நாளை அறிமுகமாகிறது ஹோண்டாவின் அழகான கார்.. 33 கிமீ மைலேஜ் தரும் டிசையருக்கு இது போட்டியா!!
இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக புதிய தலைமுறை அமேஸ் (Honda Amaze) உள்ளது. இந்த காரையே நாளைய தினம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய இருக்கின்றது, ஹோண்டா நிறுவனம். ஏற்கனவே இந்த சப்-4 மீட்டர் செடான் காருக்கான புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கிவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே நாளைய தினம் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு மறைப்புகளும் இன்றி இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதன் வருகை இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire)-க்கு போட்டியாக அமைய இருக்கின்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தகுந்தது.
இந்த காருக்கு போட்டி அளிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே ஹோண்டா நிறுவனம் தன்னுடைய புதிய தலைமுறை அமேஸ் கார் மாடலை மிகவும் கவர்ச்சியான வாகனமாக தயார் செய்திருக்கின்றது. முக்கியமாக புதிய தொழில்நுட்ப வசதிகள் பலவற்றை இந்த காரில் ஹோண்டா நிறுவனம் சேர்த்திருக்கின்றது.

அந்தவகையில், வேறு எந்த காம்பேக்ட் செடான் காரிலும் இடம் பெற்றிராத அம்சமான அடாஸ் (ADAS) அம்சம் புதிய ஹோண்டா அமேஸ் காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனவே அமேஸ் காரின் வருகை 33 கிமீ மைலேஜை வழங்கும் மாருதி சுஸுகி டிசையருக்கு மிகப் பெரிய தலைவலியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனெனில், அடாஸ் அம்சம் டிசையர் காரில் வழங்கப்படவில்லை. அதேவேளையில், 33 கிமீ மைலேஜ் என்பது டிசையர் கார் மாடலின் சிஎன்ஜி தேர்வே வழங்கும். இதன் பெட்ரோல் வெர்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 24.79 கிமீ முதல் 25.71 கிமீ வரையில் மட்டுமே மைலேஜை தரும்.
இத்தகைய அதிக மைலேஜை அமேஸ் தருமா என்பது தெரியவில்லை. அதேவேளையில், தன்னுடைய கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளின் வாயிலாக டிசையர் கார் மாடலுக்கு மிக சிறந்த சவாலை புதிய அமேஸ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்பவே மிக அதிக சிறப்பு வசதிகளையும், அழகான அணிகலன்களையும் இந்த காரில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது.
ஹோண்டா நிறுவனம் இந்த காரில் அடாஸ் அம்சத்தை மட்டுமல்ல, பெரிய தொடுதிரை சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், சிங்கிள் பேன் சன்ரூஃப், பின் பக்கத்தை பார்க்க உதவும் கேமிரா, இரண்டு விழிகளைக் கொண்டிருக்கும் கண்களை போன்ற அழகிய ஹெட்லைட் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்ட பகல் நேர லைட் என ஏகப்பட்ட அம்சங்களை வழங்கி இருக்கின்றது.
முக்கியமாக இது அமேஸ் கார் மாடல்தானா என சந்தேகிக்கும் அளவிற்கு புதிய தோற்றத்திற்கும் இதனை அப்கிரேட் செய்திருக்கின்றனர். ஆகையால், புதிய தலைமுறை அமேஸ் கார் மாடலுக்கு ஆக சிறந்த வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைக்கும் என நிறுவனம் நம்புகின்றது. மேலும், இந்த எதிர்பார்ப்புடனேயே நாளைய தினம் புதிய அமேஸை அது அறிமுகம் செய்யவும் இருக்கின்றது.
நாளையே தினமே இந்த காரின் விலை, டெலிவரி மற்றும் வேரியண்ட் வாரியான சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை ஹோண்டா அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக முக்கியமாக இந்த காருக்கு எவ்வளவு விலையை ஹோண்டா நிர்ணயம் செய்யும் என்பதே இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. அத்துடன், அடாஸ் அம்சத்தை எந்தெந்த வேரியண்டுகளில் வழங்கும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுக்க எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட்டாக மாறியிருந்தாலும், இப்போதும் செடான் காரை விரும்புவோர்கள் இருக்கின்றனர். இவர்களை மையப்படுத்தியே மாருதி அதன் டிசையர் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதேபோல், தற்போது ஹோண்டா அதன் புதிய தலைமுறை அமேஸ் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








