இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
இந்தியர்களுக்காக ஹோண்டா (Honda) நிறுவனம் பார்த்து பார்த்து உருவாக்கிய கார் மாடல் எலிவேட் (Elevate) ஆகும். இந்த எஸ்யூவி காரை இப்போது இந்தியாவில் மட்டுமல்ல அதன் தாய் நாடான ஜப்பானிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது, ஹோண்டா. ஆனால், அங்கு மாற்று பெயரில் அது விற்கப்படுகின்றது.
டபிள்யூஆர்-வி (Honda WR-V) எனும் பெயரிலேயே ஜப்பான் சந்தையில் ஹோண்டா எலிவேட் விற்பனைக்குக் கிடைக்கிறது. மேலும், நம் நாட்டில் இருந்தே இந்த காரை தன் தாயகத்திற்கு ஹோண்டா ஏற்றுமதி செய்கிறது. ஹோண்டா தன்னுடைய தாயகத்திற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் முதல் எஸ்யூவி கார் மாடல் இதுவே ஆகும்.

ஆகையால், பல பெருமிதங்களைக் கொண்ட தயாரிப்பாக ஹோண்டா எலிவேட் தற்போது மாறி இருக்கின்றது. இதனாலேயோ என்னமோ இந்த காருக்கு ஜப்பான் சந்தையில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களே தற்போது வெளியாகி உள்ளன. அதாவது, ஜப்பானியர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு டபிள்யூஆர்-வி எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் எலிவேட் கார் மாடலை அதிகளவில் புக் செய்துக் கொண்டிருக்கின்றனர் என்கிற தகவலே தற்போது வெளியாகி உள்ளது.
சமீபத்தில் வெளியாகிய தகவல்களின்படி, சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான ஜப்பானியர்கள் இந்த காரை புக் செய்திருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் இதே கார் மாடல் வெறும் 100 நாட்களில் 20 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது மிக சிறப்பான புக்கிங் எண்ணிக்கை ஆகும்.

ஆனால், இதைவிட அதிக வேகமாக சீனாவில் புக்கிங்கை டபிள்யூஆர்-வி பெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே இந்தியாவில் இருந்து இன்னும் அதிக எண்ணிக்கையில் ஹோண்டா டபிள்யூஆர்-வி ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி அன்றே இந்த கார் ஜப்பானில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
அதேவேளையில், இந்தியாவில் இந்த கார் 2023 செப்டம்பர் மாதத்திலே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த நாளில் இருந்து இப்போது வரை நல்ல விற்பனை வரவேற்பை இந்தியர்கள் மத்தியில் எலிவேட் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஜப்பானில் 20,98,800 யுவான்கள் தொடங்கி 24,89,300 யுவான்கள் வரை விற்கப்படுகின்றது.

இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 11.29 முதல் ரூ. 13.39 லட்சம் ஆகும். அதேவேளையில், இதே கார் மாடல் இந்தியாவில் ரூ. 11.91 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்கப்படுகின்றது. அதாவது, இந்தியாவைவிட குறைவான விலையிலேயே இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார் ஜப்பானில் விற்கப்படுகின்றது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, ஜப்பானில் இலகு ரக கார்களை பயன்படுத்தி வந்தவர்கள், காம்பேக்ட் கார்களை பயன்படுத்தியவர்கள் மற்றும் மினி வேன் பயன்பாட்டாளர்கள் இவர்கள் மத்தியிலேயே ஹோண்டா எலிவேட்டிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. இவ்வாறு அந்த காரின் பக்கம் மக்கள் குவிவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

குறிப்பாக, டிரைவர் இருக்கையில் மிக தெளிவான பார்வைக் கிடைப்பதாகவும், மிக சிறந்த பூட் ஸ்பேஸை (boot space) இந்த கொண்டிருப்பதாகவும் மற்றும் அதிக இட வசதியை வழங்குவதுமே முக்கியமான காரணங்களாக கூறப்படுகின்றன. இதுதவிர, தொழில்நுட்ப வசதிகளையும் இந்த காரில் ஹோண்டா வாரி வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், அடாஸ் போன்ற நவீன கால அம்சங்கள் சில எலிவேட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஜப்பானியர்களுக்காக சிறிய மாற்றமாக இந்த காரின் உட்பக்கத்தை முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரித்த வண்ணம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது, ஹோண்டா. இந்தியாவில் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டநிலையிலேயே எலிவேட் காரின் உட்பக்கம் உள்ளது.
இதுதவிர, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் விஷயத்தில் இந்தியா எலிவேட் மற்றும் ஜப்பான் எலிவேட் இடையே வித்தியாசம் தென்படுகின்றது. இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள தபுகரா ஆலையில் வைத்தே ஹோண்டா, இந்தியா மற்றும் தாயகத்திற்கான எலிவேட் கார்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றது. 1.5 லிட்டர், 4 சிலிண்டர், பெட்ரோல் மோட்டார் தேர்வே அங்கேயும் எலிவேட்டில் வழங்கப்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் ஹோண்டா எலிவேட் கார் மாடலுக்கு நல்ல வரவேற்பே கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல், ஜப்பானிலும் மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி உள்ளது. எனவே வரும் நாட்களில் இந்தியாவில் இருந்து இன்னும் அதிகமான யூனிட்டுகள் எலிவேட் கார்கள் ஏற்றுமதி செய்யப்படும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









