சுவிட்சர்லாந்து அழைத்து செல்லும் ஹோண்டா.. அதுமட்டுமா டெஸ்ட் செய்தாலே சர்ப்ரைஸ் பரிசு உண்டாம்...
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு சில சிறப்பு திட்டங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கின்றது. அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு "ஹோண்டா மேஜிகல் மான்சூன்" (Honda Magical Monsoon) என்ற பெயரில் ஒரு கவர்ச்சியான விளம்பர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ஜூலை 1 முதல் ஜூலை 31, 2024 வரை நடைபெறும் இந்த பிரச்சாரமானது, இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் ஹோண்டா கார்களை வாங்கும்போது கவர்ச்சிகரமான பலன்களையும், உத்தரவாதமான பரிசுகளையும் வழங்குகிறது.
இந்த பிரச்சாரத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஜூலை 2024 இல் தங்கள் கார்களை டெலிவரி பெறும் வாடிக்கையாளர்களால் சுவிட்சர்லாந்திற்கு செல்ல முடியும். ஒருவர் ஜோடியாக இந்த பயணத்தை மேற்கொள்ள முடியும். இந்த சலுகை கிடைக்கவில்லை என்றாலும் நிச்சய சலுகையாக ரூ. 75 ஆயிரத்திற்கான நிச்சய பரிசுகளை ஹோண்டா வழங்க இருப்பதாக உறுதியளித்துள்ளது.

காரை வாங்குபவர்களுக்கு மட்டுமல்ல காரை வாங்கும் நோக்கில் டெஸ்ட் டிரைவ் செய்ய வருபவர்களுக்கும் ஆச்சரிய பரிசுகளை வழங்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக வழங்கிக் கொண்டிருக்கும் சலுகையுடன் சேர்த்தே இந்த புதிய சலுகைகளையும் வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.
எனவே வரும் நாட்களில் ஹோண்டா கார்களின் விற்பனை மேலும் அதிகரிக்கக் கூடும் என நம்பப்படுகின்றது. பொதுவாக ஹோண்டா கார்கள் அதிக ஆயுட்காலம், நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கன திறன் ஆகியவற்றிற்கு பெயர்போனதாக உள்ளது. இந்த நிலையிலேயே சிறப்பு சலுகைகளை வழங்குவதிலும் முன்னோடி நிறுவனமாக மாறி இருக்கின்றது ஹோண்டா.
சுவிட்சர்லாந்து சுற்றுலாவிற்கான நபர்கள் குலக்கல் முறையிலேயே தேர்வு செய்யப்பட இருக்கின்றார்கள். இப்போதைய நிலவரப்படி எலிவேட் (Elevate), அமேஸ் (Amaze), சிட்டி (City), மற்றும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி (e:HEV) ஆகிய கார் மாடல்களே விற்பனையில் உள்ளன. இவற்றின் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டே சிறப்பு திட்டங்களை ஹோண்டா அறிவித்து இருக்கின்றது.
ஹோண்டா நிறுவனம் நீண்ட காலம் கழித்து விற்பனைக்குக் கொண்டு வந்த எஸ்யூவி ரக கார் மாடலான எலிவேட்-க்கு மிக சிறப்பான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது. இந்த எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ. 11.91 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
கவர்ச்சியான தோற்றம் மற்றும் மிக அதிக சிறப்பம்சங்களின் வாயிலாக இந்த கார் இந்தியர்களைக் கவர்ந்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல், நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான அமேஸ், சிட்டி (ஐந்தாம் தலைமுறை) மற்றும் சிட்டி இ:எச்இவி ஆகியவற்றிற்கும் நம் நாட்டவர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதில், அமேஸ் 7.92 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், சிட்டி ஐந்தாம் தலைமுறை 12.08 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும் மற்றும் சிட்டி இ:எச்இவி ரூ. 20.55 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்புகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் இந்தியர்களைக் கவரும் விதமாக அறிவித்திருக்கும் இந்த சலுகைகளுக்கு நம்ம ஊர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வாயிலாக நிறுவனத்தின் விற்பனை சதவீதமும் அடுத்து வரும் மாதத்தில் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, ஹோண்டாவின் சுவிட்சர்லாந்து டூர் திட்டமே பலரை கவரும் வகையில் அமைந்துள்ளது. அதுவும் அது ஜோடியாக சுற்றுலா அழைத்து செல்ல இருப்பதாக அறிவித்திருப்பதால், பழைய ஹோண்டா கார் பயனர்களையும் புதிய ஹோண்டா கார்களை வாங்கு தூண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








