அந்தமாதிரியான கார் மாடல்கள் சிலவற்றை பற்றிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, இந்திய வாகன உலகின் வரலாற்றின் சிறப்புமிக்க சில கார் மாடல்களையும், அவற்றின் உற்பத்தி பணிகள் இந்தியாவில் எப்போது தொடங்கப்பட்டது என்பது போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஹிந்துஸ்தான் அம்பாசிடர்: இந்த கார் மாடலை உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? காமராசர் தொடங்கி எம்ஜிஆர் வரை என பல முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த கார் மாடலையே அவர்களுடைய காலகட்டத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த கார் அதிக உறுதிக்கு பெயர் போனது.
இதனால்தான் அந்த காலகட்டத்தில் இந்தியாவின் பெரும் புள்ளிகள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலர் இந்த கார் மாடலை பயன்படுத்தி வந்தனர். 1957 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்த கார் இந்தியாவில் உற்பத்தியில் இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இப்போது இந்த கார் மீண்டும் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
புதிய அவதாரத்தில், நவீன கால சிறப்பம்சங்களுடன் அது விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இப்போதும் இந்த காரை இந்தியாவில் சிலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. காலத்தால் அழிக்க முடியாத இடத்தை இந்த கார் மாடல் இந்திய வாகன வரலாற்றில் பிடித்திருக்கின்றது.
ஃபியாட் பிரீமியர் பத்மினி (Fiat Premier Padmini): இப்போது இந்தியாவின் ஏதேனும் ஒரு மூலையில் இந்த கார் மாடல் ஓடிக் கொண்டிருக்கும் என நீங்கள் தாராளமாக நம்பலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இந்தியர்களின் பிரியமான வாகனமாக வலம் வந்த கார் மாடலே இதுவாகும். ராஜ்புத் அரசி, ராணி பத்மினியின் பெயரே இந்த காருக்கு வைக்கப்பட்டு இருக்கின்றது.
40 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டதே இந்த கார் மாடல் ஆகும். 1961 ஆம் ஆண்டு தொடங்கி 2001 ஆம் ஆண்டு வரை இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது பெரும்பாலான பத்மினி கார்கள் துருவிற்கு இரையாகியும், ஸ்கிராப் செய்யப்பட்டு இருக்கின்றன. அதேவேளையில், ஒரு சிலர் மட்டும் இந்த காரின் அருமையை உணர்ந்து மிக சிறப்பான பராமரிப்பைச் செய்து பாதுகாத்து வருகின்றனர்.
மாருதி 800 (Maruti 800): இந்த காரை பற்றிய அறிமுகம் பெரிய அளவில் தேவைப்படாது என நம்புகின்றோம். அந்த அளவிற்கு புகழ்பெற்ற கார் மடாலே 800 ஆகும். இந்தியாவில் பலர் கார் வாங்கினார்கள் என்றால் அது இதுவாகதான் இருக்கும். பெரும் பணக்காரர்கள் மட்டுமே காரை பயன்படுத்தி வந்தநிலையில், நடுத்தர வர்க்கத்தினராலம் காரை பயன்படுத்த முடியும் என செய்துக் காட்டிய கார் மாடலே இதுவாகும்.
ரூ.47 ஆயிரம் என்கிற மிக மிக குறைவான விலைக்கு வந்த கார் மாடலே இதுவாகும். இதனால்தான் இந்தியாவில் பலரின் முதல் கார் மாடலாக மாருதி 800 மாறியது. இந்த கார் மாடலின் முதல் யூனிட் இப்போதும் புத்தம் புதிதுபோல் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. 1983 ஆம் ஆண்டிலேயே இந்த கார் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டே இந்த கார் விற்பனையில் இருந்த கடைசி ஆண்டாகும்.
மாருதி சுஸுகி ஜிப்ஸி (Maruti Gypsy): இந்திய வாகன உலகின் வரலாற்றின் அழிக்க முடியாத மற்றுமொரு கார் மாடலாக மாருதி சுஸுகி இந்த தயாரிப்பு இருக்கின்றது. இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் இந்திய ராணுவ பயன்பாட்டிலும் உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இப்போதும், இந்த காரை ராணுவத்திற்காக மாருதி சுஸுகி தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. 1985 ஆம் ஆண்டிலேயே இந்த கார் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்திய சந்தையில் இந்த கார் ஜிப்ஸி எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. ஜிப்ஸி அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்ற கார் மாடல் என்பதாலேயே இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் இந்த கார் இணைக்கப்பட்டது.
மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio): இந்தியர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக இப்போதும் இந்த வாகனம் இருக்கின்றது. குறிப்பாக, பெரும் தொழிலதிபர்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை என பலரின் பிரியமான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. கம்பீரமான தோற்றம், எந்த மாதிரியான சாலையையும் சமாளிக்கும் திறன் இதற்கு உண்டு.
இந்த கார் மாடல் 2002 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போதும், இந்த கார் இந்தியாவில் தொடர்ந்து விற்பனையில் இருக்கின்றது. ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ என் எனும் இரண்டு விதமான பெயர்களில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த இந்த கார் மாடல்களை போலவே இந்திய வாகன உலகின் வரலாற்றில் இன்னும் சில கார் மாடல்களும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. டொயோட்டா இன்னோவா, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், ஹோண்டா சிட்டி, டாடா சுமோ, நானோ மற்றும் இன்டிகா ஆகிய கார் மாடல்களும் இந்திய வாகன உலகின் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தையேப் பிடித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








