உலக சந்தைக்கான காரை இந்தியால வச்சு தயார் செய்ய போகுது நம்ம ஹோண்டா.. இந்தியாவின் புகழ் உலகம் முழுக்க பரவ போகுது
இந்திய தயாரிப்புகளுக்கு உலக சந்தையில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக ஹோண்டா (Honda)-வின் தயாரிப்பே ஒன்று இருக்கின்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலக நாடுகள் சிலவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எலிவேட் (Elevate) கார் மாடல்தான். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். உலக நாடுகளில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையிலேயே ஹோண்டா நிறுவனம் உலக சந்தைக்கான கார் மாடல் ஒன்றை இந்தியாவில் வைத்துத் தயாரிக்கும் பணியில் களமிறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக நிறுவனம் பிஎஃப்2 (PF2 ) எனும் பிளாட்பாரத்தை தயார் செய்திருப்பதாகவும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கார் மாடல்களையே இந்த பிளாட்பாரத்தின் வாயிலாக தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, எலெக்ட்ரிக் மற்றும் ஐசிஇ என இரண்டு விதமான வாகனங்களின் தயாரிப்பையும் ஆதரிக்கும் வகையிலேயே இந்த பிளாட்பாரத்தை ஹோண்டாய் தயார் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

எனவே வரும் நாட்களில் ஹோண்டா இந்த பிளாட்பாரத்தைப் பயன்படுத்தி குட்டி எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எலெக்ட்ரிக் கார்களை மட்டுமல்ல ஹைப்ரிட் வகை வாகனங்களையும் இந்த பிளாட்பாரத்தை பயன்படுத்தி ஹோண்டா தயார் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், செடான் மற்றும் எஸ்யூவி போன்ற கார் மாடல்களையும் இந்த பிளாட்பாரத்தின் வாயிலாக ஹோண்டா தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதுதவிர, எதிர்கால கார் மாடல்களை மேம்படுத்துவதையும் ஹோண்டா நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, இந்தியாவில் சரிந்து காணப்படும் ஹோண்டா கார்களின் விற்பனைக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டே இந்த புதிய பிளாட்பாரம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. ஒரு காலத்தில் விற்பனையில் முன்னணியில் இருந்த ஹோண்டா சிட்டி, இப்போது மாதத்திற்கு ஆயிரத்திற்கும் குறைவான யூனிட்டுகளே விற்பனையாகின்றன.
இதேபோல், ஆரம்பத்தில் விற்பனையில் சூடுபிடித்துக் காணப்பட்ட எலிவேட் எஸ்யூவியின் விற்பனையும் தற்போது மாதத்திற்கு இரண்டாயிரம் யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது. முன்னதாக இதே கார் மாடல் மாதம் ஒன்றிற்கு 4,500க்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மந்த நிலையையேச் சமாளிக்கும் முயற்சியில் தற்போது ஹோண்டா களமிறங்கி இருக்கின்றது.
அதேநேரத்தில், எலிவேட் மாடலுக்கு ஜப்பானில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் இருந்தே இந்த கார் மாடல் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அங்கு டபிள்யூஆர்-வி (WR-V) எனும் பெயரில் விற்கப்படுகின்றது. நிறுவனம் உலக சந்தையில் தன்னுடைய இருப்பை பலமாக்கிக் கொள்ளும் விதமாக டொயோட்டாவைபோல பல-பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை வழங்க இருக்கின்றது.
இதற்கான உற்பத்திகளையே அது விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. அதேவேளையில், நிறுவனம் 2040 ஆம் ஆண்டுக்குள் முழுக்க முழுக்க மின்சார வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யப் போவதாக திட்டவட்டமாக அறிவித்து இருக்கின்றது. இப்போதைய நிறுவனத்தின் சூழலை வைத்து பார்க்கையில் அது இந்த விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடனேயே செயல்படும் என தெரிகின்றது.
இதற்கு சான்றாக நிறுவனம் புதிய பிஎஃப்2 பிளாட்பாரம் உள்ளது. இந்த ஒற்றை தளத்தின் வாயிலாக பல பவர்டிரெய்ன்கள் வாகனங்களை தயாரிக்க முடியும். இந்த தளத்தில் தயாரிக்கப்படும் வாகனம் 2027 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக வெளியீடு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
முதல் வாகனமே மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட எஸ்யூவி ரக காராகதான் இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த வாகனம் முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் உலக சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
1.5 லிட்டர் எஞ்சின் மற்றும் ஹைபிரிட் ஆப்ஷனையும் இந்த கார் கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாகனம் இந்தியாவில் மட்டுமின்றி ஜப்பான் மற்றும் தாய்லாந்து உலக நாடுகள் பலவற்றிற்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த எஸ்யூவி ரக காரின் வெளியீட்டைத் தொடர்ந்து, அடுத்த தலைமுறை ஹோண்டா சிட்டி காரையும் இந்த தளத்தின் வாயிலாகவே தயார் செய்து ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த் கார் மாடல்கள் மட்டுமில்லைங்க இன்னும் பல கார் மாடல்கள் பிஎஃப்2 பிளாட்பாரத்தின்கீழ் எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் வாயிலாக ஹோண்டா இந்திய சந்தையில் தன்னுடைய இருப்பை புத்துயிர் பெற செய்யும் என்று நமப்படுகின்றது. ஆனால், என்ன மாதிரியான சவால்களை எல்லாம் ஹோண்டா சந்திக்க இருக்கின்றது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








